Skip to main content

ஜெயலலிதா



பதினொரு வயது இருக்கலாம். எங்கள் ஊர்களில் எல்லாம் மண்ணெண்ணெய் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இரவு முழுதும் ஆறேழு படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கின்ற சீசன் அது. ஸ்பொன்சர்களுக்காகப் பழைய படங்களை முதலாவதாக ஏழு மணிக்கே போடவேண்டிய தேவை எமக்கு அப்போது இருந்தது. ஒருமுறை இரண்டு லீட்டர் எண்ணெய் இலவசமாகத் தந்தார் என்பதற்காக, அவர் சொல்லிப் போட்ட படம்தான் “எங்கிருந்தோ வந்தாள்”

ஹீரோ சிவாஜி. மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த படம். ஹீரோவுக்கு மனநிலை குழம்பிய சமயத்தில் அவரை எல்லோரும் கைவிட்டுவிட, ஹீரோயின் மாத்திரம் பரிவுகாட்டிப் பணிவிடை செய்வார். ஆனால் ஹீரோ குணமானதும் அவருக்கு நிகழ்ந்ததெல்லாம் மறந்துவிடும். தமிழில் இதுபோல் ஆயிரம் திரைப்படங்களும் நாவல்களும் வெளியாகிவிட்டன. “எங்கிருந்தோ வந்தாள்”தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்று நினைக்கிறேன்.
“எங்கிருந்தோ வந்தாள்” படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் உள்ள பாத்திரம் சிவாஜிக்கு. ஆனால் அடித்து ஆடியது என்னவோ அதில் ஹீரோயினாக நடித்த ஜெயலலிதா. வழமையாக ஜெயலலிதா எடுத்து நடிக்கும் பாத்திரங்களிலிருந்து சற்று வேறாக கொஞ்சம் அடக்கி வாசிக்கும் நடிப்பு. மிக இயல்பாகச் செய்திருப்பார். “நான் உன்னை அழைக்கவில்லை” என்று சுசீலாவில் குரலில் ஒரு பாடல் காட்சி உள்ளது. சிவாஜி உலகத்தில் உள்ள அத்தனை எக்ஸ்பிரஸனையும் ஒன்றாகப் பிழிந்து தள்ளுவார். ஜெயலலிதா சிம்பிளாக ஒரு flick. பந்து மைதானம் தாண்டிவிழும். பின்னாளில் “சுமதி என் சுந்தரி” படத்திலும் அப்படித்தான். நடிகை வேடம். ஆனால் மிக சப்டிலாக நடித்திருப்பார். “பொட்டுவைத்த முகமோ” பாடலில் தோன்றி நடித்த ஜெயலலிதாமீது காதல் கொள்ளாதவர்கள் எவரும் இலர். எக்காலத்திலும். 

எனக்கென்னவோ ஜெயலலிதா என்ற நடிகையை பல எம்.ஜி.ஆர் படங்களினால் இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. அவருடைய திறமை அவர் எம்ஜிஆர் தவிர்ந்த ஏனையோருடன் நடித்தபோதே வெளிப்பட்டது.

“இரு மாங்கனிபோல் இதழோரம்” என்ற பாடலைக் கணீரென்று பாடியிருப்பார் ஜெயலலிதா. பாடகியாகவே தனித்து ஜொலிக்கக்கூடிய அளவுக்கு குரல்வளம் கொண்டவர். சில பாடல்களுக்கிடையே அவர் குரல் கொடுத்ததுமுண்டு. “நான் என்றால் அது அவளும் நானும்” என்ற டிப்பிகல் எம்எஸ்வி மெலடியில் இடையிடையே ஜெயலலிதாவின் ஆங்கில சம்பாஷனைகள் இடம்பெறும். “கட்டிய கணவன், கட்டளைப் படியே.., காரிய மாச்சும் குணமுடையாள்” என்று சொல்ல அவர் “In thoughts, birds and bees!” என்பார். அந்த ஆங்கில சொலவடையின் அர்த்தம் புரிந்தால் ரசித்துப் புன்னகைக்கலாம். “புருஷனுக்கு அருகே, சரிசமமாக, அமர்ந்திடத் தயங்கும், பண்புடையாள்” என்று சற்று பயத்துடனேயே ஆண் சொல்ல “Ohh there he goes.., again” என்பார். “அவளொரு பாதி, நானொரு பாதி, என்பதுபோல நடப்பாளே.” எங்கையில் “The better half, than, the bitter half” என்பார். அப்போது அவருடைய எக்ஸ்ப்ரஷன் ... such a smart lady.

இவையெல்லாமே பதின்மங்களில் ஜெயலலிதாமீது எனக்கொரு சொப்ட்கோர்னரை உருவாக்கியிருக்கவேண்டும். போதாதற்கு 97ம் ஆண்டு "இருவர்" திரைப்படம் வெளியாகிறது. இருவரை எந்த முன்முடிபுகள் இல்லாமல் மீண்டுமொருமுறை பாருங்கள். இயல்பாகவும் நைச்சியமாகவும் ஜெயலலிதாவை கல்பனா பாத்திரம்மூலம் மணிரத்னம் செதுக்கியிருப்பார். ஓடும் ஜீப்பிலிருந்து ஆனந்தனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே குதித்துவிடுவார் கல்பனா. ஆனந்தனும் பதட்டத்துடன் தேடிவந்து நெருங்கையில் கல்பனாவின் கோபம் மறைந்து கொஞ்சம் காதல் எட்டிப்பார்க்கும். எல்லாமே calculated moves. எல்லாமே தெரிந்து செய்வது. நிஜ உலக ஜெயலலிதாவின் அத்தனை அடிகளும் அதிகாரத்தினை நோக்கி, அதிகாரத்தைத் தக்கவைக்க, அளந்து எடுத்து வைக்கப்பட்டவைதாம். அதுவும் வாஜ்பாய் அரசாங்கத்தை ஒரு டீபார்ட்டி மூலம் கவிழ்த்த சம்பவத்தை எவர் மறப்பார்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை நிறையவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. அவரின் அரசியல்வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆளுமை, தலைமைப் பண்புகள் பற்றி விமர்சனத்துடனான ஆய்வுசார் கண்ணோட்டங்கள் அவசியமானவை. அவருடைய சுயசரிதத்தை சசிகலா போன்றவர்கள் பிறர் உதவியுடன் முழு நேர்மையுடன் எழுதலாம். ஆனால் இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் சாத்தியமற்றவை. இக்கணத்தில் அவைபற்றிப் பேசத் தேவையுமில்லை.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நம்மோடு, நம்காலத்தில் கூட வாழ்ந்த ஒரு பொது ஆளுமை. இப்போது இல்லை என்னும்போது ஏதோ ஒன்று அடிவயிற்றைப் பிசைகிறது. விளக்கம் கொடுக்கமுடியவில்லை. அது எங்கோ ஒரு மூலையில் தனியோர்மத்துடன் வாழ்ந்து கழித்த காஸ்ட்ரோவுடைய மரணமாகட்டும். அல்லது லீகுவான்யூவாக இருக்கட்டும். நம் அயல் தேசத்தின் ஜெயலலிதாவாகட்டும். இவர்களோடு நெருங்கிப்பழகியதில்லை. ஆனால் பாதிக்கிறார்கள்.
இரவு வானத்தை அண்ணாந்து பார்க்கையில், சமயத்தில் நட்சத்திரங்கள் காணக்கிடைக்காதபோது ஒரு வெறுமை கிடைக்குமே. நட்சத்திரங்கள் எல்லாம் தொலைந்துவிட்டனவோ என்ற ஏக்கம் கணம் தோன்றி மறையும். நட்சத்திரங்களுக்கும் நமக்குந்தான் என்ன உறவு?

மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்.

சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரிகிலேன்.

அஞ்சலிகள்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக