Skip to main content

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!

 

சிலமாதங்களுக்கு முன்னர் எழுதிய ஹைக்கூ பதிவு காட்டில் நிலாவான கதை தனிக்கதை! ஆனாலும் ஆசை யாரை விட்டது. கவிதை வடிவங்களில் ஓரளவுக்கேனும் சுமாராக எழுதுவேன் என்று நம்புவது இந்த ஹைக்கூவை தான். கேதாவின் National Geographic website இல் வந்த படத்தை பார்த்தவுடன் இதற்கு பொருத்தமான கவிதை ஒன்று எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த படத்தின் மூடுக்கு வெண்பாவோ, ஐந்து வரி புதுக்கவிதையோ குழப்பிவிடும்! ஹைக்கூ தான் சரிவரும் என்று தோன்றியது.

ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவம். அதற்கென்று ஒரு வரையறை இருக்கிறது.

The essence of haiku is "cutting". This is often represented by the juxtaposition of two images or ideas and a cutting word between them, a kind of verbal punctuation mark which signals the moment of separation and colours the manner in which the juxtaposed elements are related.

எளிமையாக சொல்லுவதாக என்றால், இரண்டு படிமங்களை முதல் இரண்டு வரிகளிலும் சொல்லி, மூன்றாவது வரி அவற்றை தொடுக்கவேண்டும். அந்த தொடுப்பு, கவிதையை வேறு தளத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.  இதிலே எத்தனை சிலபல்கள்(syllables) எல்லாம் வேண்டும் என்றும் ஒரு ரூல் இருக்கிறது. அது தமிழில் எழுதும்போது பொருந்தாது என்பதால் ஹைக்கூவின் ஆதாரமான விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

இந்த படத்துக்கு ஹைக்கூ எழுதுவது சவாலான விஷயம். படம் ஏற்கனவே பல கதைகள் சொல்லுகிறது. அந்த கருவை சிதைத்துவிட கூடாது. தூண்டில் போடும் சிறுவனும், நீரில் மின்னும் நட்சத்திரங்களும் தான் சாரம். அதை தொடுக்கவேண்டும். தொடுத்துப்பார்த்த முயற்சி தான் இது!

IMG_9298

 

தூண்டில் வீசும் சிறுவன்.

விண்மீன் எல்லாம் கடலில் விழுந்து

மண்புழு தேடி அலைகிறது!

 

 

 

 

முதல் இரண்டு வரிகளும் படிமங்கள். சட்டத்தை இன்னமுமே மீறவில்லை. மூன்றாவது தான் அந்த கோர்ப்பு. ஏன் விண்மீன்கள் கடலில் விழவேண்டும்? ஐயோ பாவம், இந்த சிறுவன் நீண்ட நேரமாக மீனுக்கு காத்திருக்கிறானே! ஒரு வெளிச்சத்தை கொடுத்து பார்ப்போமே! என்று கடலில் விழுகிறது. விழுந்தது அப்படியே கிடக்கவேண்டியது தானே? இல்லை. அதற்கு அப்பாலே சென்று, அட நாமும் மீன் தானே, அந்த தூண்டிலில் போய் நாமாகவே மாட்டிகொள்வோமா? அப்போது மீன் மாட்டியது என்று அவன் முகத்தில் சின்ன சந்தொஷத்தையாவது பார்க்கலாமே என்ற ஆர்வத்தில், “எங்கே அந்த மண்புழு” என்று அவை தேடி தேடி அலைகின்றனவாம்.

உயர்திணை நிகழ்ச்சியில் கோகிலா மகேந்திரன் கேதாவின் “காற்றில் ஒடிந்த தளிர்கள்” என்ற சிறுகதையை வெகுவாக சிலாகித்து, ஒரு கவிதை என்பது காலம் கடந்து, சொல்லும் விஷயம் கடந்து, மேலும் மேலும் பலதை சொல்லவேண்டும் என்றார். இப்போது இங்கே எழுதிய ஹைக்கூ வேறு என்ன விஷயம் சொல்லுகிறது? இது கூட உருவகம் தான். யோசித்துப்பாருங்கள். இந்த விண்மீன்கள், தங்களை மீன்களாக காட்டி ஏமாற்றி, சிவனே என்று மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் சிறுவனை தூண்டி விட்டு,  அவனுக்கு மெல்லிய சந்தோஷத்தை கொடுக்க முயன்று, இறுதியில் அவனுக்கு ஏமாற்றம் தானே கிடைக்கும்? தூரத்தில் இருந்து மின்னுவதற்கு மட்டுமே லாயக்கான விண்மீன்களுக்கு எதற்கு இந்த விபரீத ஆசை? ஏன் இந்த மோசம்? இந்த உருவகத்தை நம்முடைய வெளிநாட்டு தமிழர்களோடு பொருத்தினால்… ப்ச்ச் .. அந்த சிறுவனை மீன் பிடிக்கவிடுங்கள் ப்ளீஸ்!

 

இதே கேதாவின் இன்னுமொரு படத்துக்கு ஒரு ஹைக்கூ முயற்சி.

 

Jaffna fort 093

 

சூரியன் மறையும் சமயம்

காத்திருக்கும் காவலரண்

உள்ளே சீருடை!

 

 


நானே எழுதி நானே ரசிக்கும் வங்குரோத்து வேலையை திரும்பவும் செய்யப்போவதில்லை! ஆனால் சீருடை யார் யாரெல்லாம் அணிவார்கள்?.

 

பிற்குறிப்பு : முதலில் ஹைக்கூவில் ஆரம்பத்தில் “தூண்டில் போடும் சிறுவன்” என்றே எழுதினேன். கேதா தான் அதை “வீசும்” என்று மாற்றினால் கொஞ்சம் சந்தம் கூட வரும் என்றான். That’s what called attention to details!

Comments

  1. சிந்திக்கத் தூண்டும் கவிதைகளாக இருப்பதே ஹைக்கூ
    கவிதைகளின் சிறப்பு

    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விண்மீன்கள்
    வானமிறங்கி ஓடுகின்றன
    தூண்டில் சிறுவன்.

    *****

    விண்மீன்களுக்குள்
    சண்டை நடக்கின்றது
    எனக்கான தூண்டில்.

    *****

    சிறுவன்
    தூண்டில் வீசுகிறான்
    வானத்தில் அமாவாசை!

    *****

    விண்மீன்கள்
    ஐஸ்பாய் ஆடுகின்றன
    தூண்டிலுடன்.

    *****

    விண்மீனுக்கும் புழுவுக்கும்
    வாழ்க்கைப் போராட்டம்
    சிறுவனின் ஆசை.


    அடுத்த படத்திற்கு....




    மீண்டும் சூரியன்
    இன்று
    வேறொரு நாள்!

    *****

    வர முடியாது
    யாரும்
    தொடுவானம் இறங்குகிறது.

    *****

    செவ்வாடை அகன்றதும்
    சீருடை தரிக்கிறது
    அரண்!


    ச்சும்மா..நானும் சீருடை போட்டுப் பார்க்க முயற்சித்தேன். அவ்ளோதான்!
    :)

    ReplyDelete
  3. கவிதை எழுதுவதற்கே நல்ல திறமை வேணும், அதிலேயும் ஹைக்கூ எழுதணும்னா சொல்லவே வேணாம்.!

    ReplyDelete
  4. சீருடை அணிபவர்கள் பள்ளி மாணவர்கள்,போலீஸ்,ராணுவம் ,வக்கீல்கள் இன்னும் பலதரப்பட்ட மக்கள் .இவர்கள் அனைவரும் காலையில் பணிக்குச் செல்லும்போது சீருடை அணிந்து பணிக்கு செல்வதும்,பின்பு மாலை வேலையில் சூரியன் அஸ்தமமிக்கும் பொழுது வீடு திரும்பி சீருடை களைந்து,தங்களுக்குப் பிடித்த உடை உடுத்துவது இயல்பு .

    தன் சொந்த வீட்டில் மட்டும்தான் ,ஒருவன் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறான் ;வீட்டை விட்டு வெளியே சென்றால் அவனுக்கு சீருடை என்ற பாதுகாப்புக் கவசம் தேவைப்படுகிறது ;இரவு நேரத்தில் மட்டும்தான் மனிதன் சுதந்திரம் உடையவனாகவும்,இயல்பானவனாகவும் வாழ்கிறான் ; ,பகல் நேரங்களில் தன்னுடைய சுயத்தை இழந்து மற்றவர்களுக்காக,வேடமணிந்து வேடதாரியாக வாழ்கிறான் என்பதாகப் பொருள் கொள்ளலாம் .

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  6. நன்றி ரமணி!

    ReplyDelete
  7. நன்றி ராஜு

    //விண்மீனுக்கும் புழுவுக்கும்
    வாழ்க்கைப் போராட்டம்
    சிறுவனின் ஆசை.//

    அழகு. ரெண்டாவது வரி படிமத்திலிருந்து கொஞ்சமே தவறுகிறதோ?.. திருத்தினால் அமோகமாக வரும் ... அருமை ராஜூ

    //செவ்வாடை அகன்றதும்
    சீருடை தரிக்கிறது
    அரண்!//
    இதில் இருக்கும் அரசியல் எனக்கு புரிகிறது. வித்தியாசமான பார்வை ராஜு.

    நன்றி உங்கள் முயற்சிகளுக்கு .. இவை இந்த பதிவை மேலும் பலப்படுத்துகிறது.

    ReplyDelete
  8. வரலாற்று சுவடுகள் .. ஒரு முயற்சி பண்ணி பார்க்கவேண்டியது தானே.

    ReplyDelete
  9. வாங்க முருகேசன்

    உங்கள் பார்வையும் அழகு ... என்னுடைய ஹைகூவில் ஒரு சம்பவம் இருக்கிறது. அநேகமான பாலியல் வல்லுறவுகள் ஈழத்தில் காவலரண்களில் இராணுவத்தால் சத்தம் போடாமல் நடைபெற்றன .. பெறுகின்றன .. அதிலும் சிறுமியர் துஷ்பிரயோகம் கொஞ்ச நஞ்சமில்லை ... "உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்" என்ற சிறுகதை மூலமும் இது தான்.

    ReplyDelete
  10. நன்றி கவி அழகன்!

    ReplyDelete
  11. // That’s what called attention to details!//

    :) ofcourse

    ReplyDelete
  12. சூரியன் மறையும் சமயம்
    ''கிருஷாந்தி'' பூக்களும் மறையும்.......

    ''காவலனை'' தேடி
    காத்திருக்கும் காவலரன்

    உள்ளே சீருடை
    வெளியே பலருடை

    ReplyDelete
  13. நன்றி சீனி!

    ReplyDelete
  14. நன்றி மயிலன்
    //:) ofcourse//

    :)

    ReplyDelete
  15. வாங்க கீதா

    ஆகா ..அழகு .. நாங் அப்பவே படிச்சு படிச்சு சொன்னன் .. ஒரு blog ஆரம்பிச்சு எழுத தொடங்குங்க ..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட