Skip to main content

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

நாளைக்கு விடுமுறை.
34 செல்சியஸ் வெக்கை.
வெறிச்சோடிய கார் பார்க்குகள்.
வழமைக்கு மாறான கலகலப்பு.
புதியவர்கள் கூட
நத்தாருக்கு என்ன ப்ளான்?
ஷாப்பிங் முடிஞ்சுதா?
விசாரித்தார்கள்.
ரயிலில் ஒரு சிறுமி
லிண்டொர் தந்தாள்.
ஹாப்பி கிரிஸ்மஸ் என்றேன்.
மெரி கிரிஸ்மஸ் மேட் என்றாள்.
பார்ப்பதை மறைத்து குளிர் கண்ணாடிகள்.
பருவங்கள் காட்டும் உள்ளாடைகள்.
இராமன்கள் கூட இராவணராய்.
சில இராவணர் காமுற்றனர்.
பலர் நாணி நிலம் கிளைந்திட்டனர்.
எங்குமே கலகலப்பு.
எட்டு மணிக்கு வேலை வந்து
அரை மணித்தியாலம் சள்ளடித்து
பத்து மணிக்கு பியர் குடித்து
பதினொன்றுக்கு கட்டி கொஞ்சி
ஹாய் சொல்லி
மதியத்துக்கு வீடு செல்ல
அனைவருமே தயாரானோம்.
உங்கள் வீட்டில் கிறிஸ்மசுக்கு மரம் வச்சாச்சா?
என்றவளிடம்
பொங்கலுக்கு மட்டும் தான் பானை வைப்போம்
என்றேன்.
எங்களுக்கு அதுவே மங்கள விழா.
பானைக்கு மஞ்சள் இலையும்
மாட்டு சாணி, கல்லடுப்பும்
வெடியும் வாங்கும் உற்சாகம்
கிறிஸ்மஸில் வருது இல்ல.
பறவைகள் உயரபறந்தாலும்
வானம் அவைக்கு சொந்தமில்லை.
கூழக்கடாக்களுக்கு
நெடுந்தீவு சொந்தமில்லை.
ஆனாலும் சிறகு விரித்து,
பனை வடலியில் கிடப்பதை
பாதுகாப்பாய் உணர்கிறேன்.
கடல் கரையில் கிடக்கும் மீன்
கண்ணில் நீரை வார்க்குது.
பனி கொட்டி மூடின பயம்
உள் நெஞ்சில் உறைந்து கிடக்கு.
ஊரிலே இன்னும் பனி கொட்டுதா?
பதில் வேண்டாம்.
அங்கே கொட்டுது என்ற எண்ணம்
எனக்கு வெம்மையை தருது.
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

Comments

  1. Although we are in other contenants we thing about our bith place. It is very painful.

    siva

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?