Skip to main content

ஆக்காட்டி நேர்காணல் - 3



ஆங்கில இலக்கியங்களை நான் பெரிதாக வாசித்தது கிடையாது. ஆனால் அதன் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அந்த தமிழ் மொழி பெயர்ப்புகளை எழுத்தாளர்கள் அல்லாத ஆங்கிலம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களே எழுதியிருப்பார்கள். அவர்களின் எழுத்து லாவகம் சாதாரணமாகத்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ராஜேஸ்குமாரின் எழுத்துக்களை விடவும், ரமணிசந்திரனின் எழுத்துக்களை விடவும் அயர்ச்சி தரக்கூடிய எழுத்துக்கள் தான் அவை. ஆனால் படைப்பை வாசித்து முடித்த பின்பு நல்லதொரு அனுபவத்தை பெறக்கூடியவாறாக உள்ளது. ஒரு திரைப்படத்தினை பார்த்து முடித்தவொரு உணர்வு நமக்குள் ஏற்படுகின்றது. ஆனால் தமிழில் நானறிந்து எந்தவொரு இலக்கியமும் அவ்வாறானதொரு உணர்வினை ஏற்படுத்தியதில்லை. நீங்கள் தமிழ் இலக்கியங்களை மாத்திரமல்லாது, ஆங்கில இலக்கியங்களையும் பெருமளவு வாசித்து வருகின்றீர்கள். மாறுபட்ட உணர்வுகளை இலக்கியங்கள் ஏற்படுத்துகின்றனவா?அல்லது அவ்விலக்கியங்களை எழுதிய எழுத்தாளன் ஏற்படுத்துகின்றானா?


ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொரு தளம். ஒவ்வொரு உலகம். ஆங்கில இலக்கியம் வாசிக்கையில் நாம் உருவாக்குகின்ற உலகமும் தமிழ் இலக்கியம் உருவாக்கும் உலகமும் வேறுபட்டேயிருக்கும். கதை மாந்தர்களும் வேறுபட்டேயிருப்பர். மற்றும்படி அனுபவங்களை எல்லா இலக்கியங்களுமே கொடுத்திருக்கின்றன.

ஜூஹும்பா லாகிரி எழுதிய இரண்டு நாவல்களும் சிறுகதைத்தொகுப்பும் ஆளையே அடித்துப்போடும். ஆகிமிஸ்ட் அப்படி. நோட்ஸ் புரம் அண்டர்கிரவுண்ட் அப்படி. காலித் ஹொசய்னியின் நாவல்கள் வாசித்தால் இப்படியெல்லாம் தமிழில் எழுதமாட்டோமா என்று ஏங்கவைக்கும். ஜோர்ஜ் ஒர்வல் மாதிரி சட்டயரை நாங்கள் எங்கே எழுதுவது. 

ஆங்கில வாசிப்பின் வசதி எதுவென்றால், ஒரு சோபா, ஒரு தலையணையில் உலகம் முழுதும் சுற்றி வாழ்ந்துவிடும் அனுபவத்தை அது கொடுக்கும்.

தமிழ் வாசிப்பு நிறைய மனிதர்களோடு பழகும் அனுபவத்தை கொடுக்கிறது . கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் எழுதப்பட்டது இங்கேதான். கோபல்லகிராமம் இங்கேதான். கடல்கோட்டை இங்கேதான். கண்மணியாள்காதை இங்கேதான். ஒவ்வொரு கதையும் நடந்த களம் மிகப்பரிச்சயமான நம்மூர் மண்தான். ஆனால் மனிதர்களும் சொல்லும் வாழ்க்கையும் வேறு. பொன்னியின்செல்வன் கொடுத்த உணர்வை எப்படி விவரிப்பது? நிறைய வேண்டாம். கம்பராமாயணமோ, சங்க இலக்கியமோ, பொழிப்புரையோடு வாசிக்கத்தொடங்குங்கள். நம்மாட்கள் மிரட்டியிருக்கிறார்கள். “ஒன்றே எனின் ஒன்றேயாம்” என்று ஒரு கம்பராமாயணப்பாடல் மொழி பெயர்க்கவேமுடியாத ஆழமான உணர்வுகளை கொடுக்கும். தமிழ் படித்தே அதனை வாசிக்கமுடியும். முன்முடிபுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு களத்தில் இறங்கினால் அவற்றின் முழுப்பரிமாணமும் விரியத்தொடங்கும்.

ஆக ஆங்கிலம், தமிழ் எனற பிரிவினைகளில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை. சொல்லப்போனால் எல்லா மொழிகளிலும் படைப்புகள் குவிந்துகிடக்கின்றன. நமக்குத்தெரிந்தது இந்த இரண்டுமொழிகளும் என்பது நம் துரதிர்ஷடம். மடல் தூவா என்ற சிங்கள நாவல், சிறுவயதில் வாசித்தது. அதில் வருகின்ற உப்பாலியொடு பல நாட்கள் வாழைத் தோட்டங்களில் அலைந்திருக்கிறேன். ஆனால் அதை வாசித்தது ஆங்கில இலக்கிய பாடமாக. அதுதான் ஆங்கிலமொழியின் சிறப்பு. நிறைய மொழிபெயர்ப்புகள் அங்கே இருக்கின்றன. தோஸ்தாவஸ்கி, போலா கோயேலா என்று அத்தனை பேரின் இலக்கியங்களும் அங்கே கிடைக்கின்றன. அவ்வளவு ஏன், நான் வாசித்த ஷோபாசக்தியின் முதல் புத்தகம் Traitor ஐ ஆங்கிலத்திலேயே (டெல்லி விமானநிலைய புத்தகக்கடையில் இருந்தது) வாசித்தேன். பின்னர்தான் தமிழில் அவர் நூலகள் என் கைக்கு எட்டியது.

தமிழில் அதிகம் எழுதப்படாத பல நூல் வடிவங்களும்(Genre) ஆங்கிலத்தில் இருக்கின்றன. முக்கியமாக ஜனரஞ்சக கணித, விஞ்ஞான, பொருளாதார நூல்கள். குறிப்பாக Popular Science மற்றும் பெரியவர்களுக்கான Fantasy நூல்களை வாசிப்பதற்கு ஆங்கிலத்தை விட்டால் வேறு வழியில்லை.

சைமன்சிங் என்று Popular Science புத்தகம் எழுதுவதில் ஒரு கிங் இருக்கிறார். அவரின் அத்தனை புத்தகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடிக்கலாம். Fermat's Last Theorem என்ற ஒரு புத்தகம். கணித நிறுவல் ஒன்றின் வரலாற்றை திரில்லர்மாதிரி விறுவிறுப்பாக எழுதியிருப்பார். லோங்கிடியூட் என்று ஒன்று, நெட்டாங்குகளை எப்படி கணித்தார்கள் என்கின்ற வரலாறு சொல்லும் புத்தகம். அப்படியொரு ஓட்டம். வோல்டர் ஐசக்ஸன் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கிறார். அதனை ஒரு எட்டாம் வகுப்பு கெட்டிக்கார மாணவன் படித்தால் அவன் வாழ்க்கையே மாற்றிவிடும். இப்படியெல்லாம் தமிழில் வருவதே இல்லையெனலாம். எழுதினாலும் இது இலக்கியம் இல்லை என்று எழுதியவனின் கன்னத்தில் அறைவோம். ஹார்ப்பர் லீ எழுதிய 'To kill a mockingbird', மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்ட நாவல். நாங்கள் அதனை சிறுவர் இலக்கியம் என்று சொல்லி புறம் தள்ளுவோம். 

நாங்கள் இலக்கியத்துக்கு என்று பத்தடிக்கு பத்தடி பள்ளம் தோண்டி உள்ளேயே உட்கார்ந்துவிட்டோம். பள்ளிக்கூட மாணவன்கூட, வாசிக்கிறானோ இல்லையோ, இலக்கியத்தை அளவிட அடிமட்டத்தோடுஅலைகிறான். சிலர் விமர்சனம் எழுதிவைத்துவிட்டே புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். எல்லா விமர்சகர்களையும் பிடித்து சிறையுள் போட்டு “வாசியுங்கடா” என்று பத்து வருடம் உள்ளே தள்ளினால்தான் நாம் உருப்படுவோம்.

டக்ளஸ் அடம்ஸ் எழுதியவை ஒரு விஞ்ஞான தலைமுறையையே உருவாக்கியது. இன்றைக்கும் அவர் ஒரு கல்ட் பிகர். சில வாரங்களுக்கு முன்னர் இறந்தாரே டெரி பிரச்சட். ஒரு பிரபஞ்சத்தையே சிருஷ்டித்து புகுந்து விளையாடியிருப்பார். தமிழில் அது இல்லை என்பது பெரும்குறை. சுஜாதா கொஞ்சம் முயன்றார். எண்டமூரி முயன்றார். இப்போது எம். ஜீ. சுரேஷ் எழுதுகிறார். ஆனால் படிக்க ஆள் இல்லை. கொண்டாடவும் ஆள் இல்லை. அடிப்படையில் தமிழ் கலாச்சாரமும் அவ்வகை எழுத்துகளுக்கு இடம் கொடுக்காது. எங்களுக்கு கடும்தமிழில் புரியாமல் புனைந்தால்தான் இலக்கியம். அல்லது பிழிய பிழிய நனைவிடை தோயவேண்டும். வாழ்க்கையை சொல்லும் குடும்பக்கதை எழுதவேண்டும். புருஷன் காரனுக்கு எப்படியும் ஒரு வெளித்தொடர்பு இருக்கும். சுத்தம். ஒன்றிரண்டு ஒகே. ஒவ்வொருநாளும் புட்டும் சம்பலும் என்றால் செமியாக்குத்து வந்து தொலைத்துவிடும். 

ஆக தமிழில் அபரிமிதமான இலக்கியங்கள் இருந்தாலும் அவை ஒருவித ஸ்டீரியோடைப்புக்குள் சிக்கிவிட்டனவோ என்று யோசிக்கத்தோன்றுகிறது. என்னைக்கேட்டால், நிறைய வித்தியாசமாக வாசிப்பதற்கு பல்லைக்கடித்துக்கொண்டு ஆங்கிலம் படிக்கவேண்டும். அது அவ்வளவு சிரமுமில்லை. சேட்டன் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கலாம். மிக இலகுவாக புரியும். பின்னர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரலாம். கொஞ்சம் கொஞ்சமாக அதற்குள் இறங்க அடர்ந்த காடே விரியும். எங்கள் மனமும்தான். அதன்பிறகு தமிழுக்குள் எழுத உட்கார்ந்தால் புதுத்தளங்களை தொடங்கலாம். 

ஏ.ஆர். ரகுமான் இசையில் செய்ததுபோல.

தொடரும்


Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக