Skip to main content

ஆக்காட்டி நேர்காணல் - 4


ஜாக் ஓடியா. ஒரு பிரான்ஸ் தேசத்து மனிதர். பிரஞ்சு மொழியை தாய்மொழியாக் கொண்டவர். வேறு இனம், வேறு மதம். இத்தனை தூரமான ஒரு மனிதர் இலங்கைத் தமிழ் அகதியொருவரின் அகச் சிக்கலைப் பற்றி படமெடுத்து கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான தங்கப் பனை விருதினையும் வென்றிருக்கின்றார். ஆனால் இலங்கையைச் சேர்ந்த எங்களின் படைப்புகள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. சினிமாத்துறைக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்துறைக்கும் இது பொருந்தும். ஏன் இவ்வாறானதொரு நிலைமை? எங்களால் சர்வதேச விருதினை வென்றிடும் அளவிற்கு இலக்கியமோ அல்லது சினிமாவோ எடுக்க முடியாதா?

முதலில் ஜாக் ஓடியா வென்றது எங்களைப் பொறுத்தவரையிலே ஒரு சர்வதேச விருதே ஒழிய ஒரு பிரான்சு படைப்பாளியைப் பொறுத்தவரையில் அது உள்நாட்டு விருதே. அதே படத்தை ஒரு இலங்கையர் எடுத்திருந்தால் கான்ஸ் விருது கிடைத்திருக்குமா என்பதும் கேள்விக்குறியே. இந்தப்படம் ஒஸ்காரிலோ, பாப்டாவிலோ கவனிக்கப்பட்டால் அப்போது பிரஞ்சியர்களுக்கு அது சர்வதேச விருது. ஓடியாவின் திறமையையோ தகுதியையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் விருதுக்குரிய பின்னணிகளையும் நாம் ஆராயவேண்டியே இருக்கிறது. இதற்குமேல் படத்தைப்பற்றி கருத்துச்சொல்ல ஏதுமில்லை. படம் திரையரங்குகளுக்கு வரட்டும்.



நம்மாட்களில் சர்வதேச தரத்தில் படமெடுக்க ஆட்கள் இல்லையா என்றால், பதில் நாம் இன்னும் தயாரில்லை. நீண்ட வரலாற்றைக்கொண்ட பிரஞ்சு திரைத்துறையோடு நம்மை ஒப்பிடக்கூடாது. நம் திரைப்படத்துறை இப்போதுதான் நடை பயில்கிறது. அது ஒரளவுக்கு நிமிர்ந்து ஓடப்பழகும்வரை கூட்டு முயற்சிகளே அங்கீகாரங்களை கொண்டுவரும். அவ்வகை கூட்டு முயற்சிகள் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை. அங்கே எதைச்செய்தாலும் ஒருவன் அருவாள் தூக்குவதால் ஒரு நேர்மையான ஈழத்துப்படம் அங்கிருந்து உருவாவதை எதிர்பார்க்கமுடியாது. அப்படியே தப்பித்தவறி வந்தாலும் சென்சர்க்காரன் சீவிவிடுவான். நாங்கள் சமரசமில்லாத கூட்டு முயற்சிகளை ஒரளவுக்கு முன்னேறியிருக்கும் சிங்கள திரைப்படத்துறையோடு செய்யலாம். புலம்பெயர்ந்தவர்கள், மேலைத்தேயரோடு சேர்ந்து செய்யலாம். அதற்கு நல்ல ஸ்கிரிப்ட், லொபியிங், தொடர்புகள் வேண்டும். டானி போயல் "Q and A" நாவலை வாசித்து ஸ்லம்டோக் எடுத்ததுபோல, யார் கண்டார் நாளை "Still Counting The Dead" வாசித்து ஸ்கிரிப்ட் எழுதினாலும் எழுதலாம். “தீபன்” இதற்கான முதல்படியாக அமையட்டும்.

தற்போதுள்ள ஈழத்தோடு தொடர்புபட்ட படைப்பாளிகளுள் கண்ணன் அருணாசலம் எமக்கு சர்வதேச விருதுகளை வென்று தருவார் என்று நம்புகிறேன். சமரசங்கள் இன்றி உட்பொருள், தரம், செய்நேர்த்தியை மாத்திரமே நம்பி எடுக்கப்படும் ஆவணப்படங்கள் அவருடையவை. அவர் அல்ஜசீரா, ஐஆம் மூலம் வெளியிட்ட படைப்புக்கள் உலகத்தரமுடையவை. ஆனால் அவரை நம் தமிழ் மீடியாக்கள் எவையும் சீண்டுவதில்லை. வழமைபோல அவருக்கு ஒரு சர்வதேச விருது கிடைத்தபின்னரே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். தலை விதி.

இலக்கியத்தைப்பொறுத்தவரையில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் திறமை மட்டும் விருது வாங்க போதுமானதல்ல. தொடர்புகள் வேண்டும். முதலில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடையே உருவாகவேண்டும். சோ. பத்மநாதன் மாத்திரம் போதாது. அடுத்தது விருதுக்குழுவுக்கு கொண்டுபோகுமளவுக்கு லொபி பண்ணக்கூடிய பதிப்பாளர்கள் கிடைக்கவேண்டும். நியூயோர்க்டைம்ஸ், ஏஜ் போன்ற பத்திரிகைகளில் பத்தி வரவேண்டும். போலா கோயல்லாவின் ஆகிமிஸ்ட் நாவல் முதலில் வேலைக்காகாது என்று ஸ்பானிய மொழியிலேயே பதிப்பிக்க தயங்கினார்கள். ஆனால் வெளியானபின்னர் அது ஸ்பானிய மொழியில் சக்கைபோடு போட்டது. பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஒரு பெரிய பதிப்பு நிறுவனம் அவரை தொடர்புகொண்டது. அதற்குப்பிறகு என்ன நிகழ்ந்தது என்பது வரலாறு.

இங்கே தமிழில் எந்த ஆசிரியரின் புத்தகம் சக்கை போடுகிறது? ஆயிரம் பிரதிகள் விற்பதற்குள் நாக்கு தள்ளிவிடும். எழுத்தாளர்களே ஆங்கிலத்தில் எழுதி பதிப்பாளரை அணுகினால்தான் உண்டு. நம் மத்தியிலிருந்து ஒரு ஆகிமிஸ்ட் உருவாக சாத்தியமே இல்லை. சிலவேளை ஒரு எழுத்தாளர் ஆங்கிலத்திலேயே மூல நூலை எழுதினால் ஒரு காலித் ஹொசெய்னியாக சாத்தியம் உண்டு. குறைந்தபட்சம் சேட்டன் பகத், அரவிந் ஆடிகோவாக கூட வரலாம். புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையிடமிருந்து ஜூகும்பா லாகிரிமாதிரி ஒரு எழுத்தாளர் உருவாகலாம். 

அதற்கு நாங்கள் தொடர்ந்து இயங்கவேண்டும். அடுத்த தலைமுறை பேஸ்புக்கின் குட்டி சைஸ் ஸ்டேடஸ் கவர்ச்சிகளுக்குள்ளும் லைக்குகளுக்குள்ளும் சிக்காமல் சீரியசாக நாவல், சிறுகதை என்று எழுதவேண்டும். அப்படி எழுதுபவர்களுக்கு நாங்களும் நிறுவனரீதியான சப்போர்டுகளை கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு கிரவுட்சோர்சிங் போன்ற கட்டமைப்புகளை நம் படைப்புக்களுக்காக உருவாக்கலாம். எழுநா ஒரளவுக்கு அதனை செய்தது. நின்று பிடிக்கமுடியவில்லை. அடிப்படை பிரச்சனை வாசிப்பு எண்ணிக்கைதான். End of the day, வாசகன் இல்லாவிட்டால் படைப்புகள் எல்லாம் எழுத்தாளனின் டயரியாகிவிடும். 

Comments

  1. ஆக்காட்டி இதழின் அட்டை படத்தில் ஷோபாசக்தி இருப்பதை பார்த்தேன், எனவே அதில் "தீபன்" பற்றி ஏதாவது இருக்கிறதா என்று தெரியாது. நான் ஷோபாசக்தியின் பேட்டியை YouTubeல் பார்த்தேன், அதில் அவர் இயக்குநர் பிரான்ஸில் வசிக்கும் அகதிகளை பின்னணியாக கொண்டு ஒரு காதல் கதையை எடுக்க விரும்பி அதற்காக ஈழத்து அகதிகளை தெரிவு செய்ததாக சொல்லியிருக்கிறார், அதனால் ஈழ மண் சார்ந்த விஷயங்கள் எந்த அளவு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பது நீங்கள் சொன்னபடி படம் வெளிவந்தபின்தான் தெரியும்.

    ReplyDelete
  2. ஜேகே அண்ணாவின் நேர்காணலில் பல படைப்பாளிகளின் நேர்காணல்கள் உள்ளடங்கியிருக்கின்றனவா என்று தோன்றுமளவிற்கு அருமையான பகிர்வு அண்ணா....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...