Skip to main content

உதயன் நேர்காணல்

 

1

உங்களைப்பற்றிய சுருக்கமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்?

பெயர் ஜெயக்குமரன். இடையிடையே போரியல் இடப்பெயர்வுகள் நீங்கலாக, பிறந்து வளர்ந்தது முழுவதும் திருநெல்வேலியில். படித்தது யாழ் பரியோவான் கல்லூரியில். பின்னர் உயர்கல்வியை மொறட்டுவை மற்றும் RMIT பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தேன். தற்போது மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகிறேன். தொழில் நிமித்தமாக கொழும்பு, சிங்கப்பூர் நகரங்களில் வசித்து தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் வாழ்ந்து வருகிறேன்.

படைப்புத்துறைக்குள் உங்கள் அடியெடுத்து வைப்பு எவ்வாறு நிகழ்ந்தது?

அக்கா சொல்லும் சம்பவமொன்று. எனக்கு இரண்டு வயதாக இருக்கலாம். அக்கா என்னை மடியில் போட்டு கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். "ஒரு ஊரிலே ஒரு இராஜகுமாரி இருந்தாள், அவளின் பெயர்.." என்கையில் நான் உடனே "சாந்தி" என்றிருக்கிறேன். சாந்தியக்கா பக்கத்துவீட்டுக்காரி!

பாலர் பாடசாலையில் சம்பந்தர் ஞானப்பால் குடித்த பாடத்தை படித்த நாளன்று நானும் நாலு வரி உல்டா "தோடுடைய செவியன்" எழுதி அம்மாவிடம் "கிழி" வாங்கியிருக்கிறேன். இதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுகள்.

கதை என்று உட்கார்ந்து எழுதி மற்றவர்களும் வாசித்தது பதினோரு வயதில் நிகழ்ந்தது. பதின்மூன்று வயதில் நண்பர்களோடு சேர்ந்து ஒரு புத்தகம் வெளியிட எடுத்த முயற்சி கையெழுத்துப்பிரதியொடு கருகிப்போனது. எழுத்து வீட்டிலே தீண்டத்தகாத வஸ்துவாக பார்க்கப்பட்டது. அந்நாட்களில் கவிதை கிறுக்கப்பட்ட தாள்கள் கோழிப்பீ அள்ளவே பயன்பட்டன.

பல்கலைக்கழக காலத்திலும் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். கொஞ்சம் சீரியசாக எழுத ஆரம்பித்தது இணையத்தில்தான். ஆரம்பத்தில் www.iamjk.com என்ற இணையத் தளத்தில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். அங்கே ஓரளவுக்கு உருப்படியான சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். கடந்த நான்கு வருடங்களாக படலை (www.padalay.com) இணையத்தளத்தில் தமிழில் எழுதி வருகிறேன்.

படைப்புலகில் உங்கள் பிரசவங்களும் அவற்றுக்கான பின்னணிகளும்?

"கந்தசாமியும் கலக்சியும்", "அமுதவாயன்", "வெள்ளி" என மூன்று நாவல்கள், நாற்பது சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று படலை என்னை எழுத்து வசமாக்கி கட்டிப்போட்டிருக்கிறது. டக்லஸ் அடம்ஸின் நாவல்களை வாசித்த தாக்கத்தில் எழுதிய விஞ்ஞான சமூகப் புனைவே “கந்தசாமியும் கலக்ஸியும்”. சங்க கால வாழ்வை வைத்து எழுதப்பட்ட நாவல் "வெள்ளி". எக்சிஸ்டன்சலிசத்தை மையமாக வைத்து எழுதியது “அமுதவாயன்”. வாதங்கள், வாதவழுக்களை விளக்கவென எழுதப்பட்ட தொடர் “நாவலோ நாவல்”. இப்படி இணையத்தில் பல பரிசோதனை முயற்சிகளை தயக்கமின்றி செய்ய முடிகிறது. அச்சில் வெளியான என் முதல் புத்தகம் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்".

புலம்பெயர் வாழ்வு உங்கள் எழுத்தில் எத்தகைய பாதிப்பை உண்டுபண்ணுகின்றது?

புலம்பெயர் வாழ்வு எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் உகந்த சூழலையும் நேரத்தையும் கொடுக்கிறது. பல்லின கலாசார நகரமான மெல்பேர்னில் வாழ்வதால் பல தரப்பட்ட மனிதர்களோடு பழகும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அது பல கதைக்களங்களை கொடுக்கிறது. தற்போது, வாசிக்கும் நூல்களிலும் அப்பன்முகத்தன்மையை உணர்கிறேன். இது எழுத்திலும் சிந்தனையிலும் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது.

பொதுவாகவே புலம்பெயர் படைப்பாளிகளிடம் தாயகம் பற்றிய ஏங்குதல், மீளத் திரும்பல் பற்றிய கனவுகள் வெளிப்படும். உங்கள் படைப்புகளிலும் இந்தப் பண்பு வெளிப்படுகின்றது. இது புலம்பெயரிகளின் மன அவசத்தை இறக்கி வைக்கும் சுமைதாங்கிச் செயலா?

“நனைவிடை தோய்தல்” என்று இதற்கு மறைந்த எழுத்தாளர் எஸ்.பொ பெயர் சூட்டியிருப்பார். தாம் வாழ்ந்த வாழ்க்கையை நினைந்து அழுங்கும் ஏக்கங்களின் வடிகாலாக அமையும் எழுத்துக்கள். நனைவிடை தோய்தல் எழுத்துக்களை புலம்பெயர் படைப்பாளிகள்தான் எழுதவேண்டுமென்பதில்லை. காலப்பெயர்வு காரணமாகவும் இவ்வகை எழுத்துக்கள் உருவாகலாம். கீ.ரா எழுதிய கரிசல் காட்டு கடுதாசி பல தசாப்தங்களுக்கு முன்னரிருந்த வாழ்க்கையை நினைந்து எழுதியது. ஈழத்தில் செங்கை ஆழியான் பலதடவை நனைவிடை தோய்ந்திருப்பார். சோ. பத்மநாதனின் நினைவுச்சுவடுகள், சுவடெச்சம் போன்ற நூல்கள்கூட நனைவிடைதோய்தல் வகையே. காலப்பெயர்வில் தாம் வாழ்ந்த, தற்போது கிடைக்கப்பெறாத வாழ்க்கையை நினைந்து புனையும் எழுத்துக்கள். எம்மைப்பொறுத்தவரையில் இவை ஒரு தலைமுறையின் வாழ்வியல். “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” கூட நனைவிடை தோய்தல்தான். அது சொல்வது தொண்ணூறுகளில் நாம் கொண்டாடிய வாழ்க்கை. இன்று அது இல்லை. எனவே நான் புலம்பெயராவிட்டாலும் “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” எழுதித்தான் இருப்பேன்.

நனவிடை தோய்தல் என்று வெறும் வடிகாலுக்காக இறக்கி வைக்கும் சப்புக்கொட்டு எழுத்துகளின் வாழ்நாள் மிகச்சிறியது. இதற்கூடாக ஒரு வாழ்வியலின் பதிவை புறம் மட்டுமல்லாது அகக்கூறுகளையும் சேர்த்து எழுதப்படும் படைப்புகளே காலத்தால் கொண்டாடப்படும். மற்றையவை மறக்கப்பட்டுவிடும்.

சில வருட காலங்களை கங்காரு தேசத்தில் கழித்துவிட்டு மீண்டும் சொந்த மண்ணில் காலடி வைத்த அனுபவம் எப்படி?

யாழ்ப்பாணத்துக்கு நான் அடிக்கடி வந்துபோகின்றவன். அதனால் மாற்றங்கள் எதுவும் முகத்திலடிக்கவில்லை. தவிர நான் வளர்ந்த யாழ்ப்பாணம் எப்போதோ இடம்பெயர்ந்து போய்விட்டது. எப்போதாவது தனியனாக ஒரு மலைவேம்புக்கு கீழேயோ அல்லது நல்லூர் தேரடியிலோ அமர்ந்திருக்கும்போது மட்டும் என் யாழ்ப்பாணமும் என்னைப்போலவே ஊர் திரும்பி என்னோடு அளவளாவும். அந்தக்கணங்களே ஊர் திரும்புதலுக்கான உந்துதல்கள்.

நீங்கள் புலம்பெயர்தலுக்கு முன்னான யாழ்ப்பாணம்-பின்னான யாழ்ப்பாணம், ஒற்றுமை-வேற்றுமைப் படுத்துக?

புதுப்பெயிண்ட் வாசத்தோடு கோயில் மாடப்புறாக்கள்.
வாசகனுக்காக காத்திருக்கும் நூலகங்கள்.
பேசுவதற்கு ஆள் இன்றி தனித்திருக்கும் மரத்தடிகள்.
காற்றுப்போய் பத்தியில் தூங்கும் மிதிவண்டிகள்.
குழைக்க ஆள் இல்லாமல் குழையும் பழஞ்சோறு.
தேங்காய்ப்பூ காய்ந்த அம்மிக்கல்லுகள்.
தார் மெழுகிய உந்துருளி வீதிகள்.
சீருடை காணாத தெருச்சந்திகள்.
ஆறரை இருட்டில் நல்லூர் திருவிழா.
காவல்துறை போலீசாகி
நயினாதீவு நாகதீபவாகி
தண்ணீர்க் கிணறுகள் எண்ணெய்ப்போத்தல்களாகி
எண்ணெய்ப் போத்தல்கள் தண்ணீர் கிணறுகளாகி
மாற்றம் ஒன்றே மாறிலி என்ற
தேற்றத்தை உணர்த்தி நிற்கின்றன.

கசக்கும் புலம்பெயர் உறவுகள்.
இனிக்கும் இருதய தொடர்புகள்.
மதில் சுவர்களில் கிழிந்து தொங்கும்
தன்னாட்சி, தேசிய கோஷங்களுக்கு மேலே
புதிதாய் பசை மணக்கும்
தனி ஒருவன் போஸ்டர்கள்.
வேலிகள் தொலைத்த படலையை திருத்தி
இரும்பு கேற்று போடுகிறது
இன்றைய யாழ்ப்பாணம்.
வெளியே நான்!

உங்கள் எழுத்தில் விஞ்ஞான பூர்வமும், எள்ளலும் பல இடங்களில் எட்டிப்பார்க்கின்றன, இது எதனால்?

எள்ளல் ஈழத்தமிழனின் வரமும் சாபமும். எழுத்தில் அது எட்டிப்பார்ப்பது இயல்பே. விஞ்ஞானத்தில் ஆர்வம் சுஜாதா போட்ட விதை.

கொல்லைப்புறத்துக் காதலிகளை மீண்டும் சந்தித்தீர்களா?

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் நூலின் பின் அட்டையில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கும்.

"சில காதலிகளை நினைக்கையில் ஏக்கம் வரும்.
சில பெயர்கள் புன்னகையை வரவழைக்கும்.
ஊருக்குத்திரும்புகையில் மனம் அவர்களையேதேடி ஓடும்.
பேசினவற்றை மீட்டிப்பார்க்கும்.
பேச மறந்தவற்றை பேசி முடிக்கும்.
சிலதுக்கு செவிட்டைப்பொத்தி அறையவேண்டும் போல தோன்றும்.
சிலது நமக்கு அறையும். "

சந்தித்தேன். இது எல்லாமே நடந்தது. அறைந்தேன். அறை வாங்கினேன்.

யாழ்ப்பாணத்தில் கொ.பு.கா அறிமுக விழா பற்றிய உங்கள் உணர்வு வெளிப்பாடு எப்படியிருந்தது?

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூலை ஆக்கிரமிக்கும் காலப்பகுதியான தொண்ணூறுகளின் முற்பாதியில் தீக்கிரையாகிய யாழ் நூலகம் கம்பீரமாக நிமிர்ந்து காட்சி தந்தது. நூலில் அது ஒரு பாத்திரமாகவும் வருகிறது. இன்றைக்கு அதே நூலகத்தில் இந்த நூல் அறிமுக விழா இடம்பெற்றமை கலவையான உணர்வுகளை கொடுத்தது. இளையோர் முன்வந்து நடத்திய நிகழ்வில் சோ.ப, கருணாகரன் போன்ற மூத்தவர்கள் கலந்துகொண்டமை கொடுத்த உவகை சொல்லி மாளாதது. யாழ்ப்பாணம் என் முதுகில் தட்டி "இன்னும் எழுது, நான் வாசிக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறது. இனி என் வேலை எழுத்தாகிக்கிடப்பதே!

யாழ்ப்பாணத்துக்கான நிரந்தரத் திரும்புகையா? கங்காருதேச வாசியா? உங்கள் தெரிவு எது? ஏன்?

சொக்கலட் என்ற ஆங்கில நாவலில் வரும் வியான்னே எனும் பெண் ஒவ்வொரு வடக்கு பருவக்காற்றின்போதும் இடம்பெயர்வாள். இடம்பெயர்வதற்கு அவளுக்கு ஏதாவது ஒரு காரணம் அமையும். அம்மாவின் இழப்பு, காதல் தோல்வி, ஊரவர் வெறுப்பு என்று ஏதாவது ஒரு காரணம். என்னதும் அப்படியே. யாழ்ப்பாணம், பளை, வன்னி, கொழும்பு, சிங்கப்பூர், மெல்பேர்ன் என்று ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு ஊராக இடம்பெயருதல் வாழ்க்கையாகிவிட்டது. சில இடம்பெயர்க்கப்பட்டவை. சிலது விரும்பி இடம்பெயர்ந்தவை. தற்சமயம் மெல்பேர்ன் நகரம் என்னுடைய இயல்புக்கு பொருந்தி வருகிறது. தனித்திருப்பது ஒரு சுகம். இன்றைய யாழ்ப்பாணத்தில் எழுதிக்கொண்டே தனித்திருப்பது என்பது முடியுமா என்பது கேள்விக்குறி. எழுதுவதற்காகவே சிங்கப்பூரிலிருந்து மெல்பேர்னுக்கு குடிபெயர்ந்தவன் நான். நிறைய நேரத்தை வாசிப்புக்கும் எழுத்துக்கும் அங்கே ஒதுக்க முடிகிறது. நாமுண்டு, நம் வேலையுண்டு என்று வாழ முடிகிறது. இப்போதைக்கு கங்காரு தேசமே என் வசிப்பிடம். மீண்டும் நான் யாழ்ப்பாணம் திரும்புவதா இல்லையா என்பதை பருவக்காற்றே தீர்மானிக்கட்டும்.

**************

பேட்டி கண்டவர் : தங்கராஜா பிரபாகரன்

நன்றி : உதயன் 20-09-2015

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக