Skip to main content

நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்

செங்கை ஆழியான், புன்னியாமீன், கே. விஜயன் ஆகியோரின் நினைவரங்கும் இலக்கிய சந்திப்பும் நாளை இடம்பெறவுள்ளது. கந்தராஜாவின் தலைமையிலான இந்நிகழ்வில் ஈழத்திலிருந்து வருகை தந்திருக்கும் ஞானசேகரன், சந்திரசேகரன், பாலஸ்ரீதரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். 

செங்கையாழியான் நினைவுரையைச் செய்கின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. செங்கை ஆழியான் உயிரோடு இருக்கும்போதே நானும் ஜூட் அண்ணாவும் அவருடைய புத்தக அறிமுக அரங்கைச் செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். கைகூடிவரவில்லை.

இன்னொரு இருபது வருடங்களுக்குப்பிறகு செங்கையாழியான் எப்படி, எதற்காக வாசிக்கப்படலாம் என்பதை விரிவாக எடுத்துப்பேசலாம் என்று நினைக்கிறேன். வந்தால் கலந்துரையாடலாம்.

நிற்க.

இலக்கியச்சந்திப்புகள், இயல் அரங்கங்கள் மீதான ஆர்வம் இப்போதெல்லாம் வடிந்துபோய்விட்டது. மேடைப்பேச்சுகளின் பயன் பற்றிய குழப்பங்களும் கூடவே எழுகின்றன. இதெல்லாம் எதற்காக?புத்தகங்களினூடு நாங்கள் எப்போதுமே பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்? எல்லாவற்றையும் தூக்கிக்குப்பையில் போட்டுவிட்டு ஒரு முடிவுறாத ரயில் பயணத்தில் யன்னல்கரையோரம் உட்கார்ந்துகொண்டு கூதல்காற்றில் ஒற்றைகள் பறக்க புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருக்கவேண்டும்போலத்தோன்றுகிறது. எனக்கு நானே சிரித்துக்கொண்டு, அழுதுகொண்டு. யாமத்திலே நீலகண்டம் என்கின்ற நாய்க்குப்பின்னாலே பயணிக்கின்ற பண்டாரம்போல ஒரு புத்தகத்திடம் என்னை ஒப்படைத்து, இந்தாப்பா, என்னைப்பத்திரமாக் கொண்டுபோ என்று சொல்லிவிடவேண்டும். ரயில் எங்குவேண்டுமென்றாலும்செல்லட்டும். யன்னலுக்கு வெளியே விட்டேத்தியாகப் பார்க்கிறேன். யார் யாரோ படித்து முடித்து வீசியெறிந்த புத்தக‌ங்களின் தாள்கள் எல்லாவிடமும் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொருவரும் எரிக்கப்பட்ட நூலகத்திலிருந்து பறக்கும் கருகிய ஒற்றைத்துண்டுகளாகின்றனர். ஒரு புத்தகத்துக்கு தான் எரிக்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் தெரியுமா? அறியவேண்டும். 

திடீரென்று யாரோ ஒருவரின் ரயில் கண்ணாடியினூடு நான் தெரிகிறேனோ என்கின்ற பிரக்ஞையும் கூடவே எழுகிறது.நிமிர்ந்துபார்க்கிறேன். நானே எரிந்துகொண்டிருக்கிறேனோ என்ற நினைப்பில் வெம்மை பரவுகிறது. ரயில் அசையாமலேயே வேகம் பிடிக்கிறது.

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.