Skip to main content

இக்கரைகளும் பச்சை 1 – பருப்புக்கறி வாங்கிய பெண்



மெல்பேர்னின் புறநகர்ப்பகுதியான எப்பிங்கில் இருக்கும் “தமிழ் பலசரக்குக் கடை” ஒன்றுக்கு “மட்டன் ரோல்ஸ்” வாங்கச் சென்றிருந்தேன். மட்டன் ரோல்ஸ் தாச்சியில் பொரிந்துகொண்டிருந்ததால் கடைக்காரர் என்னைச் சற்றுநேரம் காத்திருக்கும்படி கூறினார். பத்து நிமிடங்கள் எடுக்கும் என்றால் அந்தப்பத்து நிமிடங்களுக்குள் நான் கடையை இரண்டுதடவை சுற்றிபார்க்கவேண்டிவரும், ஆங்காங்கே சில பொருட்களை எடுக்கலாம், இரண்டு ரோல்சுக்கு வந்தவன் இருபது டொலர்களுக்கு சாமான்கள் வாங்குவான் என்று கடைக்காரர் எதிர்பார்த்திருக்கக்கூடும். நான் உள்ளே சுற்றாமல் வாசலிலேயே நின்று விடுப்புப்பார்க்க ஆரம்பித்தேன்.

தமிழ் பலசரக்குக் கடைகளைப் பொதுவாக “இந்தியன் ஸ்பைஸி” கடைகள் என்றே அழைப்பார்கள். ஆனால் பல கடைகளை ஈழத்தமிழர்களே நடத்திவந்தார்கள். அவர்களும் சனத்தொகையில் அதிகமான இந்திய வாடிக்கையாளர்களையும் கவருவதற்காக இந்திய அடையாளத்தைக் கடையில் சூடிக்கொள்வார்கள். இவ்வகையான கடைகளுக்கென்று ஒரு தனி அழகு இருக்கிறது. கடையில் பொருட்கள் மிக நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும். பற்றாக்குறைக்குக் கால் கைகளுக்கிடையிலும் அரிசி மூட்டைகளும், தேங்காய், முருங்கைக்காய்கள், கறிவேப்பிலை மரங்கள் போன்ற வஸ்துக்களும் இழுபடும். கடை பல்பொருள் அங்காடிப் பாணியில் அமைந்திருந்தாலும் அலுமாரி இடைவெளிகளுக்குள்ளால் பருமனான மனிதர்கள் நடந்துதிரிய முடியாது. ஒல்லியானவர்கள் புகுந்தாலும் உள்ளே மேலே நகரமுடியாதவாறு முன்னே யாரேனும் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்பார். தொலைப்பேசியில் “துமி, உந்த ரொட்டிக்கு அவிச்சமா போடுறனீரா? இல்லை பச்சை மாவா?” என்று சத்தமாகக் கேட்பார். "துமி" பதில் சொல்லும்வரைக்கும் காத்திருக்கப் பொறுமை இல்லை எனின், ஒன்று அவருக்கு "பச்சை மா" என்று நீங்களே சரியான பதிலைச் சொல்லி அப்பாலே நகரச்செய்யவேண்டும். அல்லது வந்தவழியே திரும்பி அடுத்த வரிசைக்குள் நுழையவேண்டும். 

ஒரு டிபிக்கல் இந்தியன் ஸ்பைசிக் கடையில் நிச்சயம் சிற்றுண்டிகள் பிரிவு இருக்கும். ரோல்ஸ், பற்றிஸ், கட்லட், கிழங்கு உரொட்டி, வடை, சீனி பணிஸ், ரோஸ் பாண், இடியப்பம், பிட்டு, இட்லி, கொத்து ரொட்டி, அலப்பை, மரவள்ளிக்கிழங்கும் சம்பலும், லம்ப் ரைஸ், பயத்தம் பணியாரம், இன்னபிற பணியாரங்கள், பீடா, லட்டு என்று வரைட்டி வரைட்டியாகக் குவித்து வைத்திருப்பார்கள். பிரியாணி, சோறு கறி, பிரைட் ரைஸ் என்று பிரதான சாப்பாட்டைச் சிறு சிறு பெட்டிகளிலும் இட்டு அடுக்கிவைப்பார்கள். சமைத்த உணவுதான் இப்படியான கடைகளுக்கு மக்களை இழுத்துவருவது. ஐந்து டொலர்களுக்கு இருபத்தைந்து இடியப்பங்கள் கிடைக்கும். கூடவே சம்பல் சிறு பொட்டலம் தருவார்கள். தேவையெனின் இறைச்சிக்கறியோ, நண்டுக்கறியோ உபரியாக வாங்கலாம். அதற்கு எட்டு டொலர்கள். மொத்தமாக பதின்மூன்று டொலர்களுக்குள் இரண்டு, மூன்று பேர் உள்ள குடும்பத்தின் இரவுச்சாப்பாடு தீர்ந்துவிடும்.

இடியப்பம் அநேகமான வீடுகளில் இப்போது சமைக்கப்படுவதேயில்லை எனலாம். தண்ணீர் கொஞ்சம் அங்காலே இங்காலே கூடிக்குறைந்தால் பிழைத்துவிடும் அபாயம், நேர விரயம், எப்படிச் சமைப்பது என்று தெரியாது எனப் பல காரணங்கள் இதற்கு உண்டு. தண்ணீர் கூடினால் இடியப்ப உரலில் பிழிவதும் கடினம். அப்படியே கஷ்டப்பட்டு பிழிந்து அவித்தாலும் இடியப்பம் சுப்பர்குளூவில் பிழிந்ததுபோல இறுகிக் கிடக்கும். எதற்குச் சோலி என்று எல்லோரும் இந்தியன் ஸ்பைசிக்கு வந்துவிடுவார்கள். அந்த இளவயதில் ஆற்றங்கரை மணலில் அம்மா இடியப்பம் அவித்த காலங்களில், குழைத்த மாவில் குட்டிக் குட்டி சிலைகள் செய்து ஆவித்தட்டில் வைத்து நானும் அவித்தது ஞாபகம் வருகிறது. “மாவை அளையாதே” என்று அம்மா ஏசுவார். கோயில் கோபுரங்கள், பிள்ளையார், நாய்க்குட்டி, ஆகாய விமானம், துவக்கு என்று எதாவது பிடிக்கப்போய் குரங்காகத்தான் என்னுடைய மாவில் செய்த சிற்பங்கள் உருமாறும். ஆனால் அவித்து இறக்கியபின் பிள்ளையாரைச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  இடியப்பம், பாற்சொதி. பொரித்த செத்தல்மிளகாயில் இடித்த சம்பல். தில்லைக்காட்சியை கோப்பையிலேயே கண்டு ரசிக்கலாம்.



கடைக்கு ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி குழந்தைகளுக்கான தள்ளுவண்டியோடு உள்ளே நுழைந்தார். நாற்பத்தைந்து வயது இருக்கலாம். இறுக்கமான ஜீன்ஸ் பாதத்திலிருந்து அரையடி உயரத்திலேயே முடிவடைந்திருந்தது. சிறுவயதில் சிரங்கு வந்து புண்ணாக்கிய அடையாளம் இன்னமும் பாதத்தில் எஞ்சியிருந்தது. காற்சங்கிலி மாட்டியிருந்தார். அணிந்திருந்த அக்கோபா பிளவுசும் ஜீன்சும் அவருடைய உடலமைப்பும் எப்படி யோசித்தாலும் பொருந்திவரவேயில்லை. தலைமுடியை ஸ்ட்ரெயிட் பண்ணியிருந்தார். அடுத்ததாக முகத்தை ஆராயலாம் என்பதற்குள் அவர் என்னைப் பார்த்துவிட்டதால் நான் பம்மியபடி போனைப் பார்க்க ஆரம்பித்தேன். 

அந்தப்பெண்மணி உருட்டிவந்த தள்ளு வண்டியில் குழந்தையைக் காணவில்லை. அது வெளியே, காரினுள்ளே ஐபாட் பார்த்துக்கொண்டிருக்கலாம். அந்தப்பெண்மணி வந்தவேகத்திலேயே ஆறு ஆட்டிறைச்சி ரோல்ஸ், ஐம்பது இடியப்பம், இரண்டு மீன் கறி, ஒரு பருப்புக்கறி, இரண்டு கொத்துரொட்டி என வாங்கிக் குவித்துக்கொண்டிருந்தார். கடைக்காரர் பருப்புக் கறிக்கு ஆறு டொலர்கள் விலை சொன்னபோது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கொஞ்சம் எடுத்து, நன்றாகக் கழுவி, தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, பொங்கிவரும் ஆடையை அள்ளி வீசி, சற்று நேரம் கழிந்ததும் உப்பு (முதலேயே போட்டால் அவிய நேரம் எடுக்கும்), வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய், மிளகு, சொட்டு மஞ்சள் போட்டு,  அவிந்தபின் தேவையான அளவு பால்விட்டு, இறக்கி, நேரம் இருந்தால் வெங்காயம் கடுகு தாளித்தும் போட்டால் அது பருப்புக்கறி. ஒரே வாக்கியத்தில் செய்து முடிக்கக்கூடிய ஒரு கறியை ஆறு டொலர்கள் கொடுத்து வாங்கியதைச் சகிக்க முடியவில்லை. எனக்கேன் இந்த வில்லங்கம் என்று தெரியவில்லை. அவரவர் காசு. வேண்டுமென்றால் பச்சைத்தண்ணியைக்கூட கடையில் வாங்கிக்குடிப்பார்க்கள். நமக்கென்ன?

சொல்லிவைத்தாற்போல அந்தப்பெண்மணிக்கு அடுத்ததாக பிரிட்ஜில் இருந்து இருபத்துநான்கு தண்ணீர்ப்போத்தல் கேஸ் ஒன்றையும் எடுத்துவைத்தார். கூடவே இலங்கையிலிருந்து இறக்குமதியான பழ ஜூஸ். இரண்டு நெக்டோ சோடாக்கள். பின்னர் பக்கத்திலிருந்த பிரிட்ஜில் உறைந்த பரோட்டா. தயிர் டப்பா. அப்படியே உள்ளே போய் பொன்னி அரிசி, பாஸ்மதி, வறுத்த அரிசிமா, மிளகாய்த்தூள், சோயாமீட் என்று சுற்றிவந்து, வரும் வழியில் பெயார் அண்ட் லவ்லி, மீரா சீயாக்காய்த் தூள், பித்தவெடிப்புக் கிரீம், இலங்கை இறக்குமதியான ஈவா சானிடரி நாப்கின் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுக்கொண்டு கவுண்டர் அருகே வந்தார். அங்கே கருந்துளசி கன்று ஒன்றைக் கண்டதும் அதையும் வாங்கினார். ரோஸ் பாண் அன்றைக்கு வந்ததா என்று கேட்டுவிட்டு அதுவும் ஒரு இறாத்தல். கடைக்காரர் பில் போட்டுக்கொண்டிருக்கையில் திரும்பவும் ஓடிப்போய் ஒரு பிரிட்ஜில் “உடனடித் தோசை மா வாளி” ஒன்றையும் எடுத்துவந்து பில்லோடு சேர்த்தார். நான்கு தலைமுறைக்குப் போதுமான சமைத்த உணவுகளுடன் தோசை மாவையும் எதற்கு அவர் சேர்த்து வாங்கினார் என்று தெரியவில்லை. அந்தத்தோசை மா வாளியைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. அந்தப்பெண்மணி வீட்டு பிரிட்ஜில் அது தன்னுடைய வாழ்நாள் முழுதும் இழுபட்டு பின்னர் காலாவதியானதும் குப்பைக்கூடைக்குள் போகப்போகிறது என்பது திண்ணம். 

அந்தப்பெண்மணி ஒரு தேர்ந்த இலக்கிய வாசகியாகவும் இருக்கவேண்டும். முத்துலட்சுமி இராகவன், ரமணிச்சந்திரன், அவள் விகடன், வீரகேசரி வாரவெளியீடு என பலவற்றை ஓர்டர் செய்திருப்பார்போல. கடைக்காரர் எடுத்துக்கொடுத்தார். மொத்த பில்லும் இருநூறு டொலர்கள் தாண்டியிருக்கலாம். அந்தப்பெண்மணி கடைக்காரருடன் பேசிக்கொண்டே கடன் அட்டையைக் காட்டியதால் எவ்வளவு என்று கணிக்கமுடியவில்லை. கடைக்காரர் தன்னுடைய முதன்மை வாடிக்கையாளரின் தைரியத்தைப் பாராட்டி சோப்பு டப்பாவாக ஒரு பைரவா திருட்டு டிவிடியை இலவசமாகக் கொடுத்தார். 

விடைபெற்று வாசலுக்கு வரும்போது கடை வாசலில் விடுப்புப் பார்த்துக்கொண்டிருந்த என்னை அந்தப்பெண்மணி வெறித்துப்பார்த்தார். அம்மா அந்தப்பார்வைக்கு “பூராயம் தேடுறது” என்று விளக்கம் கொடுப்பார். ஒரே பார்வையில் நான் யார்? என் அப்பா யார்? எந்தச் சாதி? சாதிக்குள்ளும் எந்த உள் சாதி? கையிலே தண்ணிச்செம்பு எடுத்துக் கொடுக்கலாமா இல்லையா? திருமணமானவனா இல்லையா? படித்தவனா இல்லையா? அகதியா? பிள்ளைகள் உண்டா இல்லையா? என்ன வேலை செய்வான்? அலுவலக மேசையா? தொழிற்சாலையா? கட்டடவேலையா? உணவகமா? கூரியரா? என்று எல்லாப் பூராயத்தையும் அந்தப் பெண்மணி ஒரே பார்வையில் கணித்திருப்பார். நான் அவருடைய பார்வைக்குப் பதிலாக புன்னகைக்கவேண்டுமா வேண்டாமா? என்று தடுமாறி இரண்டும் கெட்டானாக ஒன்றை உதிர்த்தேன்.

பின்னாலேயே அந்தப்பெண்மணி வாங்கிய சாமான்களைச் சுமந்துகொண்டு வந்த கடைக்காரர் மூசியபடியே சொன்னார்.

“இவரைத் தெரியுந்தானே? இவரும் ஒரு எழுத்தாளர்தான்”

ஏதோ டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியான செய்தியைக் கேட்டதுபோல அந்தப்பெண்மணியின் முகம் முக்கோணலானது. சிரிக்க முயன்றார். முதன்முதலாக அவருடைய முகத்தை நோட்டம் விட்டேன். பேசியல் செய்திருந்தார். இயற்கையாகக் கீழ்நோக்கிப் போகும் அவருடைய கண் இமையை மழித்துவிட்டு மேல்நோக்கி கோடு கீறியிருந்தார். மழித்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம். இமை இப்போது கீழ்நோக்கியும் சற்று வளர ஆரம்பித்திருந்தது. மேற்திசை நோக்கியும் கீழ்த்திசை நோக்கியும் நீண்ட இமைகளைப் பார்க்கையில் ஏதோ ஒரு படத்து வடிவேலுவின் மீசையே ஞாபகம் வந்தது. பெரிதாகச் சிரித்துவிட்டேன். அவர் வாசலில் வெளியே போவோமா விடுவோமா என்று தயங்கினார். கடைக்காரர் என்ன மூடில் இருந்தாரோ தெரியாது.

“இவரும் புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்கிறார்” 

இதற்குமேலும் விட்டால் வேலைக்காகாது என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

“அண்ணே இன்னமும் உங்கட ரோல்ஸ் பொரியேல்லையா?”

நான் சொல்ல, ஆழமாக என்னைப்பார்த்தவாறே அந்தப்பெண்மணி,

"சந்திச்சதில சந்தோசம்"

என்று சொல்லிவிட்டு சின்னதாய் ஒரு சிரிப்பும் சிரித்துவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் விறுவிறுவென வெளியேறிப்போனார். அதீத அர்த்தங்கள் கொண்ட சிரிப்பு அது. அவர் போனபின்புதான் மரியாதைக்கேனும் ஒரு வணக்கமாவது வைத்திருக்கலாமோ என்று தோன்றியது. ஒரு சிரிப்பில் அவர் மேலே சென்று நான் கீழே சென்றுவிட்டேனோ? அவர் இமைகளைப்போல. இல்லை, நான் எப்போதுமே கீழேயே இருந்திருக்கிறேன்.  எண்ணங்களில். இயல்பில்.

திடீரென்று அந்தப்பெண்மணியின் ஜீன்சும், அக்கோபா பிளவுசும் உடலமைப்பும் அற்புதமாய்ப் பொருந்தியதுபோலத் தெரிந்தது. வடிவேலு மீசையாட்டம் தெரிந்த இமைகள் அழகாக அவர் முகத்துக்குப் பொருந்திப்போயின. ஸ்ட்ரெயிட் பண்ணப்பட்டிருந்த அவருடைய தலைமுடி ஆர்ப்பாட்டம் இல்லாத சீரிய நீர்வீழ்ச்சிபோலக் காட்சி தந்தது. அன்றைக்கு அவர் வீட்டுக்கு யாரேனும் விருந்தாளிகள் வரக்கூடும். இடியப்பமும் உடனடித் தோசையும் அன்றே அவர் பரிமாறக்கூடும். தண்ணீர்ப்போத்தல்களும் அதற்காகத்தானோ தெரியாது. 

யோசித்துப்பார்த்தால் பருப்புக்கறியை மெனக்கட்டு வீட்டில் சமைப்பது வீண்வேலை போலவும் தெரிந்தது.

&&&&&&&&

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக