Skip to main content

அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது


நேற்று இடம்பெற்ற “அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது” ஒன்றுகூடல் மிகுந்த மனத்திருப்தியோடு நடந்து முடிந்தது. வாசிப்பின் உந்துதலில் தூரத்தையும் பொருட்படுத்தாது பன்னிரண்டுபேர் இணைந்திருந்தார்கள். எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இருநூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் சம்மணமிட்டு, சுற்றி உட்கார்ந்து வாசிப்பு அனுபவங்களைப் பகிர்தல் என்பது ஒரு நீண்டகாலக் கனவு. சாத்தியமாக்கியதற்கு அனைவருக்கும் நன்றிகள்.

போவதே தெரியாமல் இரண்டரை மணிநேரம் நீடித்த இப்பயணத்தை முருகபூபதி தன்னோடு அசோகமித்திரனுக்கு இருந்த உறவையும், அவர் கைலாசபதி காலத்தில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களையும் பகிர்ந்து ஆரம்பித்துவைத்தார். அதன்பிறகு அசோகமித்திரனின் "பிரயாணம்" சிறுகதை வாசிக்கப்பட்டது. அது முடிய அனைவரும் அசோகமித்திரனின் படைப்புகள் பற்றிப் பேசலானோம். பிராயணத்தில் ஆரம்பித்து, அப்பாவின் சிநேகிதர், புலிக்கலைஞன், ரிக்சா(!), எலி, முறைப்பெண், அம்மாவுக்கு ஒருநாள், ஐநூறு கோப்பை தட்டுகள், தண்ணீர் என்று அவரின் படைப்புகள் பலவற்றைப்பற்றிப் பேசினோம்.

எல்லோரும் திரும்பிப்போனபின்னர் வரவேற்பறையில் கிடந்த “தண்ணீர்” நாவலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் அட்டைப்படத்து வறண்ட பாலை நிலத்தில் ஈரம் கசிந்ததுபோலத் தோன்றியது. இதைவிட வேறென்ன வேண்டும்?












Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.