Skip to main content

சமாதானத்தின் கதை - கருத்துகள்




'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள்.


-- லெ. முருகபூபதி --
கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். பாத்திரப்படைப்பில் இருக்கும் முழுமைதான் இக்கதையின் வெற்றி. ஈழத் தமிழ் சமூக மாற்றங்களில் புலம்பெயர்ந்தவர்களின் வகிபாகமும் துல்லியமாகியிருக்கிறது. "உண்மைக்கதையோ!? " என எண்ணவைக்கிறது. சித்தர்களின் ரிஷிமூலம் கண்டறியப்படமாட்டாது. அந்த சமதானம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் அதன்மீது வாசகருக்கு அனுதாபத்தையும் தோற்றுவிக்கும். பரிமளம் - வைதேகி - பிரான்ஸ் மாப்பிள்ளை - நரிக்குண்டு பிரதேசம் வாசகரின் மனதில் நெடுநாளைக்கு நிற்கும். வாசகரை உடன் அழைத்துச்செல்லும் ஜே.கே.யின் படைப்பூக்கம் இக்கதையிலும் சோடைபோகவில்லை.

அன்புடன்
பிரிய வாசகன் முருகபூபதி

-- இளங்கோ டீசே --
காலச்சுவடில் வந்த ஜே.கே.யின் 'சமாதானத்தின் கதை'யைப் போல நம் சூழலில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. சமாதானம் என்ற பெயர் வந்ததைப் பூடகமாய்ச் சொல்வதற்கே அவர் நிறையப் பகுதிகளை இங்கே செலவழித்திருக்கின்றார். இப்படிப் பட்டப்பெயர்களைப் பூடகமாகப் பலர், தமது கதைகளில் சிறப்பாக எழுதியிருக்கின்றனர். அண்மையில் வாசித்ததில் உடனே நினைவுக்கு வருவது யதார்த்தனின் கதையான 'இலங்கைப்பூச்சி'.
மேலும் 'சமாதானதின் கதை' ஏற்கனவே சொல்லப்பட்டக் கதை என்றாலும் அதிலிருந்து வெளிவந்து வாசகரை வசீகரிக்கக்கூடிய எந்தத் தெறிப்பும் இதில் இல்லை என்பதுதான் பலவீனம். ஜே.கே.யின் அபுனைவுகளில் எனக்கு இருக்கும் ஈர்ப்பைப்போல, அவரது புனைவுகளில் வாசித்தளவில் பெரிதும் இருந்ததில்லை.
அவர் கொஞ்சம் செவிமடுக்கக்கூடியவர் என்றால், அவர் ஒன்று ஜனரஞ்சகமான எழுத்துக்கு (அதில் எந்தத் தவறுமில்லை) முற்றாக நகரவேண்டும் இல்லாவிட்டால் அதன் எதிர்ப்புறத்துக்கு நகரவேண்டும். இரண்டுக்கும் இடையில் அல்லாடும் நிலைமையே அவரது கதைகளில் பொதுவாகக் கண்டுகொண்டிருக்கின்றேன். அது சிக்கலானது. ஒன்றின் கரையின் நின்றுகொண்டு விருப்பமெனில் இன்னொரு கரைக்கு நகரலாம். இல்லை எனக்கு இரண்டு பக்கமும் வேண்டுமென்றால் நாணயம் போல கதைகளில் ஒரு முழுமை ஒருபோதும் வந்துவிடாது என ஒரு வாசகராக அவருக்குச் சொல்லவிரும்புகின்றேன்.
         http://djthamilan.blogspot.com/2018/06/blog-post_21.html


-- சுபாசிகன் --
கன நாள் முன்பு எழுதிய பதிவிற்கு இப்போது கருத்து எழுதுகிறேன். என் வாசிப்பு, அன்றாட வேலையெல்லாம் கொஞ்சம் சோங்கல் பிடித்துப்போய் விட்டது.
சமாதானம் - பரிமளம். திறமையான படைப்பு. உள்ளே sensitive ஆக இருந்து, அன்புக்கு ஏங்கி, ஆனால் அதை வெளிக்காட்டாமல், பரிமளத்திற்குக் கடமை செய்வதை சந்தோஷமாகக் கொள்ளும் சமாதானம். சமாதானத்தை ஒருவித சுயநலத்துடன் பாவிக்கும் பரிமளம். புறக்கணிப்பில் உண்டாகும் மன அழுத்தம், சமாதானத்தின் உண்மையான உணர்வு / வேதனையைக் காட்டுகிறது. இன்னொருவிதத்தில் வாழ்வில் பாதிக்கப்பட்ட பரிமளத்தின் சரி-தவறு சொல்லமுடியாத தன்னலப் போக்கு. அவ்வாறே வளர்க்கப்படும் மகள் எம்மவரின் குடும்பப் போக்கைக் காட்டுகிறது. சமாதானம் - பரிமளம் பாத்திரம் இந்தக் கதையில் வருபவர்கள் போல் எல்லா ஊரிலும் இருக்கலாம். தவிர எல்லா உறவு, நட்புக்களிலும் உள்ளார்கள். உலகம் இந்த இரண்டுவித மனிதர்களால்தான் இயங்குகின்றது. ஆனால் இறுதியில் சமாதானம் பற்றி எவரும் அக்கறைப்படப் போவதில்லை.

ஜேகே, எழுத்து உங்கள் கொடை. எப்போதும் போல. தொய்வே அடையாத கதைப் போக்கு - நூல் பிடித்தது போல், பாத்திரப் படைப்புக்கள், அதைக் குறியீடாகக் கொண்டு எங்கோவெல்லாமோ சிந்திக்கத் தூண்டுவது, ஆழமான / உண்மையான எழுத்து, ஊர் வழக்குகள், மண் வாசனை, எப்போதும் கதைப் போக்கினூடேயே இழையோடும் நகைச்சுவை. என்னத்தைச் சொல்லுவது! எல்லாப் பதார்த்தங்களும் சரியான அளவில் ஒன்றாகக் கலந்து, அருமையாகச் செய்த சுவை மிகுந்த சாப்பாடு போல் என்று சொல்லலாமா? அப்படியே ஏப்பம் விட்டு அனுபவிக்கும் நிறைவு! ஆனால் குழைத்துச் சாப்பிட்ட மணம் கையை விட்டுப் போகாது. இப்படியும் கூடப் பறையலாம், சுருக்கமாக... நல்லதொரு மலையாளப் படம் பார்த்த மாதிரி!

-- தன்யா --
ஒவ்வொரு கோயிலடிக்கும் ஒவ்வொரு சமாதானம். I am familiar with this character. I have seen them exploited, taunted and chucked out. பல சமயங்களில் பரிமளமாகவும் சில சமயங்களில் நானே சமாதானமாகவும் இருந்திருக்கிறேன். Such a unique piece of writing.

-- அமுதன் --
வணக்கம். நீங்கள் எழுதிய சமாதானத்தின் கதையை வாசித்தேன். 30 ஆண்டுகளை முழுவதுமாக வாழ்ந்து கடந்த உணர்வு ஏற்பட்டது. உள்ளார்ந்த அனுபவ வெளியில் இருந்து இந்த படைப்பு உருவாகியிருப்பது புரிகிறது. மொழி நடை, தயக்கமின்றி படித்து கடக்க வைத்தது. அரசியல் வெளியும், சூழல் வெளியும் மனித செயல்பாட்டை நிர்ணயிப்பதை இந்த படைப்பின் ஊடாக காண முடிந்தது. மகிழ்ச்சி.
எளிய அன்பில்
அமுதன்

-- சரவணன் --
‘சமாதானம்’ போன்ற நபர்கள் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சமூகம் அவர்களைத் தொடர்ந்து கறிவேப்பிலையாகத்தான் கருதிவருகிறது.

000 

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...