டெல்சுலா ஆவ் எழுதிய Laburnum For My Head என்கின்ற ஆங்கில நூலை எம். ஏ. சுசீலா தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். டெம்சுலா அசாமில் பிறந்த நாகர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இந்திய உபகண்டத்தின் அசாம், நாகாலாந்து போன்ற வடகிழக்குப் பிராந்தியங்களின் காடும் மலையும் சூழ்ந்த நிலத்துக் குடிகளின் பல்வேறு வாழ்வுச் சிக்கல்களையும் போராட்டங்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பின் எல்லைகளுக்குள் நின்று பேசக்கூடிய புத்தகம் இந்த ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. தொகுப்பின் முதற் சிறுகதை ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. கொன்றை மரங்களை வீட்டில் வளர்க்க முயன்று தோற்றுப்போன ஒரு வயதான பெண்மணி ஈற்றில் தனக்கான கல்லறையை அவரே இயற்கையாக வடிவமைத்து அங்குக் கொன்றைகளை நடுவதற்கு முயற்சி எடுக்கிறார். அவரது மரணத்துக்குப் பின்னர் அவர் விரும்பியதுபோலவே கல்லறை இயற்கையாக அமைக்கப்பட்டுக் கொன்றை மரங்களும் அங்கு வளர்ந்து பூத்து நின்றன என்று கதை முடிகிறது. மரணத்துக்குப் பின்னரும் தான் எப்படி நினைவுகூரப்படவேண்டும் என்று தீர்க்கமாக வேலை பார்க்கும் ஒரு பெண்மணியின் கதை ஒரு ஆதாரம். கற்களாலும் சீமெந்தினாலும் கல்லறை அமைத்து மரணத்தை வெல்ல மனிதர்க...