தொகுப்பின் முதற் சிறுகதை ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. கொன்றை மரங்களை வீட்டில் வளர்க்க முயன்று தோற்றுப்போன ஒரு வயதான பெண்மணி ஈற்றில் தனக்கான கல்லறையை அவரே இயற்கையாக வடிவமைத்து அங்குக் கொன்றைகளை நடுவதற்கு முயற்சி எடுக்கிறார். அவரது மரணத்துக்குப் பின்னர் அவர் விரும்பியதுபோலவே கல்லறை இயற்கையாக அமைக்கப்பட்டுக் கொன்றை மரங்களும் அங்கு வளர்ந்து பூத்து நின்றன என்று கதை முடிகிறது. மரணத்துக்குப் பின்னரும் தான் எப்படி நினைவுகூரப்படவேண்டும் என்று தீர்க்கமாக வேலை பார்க்கும் ஒரு பெண்மணியின் கதை ஒரு ஆதாரம். கற்களாலும் சீமெந்தினாலும் கல்லறை அமைத்து மரணத்தை வெல்ல மனிதர்கள் முயலும்போது இந்தப் பெண் கொன்றை மரங்களினூடாக மரணத்தின் பின்னரும் நிலைக்கிறார் என்பது கதையின் இன்னொரு ஆதாரம். எனக்கென்னவோ அதுகூட அபத்தமாகத்தான் தெரிகிறது. மரணம் நான் என்ற இருப்பின் இறுதிப்புள்ளி என்பதே என் தீர்க்கமான எண்ணம். ஒருவரின் மரணத்தின் பின்னரான நினைவுகூரல்கள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் மன அமைதியையும் துயர் பகிர்வையும் கொடுக்குமே ஒழிய இறந்தவர் இறந்தவர்தான். They are just gone. மறுபிறப்பு, சொர்க்கம், சீவன் எல்லாம் மனித நாகரிகத்தின் பிழைத்தல் சிந்தனைக்கான இட்டுக்கட்டுகள். போகட்டும்.
அதற்குப் பின்னர் வரக்கூடிய ஆறு சிறுகதைகளில் வட கிழக்குப் பிராந்தியத்தின் வாழ்வுச் சிக்கல்கள் பல்வேறு தளங்களில் பேசப்படுகின்றன. அரசு இயந்திரம், மக்கள், போராளிகள் என்ற மூன்று புள்ளிகளுக்கிடையிலான உரசல்களும் உறவுகளும்தான் இக்கதைகள். அநேகமான பல கதைகள் இந்தச் சிக்கல்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் நிகழ்கின்றன. அதனால் அரச இயந்திரம் நிகழ்த்திய அதிகார வன்முறைகளின் பதிவு இக்கதைகளில் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அப்படியே அவை இருந்தாலும் எழுத்தாளர் தன் பாதுகாப்புக் கருதி படிமமாகவே அவற்றைக் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். ‘ஒரு வேட்டைக்காரரின் மரணம்’ அத்தகைய கதை. படிமங்களினூடாகவே நிகழும் ஒரு வேட்டைக்கதை அது.
எந்த ஒரு போராட்டமும் அதிகார ஒடுக்குமுறையின் ஒரு வடிவத்துக்கு எதிராகவே ஆரம்பிக்கிறது. அதன் ஆதார நோக்கங்களில் பெரிதும் தவறுகள் இருப்பதில்லை. ஆனால் காலப்போக்கில் எதிர்ப்பின் அணுகுமுறைகளில் போராளிகளுக்கிடையே பிளவுகள் தோன்றும். அத்தோடு ஈகோ, யார் பெரியவர் என்ற பதவியாசை, மாற்றுக்கருத்தை மறுத்தல் என்ற இயல்பான மனிதக் கூறுகளும் சேர்ந்துகொள்ள, போராட்டங்கள் அவற்றின் மூல நோக்கத்தை விட்டு விலக ஆரம்பிக்கின்றன. எப்படி இவ்வகையாக சில்லெடுப்புகள் மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தி போராட்டங்களின் நோக்கங்களைச் சிதறடிக்கின்றன என்பதும் கதைகளின் அடி நாதமாகவே ஒலிக்கிறது. டெல்சுலாவின் கதைகள் முழுதிலும் இந்த ஆதங்கத்தைக் காணமுடியும். சிலர் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்றே புரிந்துகொள்ளமுடியவில்லை. ரஜனி திரணகமவும் கந்தன் கருணையும் அடிக்கடி ஞாபகத்தில் வந்து போகிறது. சகோதரக் காட்டிக்கொடுத்தல்களும் படுகொலைகளும் சாதாரணமாக நிகழ்கிறது. இதனைக் கேள்வி கேட்பவர்களும் கொல்லப்படுகிறார்கள். ஈழப்போராட்டத்தின் வரலாற்றோடு பெரிதும் பொருந்திப்போகக்கூடிய போராட்ட வரலாறு இந்த நிலப்பகுதியினருக்கும் இருக்கிறது. அதிலும் ஒரு போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் வெறும் தற்செயல்கள் அல்ல என்பது பிறிதொரு போராட்டத்தின் தோல்வியை அறியும்போது புரிகிறது. நம் போராட்டத்தின் சிறு கண்ணாடி இந்நூல். அதற்காகவே வாசிக்கப்படவேண்டியதும்.
தொகுப்பின் இறுதிச் சிறுகதை ‘பறத்தல்’.
“பறந்து போ. நீ இப்போது உனக்கான உன்னுடைய உலகத்தில் இருக்கிறாய். உன் விதியை நோக்கி நீ பறந்து செல், என்று என்னுள் இருந்த புழு என்னைத் தூண்டிக்கொண்டிருந்தது” என்று அந்தக் கதை முடிவடைகிறது. ஒரு வண்ணாத்திப்பூச்சிக்குள்ளிருக்கும் புழுவின் உறுத்தல் அது. டென்சுலா சொல்கின்ற தனி மனித விடுதலைக்கான அறைகூவல். உனக்கிருப்பது ஒரு வாழ்வு. அதனை நீ புழுவாகவே கழிவிரக்கத்தோடும் குற்றவுணர்வோடும் ஓரிடத்தில் வாழ்ந்து கழிக்கப்போகிறாயா அல்லது பறந்து விடுதலையாகி உன் வாழ்வைப் பார்க்கப்போகிறாயா என்பதுதான் அதன் ஆதாரம். இது வெறுமனே தப்பித்தல் அல்ல. அத்தனை அழிவுகளையும் போராட்டங்களின் தோல்விகளையும் கண்ணுற்ற மனுசியிடமிருந்து வரக்கூடிய மந்திர வார்த்தை அது. நம் பலருக்கும் அது பாலபோதினி.
***
மெல்பேர்ன் வாசகர் வட்டத்தின் சித்திரை மாத அமர்வில் இத்தொகுப்பு கலந்துரையாடப்பட்டது.
Comments
Post a Comment