இந்து மதத்தின் சாதிய அமைப்பில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இந்து மதத்தின் அதிகாரத்துக்கு எதிராக பௌத்தத்தைத் தம் ஆயுதமாக எடுத்துக்கொள்வதை நம்மில் பலர் கவனித்திருக்கக்கூடும். அவர்களுடைய கூட்டங்களில் பௌத்தம் பற்றிப் பேசப்படும். நேர்காணல்களில் அவர்களுக்குப் பின்னே புத்தர் வீற்றிருப்பார். இச்சிக்கல்களைப் பேசும் திரைப்படங்களில் புத்தர் சிலைகளைக் கவனிக்கமுடியும். இதற்கு ஆரம்பப்புள்ளி வைத்தது அம்பேத்கர். அவர் இலங்கைக்கும் பர்மாவுக்கும் சென்று பௌத்த துறவிகளின் கூட்டங்களில் கலந்துகொண்டு பின்னர் நீண்ட யோசனைக்குப் பின்னர் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார். இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று பௌத்தம் பிறப்பின் நிமித்தம் பிரிவினைகளைச் செய்யாது அனைவரையும் சமனாக ஏற்றுக்கொள்கிறது என்பதாகும்.