Skip to main content

தமிழ் ஆங்கிலேயர்கள்

எனக்கு நீண்டகாலமாகவே ஒரு பிரச்சனை இருந்துவருகிறது. நான் ஓரளவுக்கு ஆங்கிலத்தைச் சரளமாகத் தொடர்பாடல் செய்யக்கூடியவன். ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக்கொண்டுள்ளவர்களோடு ஒரு உரையாடலையோ அல்லது பிரசெண்டேஷனையோ செய்வது அவ்வளவு சிக்கல் கிடையாது. 

ஆனால் யாரேனும் தமிழ் தெரிந்தவர் என்னோடு ஆங்கிலத்தில் உரையாடத்தொடங்கினால் என்னுடைய ஆங்கிலம் திக்கித்திணற ஆரம்பித்துவிடுகிறது. எதிரிலே பேசுபவருக்கு நன்றாகத் தமிழ் தெரியும் என்று அறிகின்ற பட்சத்தில் குஷ்புவைகண்ட அண்ணாமலை ரஜனிக்காந்த்மாதிரி "பே பே" என்று திணற ஆரம்பித்துவிடுகிறேன். இது ஏன் என்று தெரியவில்லை.

பாடசாலை நாட்களில் மகாலிங்கம் சேர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதில் தெரிந்தாலும் பேசாமல் இருப்போம். எங்கேயாவது பிழையாகக்கதைத்துவிட்டால் முழு வகுப்புமே நோண்டியாக்கும் என்ற நினைப்பே மிரட்டிக்கொண்டிருக்கும். தட்டுத்தடுமாறி சரியாகத்தான் யோசித்திருக்கிறோம், கை எழுப்புவோம் என்று முடிவெடுக்கும் சமயத்தில் இன்னொரு நாதாறி எழுந்து தப்புத்தப்பாகப் பதில் சொல்ல மொத்த வகுப்போடு நானும் சிரித்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவேன். ஆங்கில வகுப்பில் ஆங்கிலத்தில் மாத்திரமே என்று பேசவேண்டும் என்று ரூல் போட்டால் பாத்ரூம் போகவேண்டும் என்றாலும் காற்சட்டை நனைஞ்சாலும் பரவாயில்லை என்று வகுப்பு பெல் அடிக்கும்வரையும் காத்திருப்போம். 

ஆங்கிலத்தை இலக்கணச்சுத்தமாகப் பேசவேண்டும் என்ற மனநிலை. அதை ஒரு தொடர்பாடல் ஊடகமாகக் கருதாது பாடமாக, சமூக அந்தஸ்தாக உருமாற்றியதன் விளைவே யாழ்ப்பாணத்தில் இருக்கும்வரையிலும் நன்றாக எழுத வாசிக்கத்தெரிந்தாலும் பேச்சறிவு என்பது அதிகம் படிக்காத ஹவுஸ் ஒப் பாஷன் செக்கியுரிட்டியின் பேச்சுத்திறமையைவிட மோசமாக இருந்தது. பிற்காலத்தில் பிறமொழிக்காரருடன் வாயைத்திறந்தேயாகவேண்டிய நிலையில்தான் ஆங்கிலப்பேச்சு வசத்துக்குள் வந்தது. 

ஆனால் இன்றைக்கும் யாரேனும் தமிழ் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் உரையாடினால் எனக்கு மகாலிங்கம் சேரின் வகுப்பே ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவுஸ்திரேலியாவில் பொலீஸ்காரரைக் கண்டால் ஸ்ரீலங்கா பொலிஸ் ஞாபகத்தில் தலை தன்னிச்சையாக பயத்தில் குனிவதுபோலத்தான் இதுவும். அதுவும் நான் படித்தது சென்ஜோன்ஸ் கல்லூரியாததால் மெல்பேர்னில நிறைய யாழ்ப்பாணத்து அந்தக்கால பழைய மாணவர்களைச் சந்திக்க நேருகிறது. "ஹாய் ஐ ஆம் சோ அண்ட் சோ" என்று அவர்கள் ஆரம்பிக்க, சபை குழப்பக்கூடாது என்று "ஹாய் , ஜேகே , நைஸ் டு மீட் யு" என்பேன். பேச்சு ஆங்கிலத்திலேயே தொடர எனக்கு ஆர்மிச் சென்றியில் ஐஸியை மறந்துபோய் நிற்கின்ற நிலை. ஒவ்வொரு வார்த்தையையும் வசனத்தையும் சரியாக உச்சரிக்கிறோமோ என்கின்ற பிரக்ஞை வந்துவிடும். தவறாகப் பேசினால் இவர் என்னை மட்டமாக நினைப்பார் என்ற எண்ணம் எட்டிப்பார்க்கும். தமிழ் அல்லாதவர்களோடு இந்தப்பிரச்சனை வருவதில்லை. அவர்கள் மொழியை ஊடகமாகப் பயன்படுத்துவதால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பதையே கவனிப்பார்கள். நான் சரியாகப் பேசுகிறேனா இல்லையா என்பதைப்பற்றி கணக்கே எடுக்கமாட்டார்கள். இதனாலேயோ என்னவோ நமக்கும் மொழி சரளமாக வாயுள் நுழைந்துவிடும்.

முன்னரும் ஒருமுறை சொன்னதுதான்.பார்ட்டிகளில் தெரியாத்தனமாக யாரேனும் தமிழ் ஆங்கிலேய ஆர்மிக்காரனுக்கு ஐஸி காட்டிக்கொண்டு நிற்கையில் அந்தநேரம் பார்த்து ஒரு அவ்ரோ வரும். "ஹி இஸ் எ பேமஸ் ரைட்டர்" என்று ஒரு பீக்குண்டைப்போட்டுவிட்டு அதுபாட்டுக்கு எஸ்கேப்பாகிவிடும். அப்புறம் நம் நிலைமை நாற்றமெடுக்கும்.
"Oh that's great. What do you write?"
"Errrr.... pretty much anything."
"Oh, where do you write? Have you published any?"
"Just in my website. Padalay."
"Oh Padalay, Tamil word .. So you just write in Tamil. Is Padalay a fence or a gate?"
"Neither, its just a bloody website!"
அவருக்கு ஜோக் விளங்காது. ரம்பத்தைத் தொடருவார்.
"Is that folk Jeyakanthan still writing? He was good in our time. His Ponniyin Selvan was excellent. What is he writing these days?"
"He is writing a novel called Ven Murasu .. you know, a white drum!"
"Sounds like Donald Trump!"
தான் அடித்த மொக்கை ஜோக்குக்கு, வாழ்க்கையில் முதன்முதலாக பிழையில்லாமல் கம்மாஸ் அடித்ததுபோல அவர் பெருமையாகச் சிரிக்க நான் சாம் ஏவுகணையுடன் அந்த கோர்த்துவிட்ட அவ்ரோவை கூட்டத்தினுள் தேடஆரம்பிப்பேன்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக