Skip to main content

பாலு மகேந்திரா

 

balumahendra

அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளின் முன்வீட்டில் ஒரு விடலைப்பையன் வசிக்கிறான். இவர்கள் வீட்டில் புத்தகம் வாங்க வருவான். இவளோடு சேர்ந்து விளையாடுவான். அக்கா அக்கா என்று கூப்பிடுவான். இவளது தாபம் அவன் மீது மோகமாய் திரும்புகிறது. ரீடர் படத்தின் கேட் வின்ஸ்லட்டின் நிலைமை. ஒருநாள் அவன் கிணற்றடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அவள் குளிக்கப்போகிறாள். சூழவும் வாழைமரங்கள் நிற்கின்றன. தென்னைமரங்களும் தான். அவள் குறுக்குக்கட்டு கட்டிக்கொண்டு குளிக்கிறாள். இவனை தூண்டும் வகையில் பாவாடையை சற்று மேலே இழுக்கிறாள் .. இப்படி போகும் கதையில், ஒரு இடத்தில் படீரென்று தெளிந்தவளாய் “என்ன காரியம் செய்யத்துணிந்தேன்” என்று ஓடிப்போய் காதலனின் படத்தை எடுத்து மடியில் வைத்து அழுதுகொண்டிருப்பாள் என்று அந்த கதை முடியும்.

இந்த சிறுகதைக்கு சொந்தக்காரர் பாலுமகேந்திரா. ஈழத்து சிறுகதைத்தொகுப்பு ஒன்றில் வெளியானது. இருபது வருஷத்துக்கு முதல் வாசித்தது. வயது கொஞ்சம் அப்படி என்பதால், சிறுகதையை மீண்டும் மீண்டும் வாசித்தது. இன்றைக்கும் அந்தக்கதை ஞாபகம் இருக்கிறது.  இந்தவகை genre பாலுமகேந்திராவுக்கு பாயாசம் போல. தான் முதன்முதலில் கமராவை தொட்டுப்பார்த்தபோது அடைந்த உணர்ச்சிக்கு ஒரு உவமானத்தை பேட்டி ஒன்றின்போது சொல்லியிருந்தார். அதை இங்கே எழுதமுடியாது. அது தான் பாலுமகேந்திரா.

அந்த பாணியை அவர் திரைப்படங்களிலும் புகுத்தினார். தமிழ் திரைக்கலைஞர்களில் இமேஜ் பற்றி யோசிக்காமல் கொஞ்சமே லத்தீன், பிரெஞ்சு பாணி கதைக்களனை எடுத்து ஆண்டவர் பாலுமகேந்திரா. ஜெயமோகனின் அனல்காற்று வாசித்தீர்களா? அதிலே சந்திரா என்ற மூத்த வயதுடைய பெண்ணோடு ஒரு இளைஞனுக்கு உறவு. சிக்கலான உறவுக்கூறுகளை கொண்ட நாவல் அது.   அனல்காற்று வாசித்தவர்களுக்கு தெரியும். அதிலே ஒரு பாலுமகேந்திராத்தனம் இருக்கும். ஜெயமோகன் அதை  பாலு மகேந்திராவுக்காகவே எழுதினார். ஏனோ அது படமாக்க ப்படவில்லை. வாசிக்கும்போது கொஞ்சம் சதிலீலாவதி காட்சிகள் கிளைமாக்ஸில் எனக்கு ஓடியது. அதுவே படமாக்கப்படாததற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஐம்பத்திரண்டு சிறுகதைகளை அவர் “கதைநேரம்” தொடராக டிவியில் கொடுத்தது முக்கியமானது. முன்னுதாரணமாகவும் கடைசி முயற்சியாகவும் போனது.

ilayarja_balu_mahendra

அவர் படங்களில் இயற்கை சத்தங்கள் அதிகமாக இருக்கும். அமைதியின் வெம்மையில் காது கிழியும். கேட்டடியிலிருந்து வீட்டுக்குள் போகும் மூன்று செக்கனுக்குள் தேவையில்லாமல் பேஸ் கிட்டாரும் வயலினும் முழங்காது. சருகு மிதிபடும் சத்தமே கேட்கும். ஸ்லோ மெலடி டிராமா வகை படங்கள் அவருடையது. நகைச்சுவையாக எடுத்த சதிலீலாவதியில் கூட இந்த பாணியே இருக்கும். அவர் இயக்கிய திரைப்படங்களில் “வீடு” இம்மை மறுமை இல்லாமல் எனக்கு பிடிக்கும்.   “மறுபடியும்” முடிவு என்ன என்று தனியாக ஒரு தீஸிஸ் எழுதுவேன். மூன்றாம் பிறை அதன் முடிவின் லொஜிக் இடிப்பதால் அவ்வளவு கவரவில்லை. பின்னை நாளில் அவர் படங்களில் இருந்த புத்திசாலித்தனம் மூன்றாம் பிறையில் இல்லை. ஆனால் மேக்கிங் மேக்கிங் தான். அது ஒரு கனாக்காலமும் டிபிக்கல் பாலுமகேந்திரா படம்.  சந்தியாராகம், கறுப்பு வெள்ளையில் எழுதப்பட்டிருக்கும். எவ்வளவு ஸ்பஷ்டமாக இருக்கிறது. போர்ட்ரைட் ஓவியங்களின் டைம்லாப்ஸ் போன்று அவ்வளவு படிமம்.

ராஜாவையும் இவரையும் பிடிக்கமுடியாது. “தும்பி வா” ஒன்றே போதும் இவர்கள் செய்த பரிசோதனைகளை அறிந்துகொள்ள. "ஏய் சிந்தகி களல காலே" பாட்டின் குளிர்மையை எவன் மறப்பான்? என் இனிய பொன் நிலாவே ,  ராஜ ராஜ சோழன் நான், கண்ணே கலைமானே, இள நெஞ்சே வா என்று ராஜா, ஜேசுதாஸ் பாலுமகேந்திரா கூட்டணி எப்போதுமே நெஞ்சை கொள்ளை கொள்ளும் கூட்டணி. ராஜாவின் "பொத்திவச்ச மல்லிகை"யையும், “காற்றில் எந்தன் கீதத்”தையும், "காதல் ஓவியத்தை”யும், “தும்பி வா” வையும் ஹிந்திக்கு கொண்டுபோக செய்தவர். இந்தக்கூட்டணியின் சின்ன சறுக்கல் என்றால் அது வீடு தான். உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றான வீடு படத்துக்கு ராஜாவின் How to name it வயலின் பயன்படுத்தப்பட்டிருக்கும். அது கதையின் போக்கிற்கு குறுக்காக முழிந்துகொண்டு நிற்கும். பலருக்கு பிடித்தது. எனக்கு அந்த பின்னணி இசை ஒரு கவனக்கலைப்பான்.

ஒரு தேர்ந்த இலக்கியவாதி சினிமாவுக்குள்ளும் நின்று அடித்து ஆடலாம். தமிழிலும் கூட அது சாத்தியமானது என்று நிரூபித்தவர் பாலுமகேந்திரா. இவரும் மகேந்திரனும் இலக்கியரசிகர்களை திரைப்படம் பார்க்கவைத்தார்கள். சிறுகதைகளை, நாவல்களை திரையில் கொண்டுவந்தார்கள். திரைப்படம் ஒன்றும் தீண்டப்படத்தகாத ஜந்து இல்லை என்றார்கள். படைப்பிலே சமரசங்களை செய்யத்தயங்கினார்கள். இலக்கியத்தின் நீட்சி தான் சினிமா என்ற நிலைமையை ஏற்படுத்த முயன்றார்கள். அதற்காக நேர்மையான பாசாங்குகள் எதுவுமற்ற திரைப்படங்களை கொடுக்க முயன்றார்கள்.

பாலுமகேந்திரா என்ற கலைஞனின் படைப்புகளை கொண்டாடுவோம்.

Director-Balumahendhira-1

&&&&&&&&&&&&&&&&&&

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக