“மரங்கள் குழுக்களாகவே வாழ்கின்றன. மனிதர்களைப்போல. ஒரு மரத்தை அதன் குழுவிலிருந்து பிரித்து வேறொரு இடத்தில் கொண்டுபோய் நடுவது என்பது ஒரு மனிதரை தன்னுடைய இனக்குழுவிலிருந்து பிரித்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டுசென்று வளர்ப்பதுபோன்றது. மரங்கள் அப்போது அகதிகளாக்கப்படுகின்றன.” “My People’s Dreaming”. அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வாழ்வு எப்படி இயற்கையோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது என்பதைப் படங்களோடு சேர்த்து விளக்கும் புத்தகம் இது. யூலின் தேசத்துப் பழங்குடியின் மூத்தவரான மக்ஸ் டுலுமன்முன் என்பவரோடான உரையாடல்களின் தொகுப்பே இந்த நூலாகும். புத்தகம் முழுதும் அங்கிள் மக்ஸ் பழங்குடி மனிதர்களின் நிலத்தினுடனான உறவை விரிவாக விளக்குகிறார்.