Skip to main content

அஞ்சலிகள்

அஞ்சலிகள் சார்ந்து பல்வேறு குழப்பங்கள் எனக்கு இருந்து வந்திருக்கின்றன. ஒரு மனிதரை வாழும்போதே கொண்டாடவேண்டும். இறந்தபின் செலுத்தப்படும் அஞ்சலிகள் மற்றவர்களுக்கானவை. இப்படி இப்படியெல்லாம் நீ சாதித்துவிட்டுப்போனால் இறந்தபின்னும் வரலாறு கொண்டாடும், ஆகவே சும்மா இருக்காதே என்று இருப்பவனை தூண்டிவிடும் செயல்களே அஞ்சலிப் புகழுரைகள். எஸ்பொ நினைவு நிகழ்விலும் நான் இதனை குறிப்பிட்டிருந்தேன். நாமெல்லாம் இப்படி அவரைக்கொண்டாடும்போது மனுஷன் பக்கத்தில் அமர்ந்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருக்கும் என்று. சார்வாகன் நினைவஞ்சலியில் சாரு ஒருபடி மேலே போயிருந்தார். "திட்டினாலும் பரவாயில்லை, எழுத்தாளர் உயிரோடு இருக்கும்போதே அவரை உட்கார்த்தி வைத்து திட்டுங்கள். நான் செத்தபின்னர் எவனாவது அஞ்சலிக்கூட்டம் வையி, ஆவியா வந்து துரத்தியடிப்பேன்" என்று சாரு பொருமியிருந்தார்.

முன்னமும் எழுதியிருந்தேன். Tuesdays With Morrie நூலில் வயோதிபரான Morrie தனக்குத்தானே மெமோரியல் சேர்விஸ் செய்வார். நண்பர்கள் எல்லோரும் பூங்கொத்தோடு வந்து அஞ்சலி உரைகள் செய்வார்கள். எல்லாத்தையும் கேட்டு மனுஷன் சந்தோசமாக அன்றைய நாளைக் கழிக்கும்.

ஒருவிதத்தில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற வஸ்துகள் அதற்காகவே உருவாக்கப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் லூசுப்பயலுகளுக்கு அவற்றைக்கொடுப்பதால் வலுவிழந்துவிட்டன.

ஒரு எழுத்தாளரை வாழும்போது கொண்டாடுவதில் என்ன தர்மசங்கடம் இருக்கப்போகிறது? எழுத்தாளர்கள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. எல்லோரும் முழுமையானவர்களும் கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் எந்த எழுத்தாளர்களையும் நாங்கள் கடந்துவரவே வேண்டும். அதுதான் அவர்களுடைய எழுத்துக்குப் பெருமை. ஒருத்தர் செங்கை ஆழியானோடோ ஜெயமொகனோடோ சுஜாதாவோடோ தங்கிவிட்டால் அது அவர்கள் எழுத்தின் குறைபாடாகவே பார்க்கவேண்டும். ஆகவே எழுத்தாளர்கள் வாசகர்களுக்குக் கொடுத்த அதி உயர் தருணங்களுக்காகவே நினைவு கூறப்படவேண்டும். இளையராஜாவை கொண்டாடுவது "தென்றல் வந்து என்னைத்தொடும்" தந்தமைக்காவே. "எடக்கு முடக்கான சரக்குக்கு" அல்ல.
எந்தப்பெரிய கலைஞனுக்கும் அங்கீகாரம் என்பது விவரிக்கமுடியாத உணர்வு. நான் ஒரு சாதாரண வாசகன். "உங்கட எழுத்தெண்டால் மண்ணெண்ணெய் முடிஞ்சு திரி எரியிறது தெரியாமல் வாசிப்பன்" என்று சொல்லும்போது செங்கை ஆழியானின் கண்கள் பளீரென்று ஒருமுறை மின்னியது.

"சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு"

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக