Skip to main content

நிலவு காயும் முற்றமே என் வீடு

 

1 

நிலவு வேகமாய் எங்கோ
நகர்ந்து கொண்டிருந்தது.
திமிங்கிலத்திடமிருந்து
திமிறியோடும்
சிறுமீன்போல,
முகில்களுக்குள் ஒளிந்து ஒளிந்து
நிலவும் விரைந்து கொண்டிருந்தது.

“நீயும் தொலைந்து விட்டாயா?”

ஒரு சிறுவனின் குரல்.

“எம்மோடு கூட வருகிறாயா?”

நிலவு குனிந்து பார்த்தது.

சமுத்திரக்காட்டினுள்
திக்குத்தெரியாமல்
தரித்து நின்றது ஒருபடகு.
பாதை தேடிய பயணம் ஒன்று
ஆழிநடுவே தத்தளித்தது.
முந்நூறு அகதிகள்.
மூவாயிரம் கனவுகள்.
நிறைமாதக் கர்ப்பிணியாய்
பரிதவித்தது படகு.
பல்லின தேசங்கள் பல
பத்தடிப் படகினுள்ளே
சத்தமின்றி முடங்கிக்கிடந்தன.
விடுதலைப் போராட்டங்கள்
கடுங்குளிர் தாளாமல்
விறைத்துக் கிடந்தன.

வறுமை துரத்திய வறுமை.
மனிதம் துரத்திய மனிதம்.
அதிகாரம் துப்பிய உயிர்கள்.
கூதல்காற்று தாளாமல்
போர்த்துக்கிடந்தன.

மண் நிராகரித்த மனிதர்களை
வாரிவிழுங்கி ஏப்பமிட
கோரப்பசியுடன்
கடல் காத்திருந்தது.

“எம்மோடு கூட வருகிறாயா?”

நிலவு தயங்கியது.

"அப்துல்லா.மதுமதி.
அலான், நுவேன்.
எல்லோரும் சேர்ந்து
விளையாடலாம்.
என் வீட்டுக்கு வருகிறாயா?"

நிலவு யோசித்தது.

"உன் வீடு எது?"
"இப்படகுதான்"
"நேற்று?"
"அது வேறு படகு"
"அதற்கு முதல்?"
"அகதி முகாம்"
"அதற்கும் முதல்?"
"இன்னொரு அகதிமுகாம்"
"நீ பிறந்தது எங்கே?"
"அதுவும் அகதிமுகாம்"

"நித்தம் ஒரு முகாமென
நிர்க்கதியாய் அலைகிறாயே?
வீடற்ற உன்னிடத்தில்
நான் எப்படி வருவது?”

நிலவது கேட்டது.

"இல்லையே.
என்றைக்கும் என் வீடு ஒன்றுதான்.
என் அன்னை சொல்லியுள்ளாள்.
நிலவு காயும் முற்றமே என் வீடு.
சமயத்தில் அது கொட்டிலாகும்.
குண்டு வெடித்தால் தட்டியாகும்.
திறந்தவெளி பதுங்குகுழி
பயந்தொதுங்கும் பற்றைக்காடு
பனி பொழிந்தால் தரப்பாள் போர்வை
பாலைவனத்துப் பாய் விரிப்பு.
நடுக்காட்டின் மரவுச்சி.
சமுத்திரத்தில் சிறுபடகு.
எங்கெலாம் போனாலும்
என் வீட்டு முற்றத்தில்
எப்போதும் நிலவிருக்கும்.
என்றைக்கும் என் வீடு ஒன்றுதான்.

நிலவு காயும் முற்றமே என் வீடு.
எம்மோடு வருவியா?”

ஆயுள் முழுதும் நிர்வாணியாய்
ஆளே அற்ற தனிமரமாய்
பொட்டவெளி வானத்தில்
வெட்டிக்கழித்தது போதும் இனி.
இறங்கிவந்த நிலவு
சிறுவனுக்கு அருகே
நெருங்கி விழுந்தது.

முகில்கள் பொழியும் மழை.
மழையும் உறையும் குளிர்.
குளிரில் நடுங்கியது நிலவு.
நிலவை அணைத்தனன் சிறுவன்.
குழந்தையின் வெதுவெதுப்பில்
முழுநிலவு
மூன்றாம்பிறையெனக் குறண்டிக்கொண்டது.

கரையறியா கடல்பயணம்.
காத்திருப்பில் நாழிகையும்
நாட்கணக்கில் நீண்டுபோனது.
ஆழ்கடலில் அற்புதம் நிகழ்த்தவரும்
மீட்பருக்கான காத்திருப்பு அது.

விண்ணிலிருந்து ஒரு அசரீரி.
இன்னுமொரு அவதாரம்.
இரவலாக ஒரு ரொட்டித்துண்டு.
கானல்நீராய் ஒரு கரையேனும்
காணக்கிடைக்காதா?

ஆழ்கடலில் அற்புதம் நிகழ்த்தவரும்
மீட்பருக்கான காத்திருப்பு அது.

அதிசயமாய்
சென்றவர்கள் வந்தார்கள்.
”வந்தவழியே திரும்பிச் செல்லு” - என
சொல்லிவிட்டு மறைந்தார்கள்.
வெட்டவெளி கடல்தனிலே
வந்தவழி ஏது?
சென்றவழி ஏது?”

திகைத்தது நிலவு.

"விடிவென்பதே இல்லையா நமக்கு?"

"நிலவுக்கு ஏது விடிவு?
விதித்தது இதுவே எமக்கு.
என்னோடு நீயிருந்தால்
இல்லை ஏதும் இல்லை எனக்கு.
நிலவு காயும் முற்றமே என்வீடு.

வெண்ணிலவும் சிறுவனோடு
நிர்மலமாய் தூங்கிப்போனது.

Alyan-Kurdiகரைகள் வெறுத்தாலும்
அலைகள் விடுவதில்லை.
அலைகள் எதிர்த்தாலும் – கரைசேரும்
கனவுகள் கலைவதில்லை.

கிழக்கு வெளித்தது.
மேற்கின் கரையில்
நிலவோடு ஒதுங்கியது
சிறுவனது சடலம்.

அப்போதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது
அவன் குரல்.

நிலவு காயும் முற்றமே என் வீடு.

 


இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்கான அமைப்பு நடத்திய அனைத்துமொழிக் கவிதை வாசிப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கவிதையில்  தமிழ் வடிவம்.

கவிதையின்  ஆங்கில வடிவம்.

Home Sweet Home.

படங்கள் (For Fair Use for non commerical Purpose)
Murat Sayin
Steve Dennis

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக