Skip to main content

பரி. யோவான் பொழுதுகள் - ஜூட் பிரகாஷ்




பள்ளி நினைவுகளுக்கு வயதாவதேயில்லை.
 
பசுமரத்தாணிபோல அவை நம்முள் புதைந்துபோய் மீட்டும்பொழுதெலாம் சுகமான வலியைக் கொடுத்து மாய்த்துவிடுகின்றன . வழுக்கைத் தலையும் வண்டித் தொப்பையுமாய்க் கிழப்பருவமெய்திய பின்னுங்கூட நம் பள்ளி நண்பர்கள் மட்டும் காற்சட்டையிலும் அரும்பு மீசையிலும் காட்சி கொடுப்பதன் மாயமெதுவோ யாமறியோம். அறுபது வயதாகிப் பேரப்பிள்ளையையும் கண்டபின்னருங்கூட நம் வயது சுண்டிக்குளிப் பெட்டைகள் என்னவோ இன்றும் நல்லூர் வடக்குவீதியில் ஹாஃப் சாறி அணிந்து உலா வரக் காண்கின்ற அதிசயமும் ஏதறியோம்.
 
பள்ளி நினைவுகளுக்கு வயதாவதேயில்லை.

ஜூட் அண்ணாவின் ‘பரியோவான் பொழுதுகள்’ அந்த பசுமரத்தாணியை மீளவும் நமக்குள் அருட்டிவிடுகிறது. நான் பரியோவானில் படித்த காலமும் ஜூட் அண்ணாவின் காலமும் வேறு வேறு. ஆசிரியர்களும் பலர் வேறு. பிக் மட்ச்சின் ஹீரோக்கள் வேறு. நாட்டுச் சூழலுங்கூட கொஞ்சம் வேறு. ஆனால் பதின்மம் என்னவோ ஒன்றுதான். அந்தப் பதின்மத்துக்கேயுரிய அனுபவங்கள் ஒன்றுதான். பெயர்கள் மாறினாலும் மனிதர்களும் ஒன்றுதான். இதே கதைதான் பத்திரிசியானுக்கும் யாழ் இந்துக்காரனுக்கும் கொழும்பு இந்துக்காரனுக்கும் இருந்திருக்கக்கூடும். ஏன் வேம்படி மகளிருக்கும் உடுவிலின் பெண்களுக்கும்கூட இவை ஒன்றாக இருக்கவே சாத்தியம் அதிகம். இன்னும் சொல்லப்போனால் உலகம்பூராவும் பள்ளிப்பருவத்தினரது கதை இதுவாகவே இருக்கக்கூடும்.
ஜூட் அண்ணா தன் மகன்களுக்கு பரியோவானின் சீருடை அணிந்து அழகுபார்த்ததுபோல, ‘பரியோவானின் பொழுதுகள்’ நூலும் நமக்குச் சீருடையும் சாப்பாட்டுப்பெட்டியும் டிரிங்ஸ் பொட்டிலும் கொடுத்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறது. பாடசாலை முடிந்தபின்னும் வீடுபோகாமல் நின்று மைதானத்தில் விளையாடியதுபோல, வாசித்து முடித்தபின்னும் மனம் பள்ளிப்பருவத்திலேயே தரித்துவிடுகிறது.


வீடு மீள விருப்பேயின்றி.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக