Skip to main content

பரி. யோவான் பொழுதுகள் - ஜூட் பிரகாஷ்




பள்ளி நினைவுகளுக்கு வயதாவதேயில்லை.
 
பசுமரத்தாணிபோல அவை நம்முள் புதைந்துபோய் மீட்டும்பொழுதெலாம் சுகமான வலியைக் கொடுத்து மாய்த்துவிடுகின்றன . வழுக்கைத் தலையும் வண்டித் தொப்பையுமாய்க் கிழப்பருவமெய்திய பின்னுங்கூட நம் பள்ளி நண்பர்கள் மட்டும் காற்சட்டையிலும் அரும்பு மீசையிலும் காட்சி கொடுப்பதன் மாயமெதுவோ யாமறியோம். அறுபது வயதாகிப் பேரப்பிள்ளையையும் கண்டபின்னருங்கூட நம் வயது சுண்டிக்குளிப் பெட்டைகள் என்னவோ இன்றும் நல்லூர் வடக்குவீதியில் ஹாஃப் சாறி அணிந்து உலா வரக் காண்கின்ற அதிசயமும் ஏதறியோம்.
 
பள்ளி நினைவுகளுக்கு வயதாவதேயில்லை.

ஜூட் அண்ணாவின் ‘பரியோவான் பொழுதுகள்’ அந்த பசுமரத்தாணியை மீளவும் நமக்குள் அருட்டிவிடுகிறது. நான் பரியோவானில் படித்த காலமும் ஜூட் அண்ணாவின் காலமும் வேறு வேறு. ஆசிரியர்களும் பலர் வேறு. பிக் மட்ச்சின் ஹீரோக்கள் வேறு. நாட்டுச் சூழலுங்கூட கொஞ்சம் வேறு. ஆனால் பதின்மம் என்னவோ ஒன்றுதான். அந்தப் பதின்மத்துக்கேயுரிய அனுபவங்கள் ஒன்றுதான். பெயர்கள் மாறினாலும் மனிதர்களும் ஒன்றுதான். இதே கதைதான் பத்திரிசியானுக்கும் யாழ் இந்துக்காரனுக்கும் கொழும்பு இந்துக்காரனுக்கும் இருந்திருக்கக்கூடும். ஏன் வேம்படி மகளிருக்கும் உடுவிலின் பெண்களுக்கும்கூட இவை ஒன்றாக இருக்கவே சாத்தியம் அதிகம். இன்னும் சொல்லப்போனால் உலகம்பூராவும் பள்ளிப்பருவத்தினரது கதை இதுவாகவே இருக்கக்கூடும்.
ஜூட் அண்ணா தன் மகன்களுக்கு பரியோவானின் சீருடை அணிந்து அழகுபார்த்ததுபோல, ‘பரியோவானின் பொழுதுகள்’ நூலும் நமக்குச் சீருடையும் சாப்பாட்டுப்பெட்டியும் டிரிங்ஸ் பொட்டிலும் கொடுத்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறது. பாடசாலை முடிந்தபின்னும் வீடுபோகாமல் நின்று மைதானத்தில் விளையாடியதுபோல, வாசித்து முடித்தபின்னும் மனம் பள்ளிப்பருவத்திலேயே தரித்துவிடுகிறது.


வீடு மீள விருப்பேயின்றி.

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.