Skip to main content

உஷ்... இது கடவுள்கள் துயிலும் தேசம்!

அன்றைக்கு அவளுக்கு இரசாயனவியல் பரீட்சை நாள். தனியே எம்.ஸீ.கியூ மாத்திரமே என்பதால் பதினோரு மணிக்கெல்லாம் பரீட்சை முடிந்துவிடும். பரீட்சைத் தாள்களைக் கொடுத்துவிட்டு, நண்பிகளுடன் கதைப்பட்டு, சைக்கிளை எடுத்து உருட்டிக்கொண்டு, ஆடி அசைந்தபடி அவள் பாடசாலை கேற்றடிக்கு வந்துசேரும்போது மணி பதினொன்று இருபது ஆகிவிடும். பதினொன்று இருபத்திரண்டுக்கு அவளது சைக்கிள் பழைய பூங்கா வீதிக்குள் நுழையும். அது ஒரு பச்சை வண்ண ஏசியா சைக்கிள். அவள் அந்தச் சைக்கிளில் செல்லும் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம். அதன் ஹாண்டிலை பிடிக்கின்ற விதமோ அல்லது இயல்பாகவே அவளிடமிருந்த ஒரு எடுவைக் குணமோ தெரியாது, சைக்கிள் ஓடிக்கொண்டு போகும்போது அவளது உடலும் தலையும் ஏதோ அணிவகுப்பில் செல்வதுபோல நிமிர்ந்தே நிற்கும். எதுவுமே அழகுதான். சைக்கிள் உழக்கும்போது. காற்றில் பறக்காதவாறு தன் பாடசாலைச் சீருடையை ஒருகையால் பக்குவமாக அடக்கும்போது. அவ்வப்போது தலை திருப்பாமலேயே பின் கரியரில் புத்தகப்பை நழுவாமல் இருக்கிறதா என்று கையால் செக் பண்ணும்போது. மழை நாளில் ஒரு கையால் குடை பிடித்தபடியே மறுகையால் இலாவகமாக ஹாண்டில் பிடிக்கும்போது. பக்கத்தில் கூடவருகின்ற நண்பி ஏதும் சொல்லும்போது திரும்பிப்பார்த்து மெல்லிதாகச் சிரிக்கும்போது. தன்னுடைய பொப்ஃட் வெட்டு தலைமயிரை அடிக்கடி வாகாகக் கோதிவிடும்போது. எல்லாவற்றிலும் ஒரு நளினம். நிதானம். அழகு. அவள் நினைவை விலக்கவே முடிவதில்லை. இது கூடாது என்று தெரிகிறது. எனக்கும் இது பரீட்சைக் காலம். இப்படி அவளுக்குப் பின்னாலேயே சுத்திக்கொண்டு, அவளைப்பற்றியே நினைத்துக்கொண்டு திரிவது சத்துரு என்று நன்றாகவே விளங்குகிறது. ஆனாலும் அவள் நினைப்பை அகற்ற முடியவில்லை. அவளைப் பார்த்து ஒரு கிழமையானதில் படபடப்பு மேலும் கூடுகிறதே ஒழிய குறைவதாய்க் காணும். கண்ணாடி பார்க்கையில் என் முன்பக்க மயிர் சாதுவாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. பத்தொன்பது வயதிலேயே இள வழுக்கை. என் அப்பாவைப்போலவே. அவள் கவனித்திருப்பாளோ? அவள் ஏன் என்னைப் போய்க் கவனிக்கப்போகிறாள்? எனக்கேன் இப்படியெல்லாம் யோசனை வருகிறது? பரீட்சைக்குப் படிப்பதை விட்டுவிட்டு ஏன் இப்படி கண்ணாடி முன்னால் என்னையே பார்த்துக்கொண்டு? அவளைப்பற்றியே நினைத்துக்கொண்டு. ஏன் அவள் என்னைப்போட்டு இப்படி சிப்பிலி ஆட்டுகிறாள்? கழுதை.

தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு கள்ளப்பூனைபோல சைக்கிளடிக்குப் போனேன். பின் பத்தியிலிருந்து அம்மாவின் குரல் துரத்தி வந்தது.

“தம்பி, சோதினைக்கு ஒரு கிழமைகூட இல்லை. அதுக்குள்ள எங்கை ஊர் அடிபுன்ன வெளிக்கிட்டாய்?”

மனிசி கண்டுவிட்டது. இனி விடாது.

“இல்லையன, இக்கொனமிக்ஸ்ல சின்ன டவுட் ஒண்டு. ஒருக்கா சுதர்சன் வீட்டாண்டை..”

சொல்லி முடிக்குமுன்னமே அம்மா வாசலுக்கு வந்துவிட்டார்.

“அப்பன், இன்னும் கொஞ்சநாளைக்குத்தான். பல்லைக் கடிச்சுக்கொண்டு படிச்சிட்டாய் எண்டால் பிறகு கரைச்சல் இல்லை”

இனி நிற்கமுடியாது. புராணம் ஆரம்பித்துவிடும். நான் பதிலேதும் சொல்லாமல் சத்தமில்லாமல் சைக்கிளை எடுத்து உருட்டிக்கொண்டுக்கொண்டு படலையடிக்குச் சென்றேன்.

“தேத்தண்ணி ஊத்திறன்.. சுருக்கா குடிச்சிட்டுப்போவன்”

“வேண்டாமனை.. நேரம் போயிட்டு”

அம்மாவிடமிருந்து பதில் வரமுன்னமேயே படலையை அடித்துச்சாத்தியபடி கிளம்பினேன்.

000

“அப்பா இந்தா டீ. குடியுங்கோ”

தேநீர் சிந்திவிடுமோ என்று கோப்பையிலேயே கண்வைத்தபடி அதனை மிகக் கவனமாக கையில் ஏந்தியபடி அடிமேல் அடிவைத்து கண்ணம்மா நடந்துவந்தாள். நான் ஏதாவது பதில் சொன்னாலே பிள்ளை தேநீரை சிந்திவிடும்போலத் தோன்றியது. மெதுவாக அவள் கைகளிலிருந்த கோப்பையை வாங்கி மேசையில் வைத்துவிட்டு அவளைத் தூக்கி மடியில் இருத்தினேன். அவளது மூக்கு நுனியை சுட்டுவிரலால் சட சடவென்று விளையாட்டாக சுண்டினேன். அப்படிச்செய்தால் அவளுக்குப் பயங்கரமாகப் பிடிக்கும். ‘கிக்கிக்கீ’ என்று சிரித்தாள்.

“வன்ஸ் மோர் அப்பா”

செய்யமுதலேயே ‘கிக்கிக்கீ’ வளைந்தாள். பார்க்கவே வியப்பாக இருந்தது. ஐப்பசியோடு கண்ணம்மாவுக்கு நான்கு வயதாகிறது என்றால் நம்பமுடியாது. வளர்ந்துவிட்டாள். வயதுக்கு மீறிய அறிவாற்றல். நிதானம். அடர்த்தியான இமை மயிர். பொப்ஃட் வெட்டிய தலைமயிர். அம்மாவை அச்சில்வார்த்து எடுத்ததுபோல. கண்டவுடன் அப்படியே மடியில் தூக்கி வைத்து உச்சி முகரச் சொல்லும் வசீகரம். கறுப்பி. அழகி. அம்மாவேதான்.

“அப்பா நீங்கள் பிளேயின்டீக்கு தாங்க்யூ சொல்லேல்ல. ஸே தாங்ஸ்”

குணத்திலும் கதையிலும்கூட தாயை உரிச்சுவைத்துக்கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது. கரணம் தவறினாலும் அதைக் குத்திக்காட்டும் அந்தக் கெலிப்புத்தி. கழுதை.

அவள் கன்னத்தில் மூச்சுமுட்ட ஒரு முத்தம் கொடுத்தபடியே சொன்னேன்.

“தாங்க்யூ கண்ணம்மா”

“மை ப்ளெஷர்”

தெளிவான பிரிட்டிஷ் உச்சரிப்போடு தோள்களை விட்டேத்தியாகக் குலுக்கினாள்.

“என்ன இப்பவே தேத்தண்ணி வருகுது, உண்ட அம்மா வெள்ளன எழும்பீட்டாபோல. இண்டைக்கு நல்லா மழை பெய்யப்போகுது.”

பாத்ரூமிலிருந்து குரல் வந்தது.

“மழை கிழை எண்ட கதையெல்லாம் விடாம ஆளை வெளிக்கிடச்சொல்லு கண்ணம்மா. இண்டைக்கு சனிக்கிழமை. நாங்கள் கங்கரூ பார்க்கப்போறதா ப்ளான். கெதியா மேசையை விட்டு ஆளை எழுப்பு”

டிஸ்கவரி சனலில் கங்காருகளை காட்டிய நாள்முதல் அவற்றை நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்று கண்ணம்மா நச்சரித்துக்கொண்டிருந்தாள். லண்டன் மிருகக்காட்சிச்சாலையில் இருக்கிறது, ஒருநாள் போய்ப்பார்க்கலாம் என்று சொல்லிவைத்திருந்தேன். அந்த ஒருநாள் இன்றாகிவிட்டது. போயே தீரவேண்டும். இல்லாவிட்டால் தாயும் மகளும் ஆளுக்கு ஒருமுகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு நாள் முழுதும் அடம் பிடிப்பார்கள்.

நான் பதில் ஏதும் சொல்லாமலிருந்ததால் கண்ணம்மா தாய் சொன்னதையே திருப்பச் சொன்னாள்.

“மலி, கிழி எண்ட கதையெல்லாம் விடாம நீங் ரெடி ஆகட்டாம் அப்பா. இண்டைக்கு சண்டே. நான் கங்கரூ பார்க்கோணும்.. வெய்ட்.. அம்மா சனிகிலமை எண்டா சண்டேதானே?”

“அத உண்ட அப்பாட்டையே கேளு. அவர்தானே எழுத்தாளர் எண்டு சொல்லிக்கொண்டு திரியிறவர்”

“அப்பா, வட் இஸ் எழுத்தாளர்?”

“எழுத்தாளர் எண்டா.. ரைட்டேர்ஸ்..இந்த ஸ்டோரி எல்லாம் எழுதிற ஆக்கள்”

கண்ணம்மா ஏதோ யோசித்தாற்போலத் தெரிந்தது.

“நீங்க என்ன ஸ்டோரி எழுதுறீங்க?”

000

தொண்ணூற்றைந்தாம் ஆண்டு வலிகாமம் இடப்பெயர்வு நாள்.

ஒட்டுமொத்த வலிகாமமும் மூட்டை, முடிச்சு, சூட்கேசுகளுடன் ஒரே நாளில் இடம்பெயர்ந்துகொண்டிருந்தது. இரவு முழுதும் பயத்தோடும் பாரத்தோடும் சைக்கிள் உருட்டிய களையோடு நான் கைதடி வந்து சேரும்போது காலை ஏழு மணி தாண்டியிருந்தது. நாவற்குழிப் பாலம் தாண்டிவிட்டதால் இனி ஆபத்து இல்லை என்று வழியில் பலர் பேசிக்கொண்டார்கள். கைதடியில் நெரிசல் சற்றுக்குறைந்திருந்தாலும் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று தெரியாததால் பயணம் மிக மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. என் சைக்கிளுக்கு காற்றுப் போய்விட்டிருந்ததில் தொடர்ந்தும் அதை நான் உருட்டியபடி நடந்துகொண்டிருந்தேன். போகும் வழியெங்கும் ஆங்காங்கே பல தண்ணீர்ப்பந்தல்கள் முளைத்திருந்தன. கோயில் திருவிழாவுக்குப்போகும் பக்தர்களுக்காக அமைப்பதுபோல. கேற்று வாசல்களில் மேசை போட்டு பானைகளிலும் வாளிகளிலும் நீர் நிறைத்து ஜக்குகளில் போகிறவர்களுக்கு வார்த்துக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சிலவற்றில் சமைத்த உணவும் கொடுக்கப்பட்டது. அவற்றில் கூட்டம் முண்டியடித்தது. சாப்பாடு தீர்ந்துவிட்டது என்று சொன்னபிறகும் சிலவற்றில் வரிசைகள் எஞ்சியிருந்தன. சில இடங்களில் பிளேன்ரீ, கோப்பி ஊற்றிக் கொடுத்தார்கள்.

அப்படி ஒரு தண்ணீர்ப்பந்தலில்தான் அவளை நான் முதன்முதலாகச் சந்தித்தேன்.

இதுதான் கணம், இவள்தான் அவள் என்கின்ற மணி ஒலி, மழைத்துளித் தருணங்கள் ஏதும் அன்றைக்கு நிகழ்ந்ததாய் ஞாபகம் இல்லை. நினைவில் மீளக்கொணரமுடியாத ஒரு கணப்பொழுதிலேயே அவளை நான் சந்தித்திருக்கவேண்டும். அவளும் நண்பிகளும் சேர்ந்து அவள் வீட்டு கேற்றடியில் தண்ணீர்ப்பந்தல் ஒன்றைச் சரிக்கட்டியிருந்தார்கள். இரண்டு மேசைகள் போடப்பட்டிருந்தன. ஒரு மேசையில் வாளி நிறைய தேசிக்காய்த் தண்ணியும் பல சில்வர் பேணிகளும் செம்புகளும் அடுக்கப்பட்டிருந்தன. உள்ளே இன்னொரு மேசையில் பலர் நின்று தேசிக்காய்களை வெட்டி, பிளிந்து தேசிக்காய்த்தண்ணி கரைத்துக்கொண்டிருந்தார்கள். மற்றொரு குழு செம்புகளையும் பேணிகளையும் கழுவி முன் மேசையில் அடுக்கிக்கொண்டிருந்தது. இன்னொரு குழு இடம்பெயர்ந்து போகிறவர்களிடம் போய் தேசிக்காய்த்தண்ணி வேண்டுமா என்று கேட்டு செம்புகளையும் பேணிகளையும் நீட்டிக்கொண்டிருந்தது.

அவளும் அப்படித்தான் என்னைத் தேடிவந்து ஒரு செம்பை நீட்டினாள்.

“தேசிக்காய்த்தண்ணி.. குடிக்கிறீங்களா?”

சின்னன் சிரிப்போடு செம்பும் கையுமாக நின்ற அந்தக் காட்சிதான் அவள் பற்றிய என்னுடைய ஞாபகங்களின் முதல் காட்சிப்புள்ளி. விடிய வெள்ளனவே தேசிக்காய்த்தண்ணி குடிக்கச்சொன்னது ஒரு மாதிரியாக இருந்தது. வெறும் வயிற்றைக் கலக்கிவிடுமோ என்று தயக்கமாக இருந்தது.

“இல்ல.. பரவாயில்ல.. வேண்டாம்”

“ராவு முழுக்க நடந்திருப்பியள்.. குடிச்சிட்டு எப்பன் களையாறிட்டுப் போகலாமே”

அதுவரை உணர்ந்திராத களைப்பு திடீரென்று எங்கிருந்தோ வந்து தோளில் ஏறி அமர்ந்துவிட்டது. கால்களும் உழைய ஆரம்பித்திருந்தன. நான் அவளிடமிருந்து செம்பை வாங்கி குடிக்கப்போனேன்.

“குறை நினைக்கக்கூடாது. கொஞ்சம் அண்ணாந்து குடிக்கேலுமா? எல்லாரும் வாய் வச்சுக்குடிச்சா ஒவ்வொருக்காவும் கழுவிக்கொண்டு இருக்கோணும். கோவியாதீங்கோ”

எனக்கிருந்த களைப்பில் அவள் சொன்னதெதுவும் காதில் விழவில்லை. நித்திரைக்கலக்கம் வேறு. நான் முழித்தேன். அவளுக்கு அந்தரமாகப் போயிருக்கவேண்டும்.

“இல்ல, நீங்க வாய் வச்சே குடியுங்கோ. பிரச்சினையில்லை”

சுதாகரித்தவனாய் அண்ணாந்து குடிக்க ஆரம்பித்தேன். பழக்கமில்லாததால் கலொக், கலொக் என்று மிடறு சத்தம் போட்டது. கழுத்தெல்லாம் தேசிக்காய்த்தண்ணி வழிந்து டீசேர்ட்டை நனைத்தது. தொடர்ந்து குடித்ததில் புரைக்கேறி இருமியது. வேறு ஒருத்தருக்கு இன்னொரு செம்பைக்கொடுத்துவிட்டு என்னிடம் திரும்பியவளுக்கு என்னைப்பார்த்ததும் கொஞ்சம் சிரிப்பு வந்திருக்கவேண்டும்.

“செம்பில குடிக்கிறது கஷ்டம் எண்டா பேணில தரட்டா?”

எனக்கு படு வெட்கமாகிப்போய்விட்டது.

“இல்லயில்ல.. விடிய வெள்ளனையில்லையா.. அதான்.. நான் குடிச்சுமுடிச்சிட்டன்.. போதும்”

நான் செம்பைத் திருப்பிக்கொடுக்க அவள் சிரித்தபடியே வாங்கினாள்.

“நீங்கள் யாழ்ப்பாண டவுனா?"

கேள்வியில் ஒரு நக்கல் தொனித்தமாதிரியே தெரிந்தது.

“இல்ல.. பிரம்படி.. கொக்குவில் பக்கம்”

“ஓ.. நீங்கெல்லாம் நேற்று வெள்ளனையே வெளிக்கிட்டீங்களா?”

“இல்லை.. பின்னேரம் வரைக்கும் ஒண்டுமே தெரியாது, நாலு மணிபோலதான் ஓட்டோல அறிவிச்சவங்கள். உங்கட பக்கம் இடம்பெயரச் சொல்லேல்லையா?”

என் கேள்வியில் சிறு ஆதங்கமும் சேர்ந்திருந்தது. சமயங்களில் நாங்கள் படும்பாட்டை மீதி உலகமும் சேர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று மனம் வேண்டிவிடுகிறது.

“இல்லை வலிகாமத்துக்கு மட்டும்தான் அனௌன்ஸ் பண்ணினவங்கள்போல. அண்ணைமார் இங்காலப் பக்கம் ஆர்மிய வர விடமாட்டாங்கள் எண்டு கதைக்கினம்.”

அந்த நம்பிக்கை எனக்கு மிகப் பரிச்சயமானது.

“சைக்கிளுக்குக் காத்து போயிட்டுது. வீட்டில பம்ப் இருக்கா?”

முன்வீட்டில் பம்ப் இருப்பதாகக்கூறி அவள் எடுத்துவரப்போனாள். நான் சைக்கிளை சூட்கேசோடு வேலியோரம் சாய்த்துவிட்டு அப்படியே தரையில் அமர்ந்துவிட்டேன்.

“என்ன நிலத்திலேயே இருந்தீட்டிங்கள். உள்ளுக்க போய் இருங்களேன்.”

சைக்கிள் பம்பும் கையுமாய் வந்தவள் சரித்துவைக்கப்பட்டிருந்த சைக்கிளுக்கு தானே காற்றடிக்கப்போனாள்.

“இல்லை, பறுவாயில்லை, தாங்கோ, நானே அடிக்கிறன்”

அவள் கொடுக்கவில்லை.

“வேண்டாம், நீங்க ள் ரெஸ்ட் எடுங்கோ. தனியவா வந்தீங்கள்? வீட்டாக்கள் எல்லாம் எங்கே?”

பேசிக்கொண்டே, பெருத்த சூட்கேசோடு வேலியில் சரித்து நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை கவனமாக உயர்த்தி, சில்லை உருட்டி, வால்வில் பம்ப் முனையை சொருகி அவள் காற்றடிக்க ஆரம்பித்தாள். அவ்வளவு உயரமுமில்லை. கட்டை என்றும் சொல்லமுடியாது. பம்ப் மிதியில் வலது காலை ஊன்றி, ஒரு பக்கம் சரிந்து நின்றபடி, பேசிக்கொண்டே, அவள் காற்றடித்த விதம். இரண்டாவது காட்சிப்புள்ளி.

“என்ன வீட்டாக்களிண்ட யோசினை வந்திட்டா?”

சுதாகரித்தேன்.

“அம்மாவும் அண்ணாவும் என்னோடதான் இன்னொரு சைக்கிளில வந்தவயள். நாவக்குழி பாலத்தடியில் மாறுபட்டிட்டம். எப்பிடியும் பின்னாலதான் வருவினம். இதில நிண்டா பிடிச்சிடலாம்”

“அப்பா?”

“அவர் எனக்கு ரெண்டு வயசா இருக்கேக்கையே மோசம் போயிட்டார்”

“ஓ சொறி”

அவள் ‘சொறி’ சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

“இல்ல.. பரவால்லை”

‘இட்ஸ் ஒகே’ என சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. மிஸ் பண்ணிவிட்டேன்.

“ஒண்டு செய்யலாம். உங்கட அம்மாண்டையும் அண்ணாண்டையும் பெயரை கொப்பிமட்டையில எழுதி வேலில தொங்கவிடலாம். அவையள் இதால வந்தா கவனிப்பினம். இல்லாட்டி அவையளைக் கண்டவை கவனிச்சாலும் சொல்லுவினம். நானும் விசாரிச்சுப்பார்க்கிறன். நீங்கள் கொஞ்சநேரம் படுத்தெழும்புங்கோ. இரவு முழுக்க அயர்ந்திருக்கமாட்டீங்கள்”

அப்போதுதான் கவனித்தேன். வேலியில் ஏற்கனவே பல கொப்பிமட்டைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றில் பலரின் பெயர்கள் ஊர் விபரங்களோடு தடித்த எழுத்தில் பெயிண்டிங் ஸ்டிக்கால் எழுதப்பட்டிருந்தன. இந்த ஊரைச்சேர்ந்த இன்னார் இன்னாரைத் தவறவிட்டுவிட்டார், இந்த முகவரிக்கு வந்து சேரவும், என்றெல்லாம் தகவல்கள் இருந்தன. எல்லாமே அவள் ஐடியாவாகத்தான் இருக்கவேண்டும். புத்திசாலிப்பெண். கூடவே விரைவாக முடிவு எடுக்கும் திறனும் இருக்கிறது. முன்பின் அறியாதவர்களிடம் காட்டும் பரிவும் கரிசனையும். செயற்படு திறன். துணிச்சல். புள்ளிகள் எல்லாம் ஒவ்வொன்றாக இணைந்து எங்கோ ஒரு அழகான கோட்டு ஓவியத்தை எனக்குள் வரைய ஆரம்பித்திருந்தன.

நான் தரையிலிருந்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். மிக வேகமாக அவள் செயற்பட்டுக்கொண்டிருந்தாள். என் வீட்டு விவரங்களை எடுத்து கொப்பி மட்டையில் எழுதி வேலியில் மாட்டினாள். தேசிக்காய்கள் முடிகின்றன, பிடுங்கிவருமாறு அங்குநின்ற சிறுவன் ஒருவனை விரட்டினாள். சீனி தீருகிறது என்று சொல்லி முன்வீட்டுக்குப்போய் வாங்கிவந்தாள். இடையிடையே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் செம்பும் கையுமாக இடம்பெயர்ந்து செல்பவர்களைப் போய் மறித்தாள். வேலியில் விபரங்கள் மாட்டியிருப்பதைக் குறிப்பிட்டாள். இப்படி குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருக்கும்போது இடையிடையே என்னைப்பார்த்துச் சிரிக்கவும் அவள் தவறவில்லை. சிலவேளை நான் கவனித்துக்கொண்டிருந்தது அவளை உறுத்தியிருக்கலாம்.

ஒருமுறை சிரிக்கும்போது நான் கதை குடுத்துப்பார்த்தேன்.

“நீங்க எந்த ஸ்கூல்? இங்கேயா படிக்கிறீங்கள்?”

“இல்லை நான்.. சுண்டுக்குளி”

உடனேயே எண்ணெய் கண்ட இலாம்புபோல பிரகாசமானேன்.

“அட நான் சென்ஜோன்ஸ்தான்.. எல்லாரும் ஒரே ஆக்கள்தான் அப்ப”

“நினைப்புத்தான்”

அவள் என்பக்கம் திரும்பாமலேயே பதில் சொன்னாள். கொஞ்சம் ஓவராக வழிந்துவிட்டேன்போலத் தோன்றியது. கதையை மாற்றினேன்.

“எப்பிடி இஞ்சயிருந்து சுண்டுக்குளிக்கு போவிங்கள்?.. பஸ்ஸிலயா?”

“சைக்கிள்தான்.. உதிலயிருக்கிற சுண்டுக்குளிக்கு எதுக்கு பஸ்”

நான் சிரித்தேன்.

“உதிலயிருக்கிற சுண்டுக்குளியிருந்து இஞ்ச சைக்கிளில வாறதுக்கு எனக்கு இரவு முழுக்க பிடிச்சுதே”

அவள் முகம் உடனேயே சோர்ந்துபோனது. என்னிடம் திரும்பிச்சொன்னாள்.

“எல்லாப்பிரச்சனையும் கொஞ்சநாளில சரியாயிடும். யோசியாதீங்க”

“நீங்கள் சொல்லேக்கையே எல்லாமே சரியாயிட்ட பீலிங் வருகுது”

அப்பட்டமான வழியல்தான். அவள் கோபப்பட்டால் கோபப்படட்டும். ஆனால் ஒரு சென்ஜோன்ஸ்காரன் ஒரு சுண்டுக்குளிப்பெட்டையிடம் என்ன செய்யவேண்டுமோ அதையே நான் செய்தேன். ஆனால் அவள் கோபப்படவில்லை.

“ம்ம்ம்.. உங்கட சைக்கிள் சளியுதுபோலக் கிடக்கு. ஓடிப்போய்ப் பிடியுங்கோ.”

சொல்லிவிட்டு அவள் செம்பை வீதியால்போன ஒருவரிடம் கொண்டுபோய் நீட்டினாள். களைத்து விழுந்து வந்திருந்த அந்தாளோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தபோதும் அவள் தன் சிரிப்பை அடக்கமுடியாமல் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது.

சைக். அது ஒண்டுக்காக ஆயுசுபூரா இடம்பெயர்ந்துகொண்டே இருக்கலாம்.

000

அவள் குளித்துத் தயாராகிவிட்டிருந்தாள்.

“ஏய்.. குவிக். டக்கெண்டு கதய முடிச்சிட்டு ரெடி ஆகு. இண்டைக்கு வெதரும் கொஞ்சம் அப்செட். வெள்ளனப் போயிட்டு வந்திடுவம்”

தலையில் டொக்கிவிட்டு அவள் அப்பால் நகரந்துபோனாள். நான் அதைக் கவனியாதவனாய் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

நாங்கள் லண்டன் வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன.

நான்தான் முதலில் வந்தது. ஊர், உறவு, வட்டங்கள் அத்தனைபேரின் நம்பிக்கையையும் பொய்யாக்காவண்ணம் உயர்தரப்பரீட்சையை நான் வெற்றிகரமாகக் கோட்டை விட்டேன். அடுத்ததாக எனக்கு இருந்த ஒரே தெரிவு வெளிநாடு போவதுதான். அம்மாவின் தாலிக்கொடி, ஊரில் இருந்த ஒரே தோட்டக்காணி எல்லாவற்றையும் விற்று ஒரு சொந்தக்கார முகவரிடம் கொடுத்து, சென்னை, மும்பை, சோமாலியா, மலாவி, இத்தாலி, பிரான்ஸ் என்றெல்லாம் திரிந்து, கடைசியில் ஆங்கிலக்கணவாயை ஒரு கொன்டெயினர் ஊடாகக் கடந்து, இறுதியில் லண்டன் வந்துசேர்ந்தேன். சில ஆண்டுகள் இழுபறிகளுக்குப்பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் அகதி அந்தஸ்து எனக்குக் கிடைத்தது.

நான் இந்த ரூட்டில் வந்துகொண்டிருக்கும்போது அவள் வேறு ரூட்டில் லண்டன் வந்து சேர்ந்துவிட்டாள். வர்த்தகப் பிரிவில் நான் கோட்டை விட்டாலும் அவள் படிப்பில் பயங்கரக் கெட்டி. அத்தனை போர் நெருக்கடிகளுக்குள்ளும் சாதாரண தரத்தில் ஏழு பாடங்களில் அதி விசேட சித்தி பெற்றவள், பின்னர் உயர்தரப்பரீட்சையிலும் ஒரு கலக்கு கலக்கினாள். கூடவே லண்டன் ஏ/எல் பரீட்சையும் எடுத்து அதிலும் ஒரு காட்டு காட்டி, நியூகாசில் பல்கலைக்கழகத்து புலமைப்பரிசிலை வென்று இங்கிலாந்துக்கே வந்து மருத்துவம் படித்தாள். இன்றைக்கு இங்கே இலண்டனில் ஒரு புகழ்பெற்ற மகப்பேறு நிபுணராக இருக்கிறாள். நிறையத் திமிரும் அதைவிட நிறையப் பிடிவாத குணமும் இருந்தாலும் அடிப்படையில் அவள் நல்லவள். கொஞ்சமேனும் நான் ஒரு உருப்படியானவனாக மாறியமைக்கு அவள்தான் முழுமுதற் காரணம். ஒரு தற்காலிக உணவு விடுதி வேலையை பார்த்துகொண்டிருந்த என்னை கணக்கியல் பட்டப்படிப்பு படிக்கவைத்து நிலையான வேலை ஒன்றுக்குப் போக வழிகோலியவள். என்னை எழுதத் தூண்டுவதும் அவளே. எதையுமே சிந்தித்து, நேர்படப் பேசுவதால் பலரின் எதிர்ப்பையும் வாங்கிக்கட்டி வைத்திருப்பவள். அவளுடைய கருத்துகளும் தனித்துவமாக இருக்கும். அவள் கடவுள் கும்பிடமாட்டாள். இல்லை என்பாள். அப்படியே இருந்தாலும் அந்தக் கடவுளால் பிரபஞ்சத்தின் இருப்பையும் அமைப்பையும் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை என்பாள். கடவுள் சுயம் என்றால் பிரபஞ்சமும் சுயம் என்பாள். இப்படிச் சொல்லிக்கொண்டே போவாள். தெளிவாக, கண்கள் விரிய பரபரப்புடன் இவற்றை அவள் விளக்குவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் வழமைபோல அவள் சொல்வது எதுவும் எனக்குப் புரிவதில்லை. புரியாத கடவுளை அநாதியாக்கி அவரிடம் எம்மை அர்ப்பணிப்பதில்லையா? அதுபோலத்தான் அவள் எனக்கு. அவளுக்கும் நான் அப்படியாகத்தான் இருக்கவேண்டும். என்னை அவளுக்குப் பயங்கரமாகப் பிடிக்கும் என்று தெரியும். ஆனால் கழுதை காட்டிகொள்ளவே மாட்டுது. ஈகோ. காளைமாட்டின் ஏறுபோல. சிலுப்பிக்கொண்டு. என்ன மன்ணுக்கென்று தெரியாது. ஆனால் என்னோடு மட்டும் அப்படியொரு ஈகோ.

பிடரி ‘நங்’ என்றது.

“ஒண்டு எழுதோணும். இல்லாட்டி வெளிக்கிடோணும். இப்பிடி ஏமலாந்திக்கொண்டு இருக்கக்கூடாது”

“பொறுடி. எங்களப்பற்றி எழுதேக்க வாசிக்கிறாக்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கவேண்டாமா? யோசிச்சல்லோ எழுதோணும்"

“எங்களைப்பத்தி எழுதிறியா? எதை எழுதிறாய்? ஒரு பெட்டைக்குப் பின்னால திரிஞ்சு, படிப்ப கோட்டை விட்டிட்டு கொன்டயினரில களவா லண்டன் வந்ததை எழுதிறியா? நல்லா எழுது. எதிர்கால சந்ததி வாசிச்சு இன்ஸ்பைர் ஆகட்டும்.”

“ஏன்? அஞ்சு வருஷமா பின்னால திரிஞ்சு, வெயிட் பண்ணி, ஒரு டொக்டர் பிள்ளையை வேலைவெட்டி எதுவும் இல்லாதவனுக்கு ஓகே சொல்ல வச்சது. அது சாதனை இல்லையா?”

“சாதனைதான். எழுது. எவோர்ட் எல்லாம் தேடிவரும்.”

000




நான் பழைய பூங்கா வீதியில் காத்துக்கொண்டு நின்றேன்.

வீதியின் இருமருங்கிலும் வரிசையாக நின்ற மலைவேம்புகளில் ஆயிரக்கணக்கில் வௌவால்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தன. நகரின் அமளி எதையும் அவை சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு பறந்து திரிந்தாலும் விரைவிலேயே அவை கிளைக்குத் திரும்பித் தூங்க ஆரம்பித்துவிடுகின்றன. தூங்கும்போதும் மெல்லிய அலை போன்ற சத்தத்தை அவை எழுப்பிக்கொண்டிருந்தன. வௌவால்கள் தூங்கும்போது மாத்திரமே கூட்டமாக நெருங்கிக் கிடக்கின்றன. ஆனால் இரவில் இரை தேடும்போது அவை தனித்தனியாகவே அலைகின்றன. அந்த மரங்களில் வாழும் அத்தனை வௌவால்களும் ஏக நேரத்தில் எழுந்து பறக்க ஆரம்பித்தால் நகர் முழுதுமே பெருத்த அதிர்வலை எழும் என்று தோன்றியது. ஆனால் ஏனோ வௌவால்கள் அப்படிப் பறப்பதில்லை. எப்போதாவது ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம், அல்லது ஷெல், அல்லது விமானம் குண்டுபோடும்போதுதான் அவை அலறி அடித்துக்கொண்டு ஆகாயத்துக்குக் கூட்டமாகச்சென்று ஒற்றுமையாக வட்டமிடுகின்றன. பெருத்த கிறீச்சிட்ட ஒலியை எழுப்பியபடி பதறி அலைகின்றன. பின்னர் மீண்டும் அவை வழமைபோல மலைவேம்புகளில் தூங்கப்போய்விடுகின்றன.

சுண்டுக்குளி டை ஒன்று பழைய பூங்கா வீதிக்குள் திரும்பியது தெரிந்தது. பரீட்சை முடிந்துவிட்டது. கொஞ்ச நேரத்தில் அவளும் அந்த வீதிக்குள்ளால் திரும்பப்போகிறாள். என்னைக் கண்டால் அவள் என்ன செய்வாள்? சிரிப்பாளா? திரும்பியே பாராமல் போய்விடுவாளா? முகம் சுளிப்பாளா? பரீட்சைச் சமயம். அவளுக்கு அந்தப் பதட்டம் இருக்கும். நான் இப்படி வீதியில் நிற்பது அவளுக்கு அறவே பிடிக்காது என்பது தெரிந்ததுதான். அதற்காகத் திரும்பிபோய்விட முடியுமா என்? அவளுக்கு பிடிப்பதை வேண்டுமானால் கலியாணத்தின் பின் பார்த்துக் கொள்ளலாம். நான் இன் பண்ணியிருந்த சேர்ட்டை மெலிதாக வெளியே இழுத்து சரிசெய்துவிட்டு ஒரு காலை நிலத்தில் ஊன்றிக்கொண்டு சைக்கிளில் அமர்ந்தபடி அவள் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தேன்.

மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த வௌவால் ஒன்று பறந்துவந்து என் அடிவயிற்றில் குந்தி இறக்கை அடிக்க ஆரம்பித்தது.

000

கேட்க அந்தரமாகத்தான் இருந்தது. ஆனால் வேறு வழி ஏதும் இருக்கவில்லை.

“பிழை நினையாதீங்கோ, எங்களுக்குச் சாவகச்சேரில ஆரையும் தெரியாது. இஞ்சாலப்பக்கம் வீடு ஏதும் கிடைக்குமா? சின்னதா… அனெக்ஸ்.. ஒரு அறை எண்டாலும் சமாளிக்கலாம். பார்த்து ஹெல்ப் பண்ணுறீங்களா?”

அவள் யோசித்தாள்.

“வந்து.. இந்த நேரத்தில தங்கிறதுக்கு கேட்டா எங்கை போறது? எல்லா வீடுகளும் நிரம்பி வழியுது. சொந்தக்காரர் தங்கிறதுக்குக்கூட இடமில்லை.. நீங்க பளைப்பக்கமா போனீங்களெண்டால்..”

பேசிக்கொண்டிருந்தவள் என் அம்மாவும் அண்ணாவும் இருந்த நிலையைப்பார்த்ததும் பேசுவதை நிறுத்தினாள். அம்மா களைப்பில் வேலியோரமாகவே ஒரு சீலையை விரித்துப் படுத்துவிட்டார். அண்ணாவும் சூட்கேசில் சாய்ந்திருந்தவர் கண்ணயர்ந்துவிட்டிருந்தார். முகத்தில் மொய்த்த இலையானைக் கலைக்கும் பிரக்ஞைகூட இல்லாத நித்திரை.

“எதுக்கும் பொறுங்கோ.. அம்மாட்டக் கேட்டிட்டு வந்து சொல்லுறன்”

அவள் போன வேகத்தை பார்த்தால் எப்படியும் தாயைச் சம்மதிக்க வைத்து விடுவாள்போலத்தான் தெரிந்தது. போகும் அவளையே பார்த்தபடி நின்றேன். சும்மா, வீட்டிலே போடும், பருத்தித்துணியில் தைத்த சட்டைதான். காலையிலிருந்து பந்தலுக்கும் வீட்டுக்குமாய் அலைந்ததில் கால்கள் எல்லாம் புழுதிமண்டிக்கிடந்தன. அந்த பொப்ட் முடி அவள்போலவே சுதந்திரமாய்ச் சிலிர்த்துக்கொண்டு நின்றது. கையில், கழுத்தில் எதுவுமே அணிந்திருக்கவில்லை. காதுகளில் மட்டும் சின்னதாய் ஏதோ ஒன்று கைதடி இளவெயிலில் பட்டு மின்னியது.

அவள் திரும்பிவந்தாள். வரும்போதே ஒரு கன்னத்தில் கடுகடுப்பும் மறுகன்னத்தில் குற்ற உணர்வும் மிகுந்திருந்தது.

“அம்மா நெருப்பு எடுக்கிறா. ஏற்கனவே அஞ்சு குடும்பம் வீட்டுக்க இருக்கு. இப்ப நீங்களும் வந்திட்டால் சமாளிக்கிறது கஷ்டம் எண்டுறா. நல்ல தண்ணியும் இஞ்சாலப்பக்கம் பிரச்சனை. ஆக்கள் கூடினா டொய்லட் எல்லாம் நிறஞ்சிடும் எண்டுறா.”

அவள் பதிலில் அவளுக்கே உடன்பாடு இல்லை என்று விளங்கியது. ஆனால் கைதடியை அவ்வளவு இலகுவாக கைவிட்டுச் செல்வதற்கு மனம் ஒப்பவில்லை.

“நாங்கள் ஒரு ஓரமா இருந்து சமாளிப்பம். ஒரு உவத்திரமும் இருக்காது. எல்லாருக்கும் உதவி செய்யுறீங்கள். உங்கட சென்ஜோன்ஸ்காரருக்கு உதவ மாட்டீங்களா?”

அவள் முறைத்தாள் என்று தோன்றியது. இவ்வளவு சீரியசான சமயத்திலும் எப்படி என்னால் அபத்தமாக பேசமுடிகிறது என்று அவள் யோசித்திருக்கலாம்.

“ஆர் எண்டாலும் நான் உதவத்தான் பார்ப்பன். பொறுங்க, அம்மாட்ட திரும்பவும் கேட்டுப்பாக்கிறன்”

அம்மாக்காரி சம்மதம் மட்டும் கொடுத்தால் போதும். கைதடியே கதியென்று தங்கிவிடவேண்டியதுதான்.

அவள் உள்ளே நடந்துபோவதை பார்த்தபடியே நின்றேன்.

000

கண்ணம்மா திரும்பவும் உள்ளே வந்தாள். இம்முறை குளித்து வெளிக்கிட்டு ஜக்கட் எல்லாம் போட்டு புறப்படுவதற்குத் தயாராக.

“என்ன அப்பா. இன்னும் ரைட்டிங்கா? எங்களுக்கு டைம் போகுது.”

“முடியுது.. பொறு.. பொறு.. குழப்பாதை”

அவள் வந்து கணினி ஸ்கிரீனை எட்டிப்பார்த்தாள்.

“எனக்கு உங்கட ஸ்டோரிய சொல்ல மாட்டிங்களா?”

“உனக்கு விளங்காது கண்ணா. நான் எழுதுறது அம்மா, அப்பாமாதிரி பெரிய ஆக்களுக்கு.”

“அப்ப எனக்கு எள்ளுத மாட்டிங்களா”

“எழுதுறன். அடுத்த கதை உனக்குத்தான், சரியா?”

“அதில லயன் வருமா?”

“வரும். யானையும் வரும்”

“அப்படீண்டா பெப்பா பிக்?”

“அதையும் சேத்துவிடுவம்”

“ஸாட் ஸ்டோரி எள்ளுதவேண்டாம் அப்பா. லாஸ்ட் ஸ்டோரி ஜக்கி. அதில அந்த சிஸ்டர் டை பண்ணீட்டுது. பாவம்.”

“யாரு உனக்கு அந்தக் கதையைச் சொன்னது?”

“அம்மாதான்”

ஆச்சரியமாக இருந்தது. வாசிக்கவில்லை என்றாளே. வாசித்துவிட்டு குழந்தைக்கு வேறு கதையைச் சொல்லி இருக்கிறாள். இந்தக்கதையையும் சொல்லக்கூடும். சொல்லுகிற விதத்தில் சொன்னால் கண்ணம்மா புரிந்துகொள்வாள் என்பாள். இதெல்லாம் செய்பவள் என்னோடு மாத்திரம் ஒற்றைக்கு ஒற்றை நிற்கிறாள். என்னோடு சண்டை பிடிப்பது என்றால் அவளுக்கு ஐஸ்கிரீம் குடிப்பதுபோல. தானே சண்டை பிடிப்பாள். தானே திரும்பிவருவாள். இவள் ஏன் என்னோடு மாத்திரம் இப்படித் தனகுகிறாள்?

“என்ன சேர்.. மூளையை எங்கேயோ விட்டிட்டிங்கள்போல. கண்ணம்மா அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாம கொஞ்சநேரம் விடு. அதை எழுதி முடிக்கட்டும்.”

சிசிடிவி கமராவில் பார்ப்பதுபோல அதெப்படி அவளால் என் மன ஓட்டத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது?

000

தூரத்திலேயே கண்டுவிட்டாள். ஒரே ஒரு கணம். முகத்தை அந்தப்பக்கம் திருப்பிகொண்டாள். நண்பிகள் கூட வந்ததால் இருக்கும். அல்லது கோபம். ஏதோ ஒன்று. அவள் என்னைத் தூரத்தில் பார்த்ததே போதும். அவர்கள் கடந்துபோக, மெதுவாக நூறடி இடைவெளிவிட்டு அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தேன். அருகில் போகத் தைரியம் இல்லை. தெரிந்தவர்கள் யாரும் கண்டால் அம்மாவிடம் சொல்லிக்கொடுத்து விடுவார்கள். வெளியே சொன்னால் வெட்கம். அம்மா இந்த வயதிலும் கிளுவைத்தடியால் விளாசித்தள்ளும். கத்தவும் முடியாது. வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கவேண்டும். நண்பிகளில் ஒருத்தி எதேச்சையாகத் திரும்பிப்பார்ப்பதுபோல என்னைப் பார்த்தாள். ஆனால் அவள் திரும்பவில்லை. அமுசடக்கி.

அவளும் நண்பிகளும் வழமையாகச் செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையால் செல்ல ஆரம்பித்தார்கள். பின்னர்தான் விளங்கியது. முந்தயதினம் சக பாடசாலை மாணவி ஒருவரை இராணுவ வாகனம் மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். அந்த மாணவியின் செத்தவீடு இன்று. அதற்குத்தான் சென்றார்கள். நான் செத்தவீட்டுக்கு உள்ளே செல்லாமல் சற்றுத் தூரத்தில் நின்று அவள் திரும்பி வெளியே வரும்வரைக்கும் காத்திருக்க ஆரம்பித்தேன்.

000

இந்தத்தடவை அவள் திரும்பி வருகையில் அவளின் இரண்டு கன்னங்களுமே குழப்பமில்லாமல் சிரித்தன.

“அம்மா ஓம் எண்டுட்டா. நீங்க வேற சென்ஜோன்ஸ்காரர். உங்களுக்கு ஓம் எண்டாமல் வேறு ஆருக்கு ஓம் எண்டுறது?”

நசுக்கிடாமல் சிரித்தாள். அவளின் ஆறு லட்சம் நரம்புகளிலும் நக்கல் ஊறிக்கிடந்தது. ஆனால் நமக்கு ஆறு லட்சத்து ஒன்று.

“ஓ, உங்கட அம்மாவும் சுண்டுக்குளியா?”

அவள் அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். அப்ப பழம்தான். எனக்கு சந்தோசம் தாங்கவில்லை. நித்திரையால் எழும்பி அமர்ந்திருந்த அம்மாவும் அண்ணாவும் என்னைக் கொஞ்சம் சந்தேகமாகவே பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை. சைக்கிள்களை நிமிர்த்தி உருட்டிக்கொண்டு முற்றத்துக்குள் நுழைந்தோம். அந்த வீட்டில் உள்ளே இருக்க இடமே இல்லை. குறைந்தது இருபது இருபத்தைந்து பேர்கள் உள்ளே தங்கி இருந்தார்கள். வெளியே முற்றத்திலும் சிலர் சிறு கொட்டில் ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தார்கள். வீட்டுப் பத்தியிலும் சிலர். அவள் எம்மைச் சேர்த்தது எனக்காக இல்லை என்று அப்போதுதான் புரிந்தது. அது அவளின் குணம். அந்தச்சமயம் எவர் வந்து தங்குவதற்கு இடம் கேட்டிருந்தாலும் அவளும் அவள் அம்மாவும் உள்ளே அனுமதித்துத்தான் இருப்பார்கள். அது அந்த சாவகச்சேரி மண்ணின் குணமும்கூட. இதேமாதிரி ஒரு சூழ்நிலை சாவகச்சேரி மக்களுக்கு வந்து, அவர்கள் யாழ்ப்பாண நகருக்குள் இடம்பெயரும் நிலை வந்திருந்தால், பல யாழ்நகர வீடுகளில் நாய்கள் அவிழ்த்துவிடப்பட்டு, படலைகளில் இரண்டு பூட்டுக்கள் தொங்க ஆரம்பித்திருக்கும்.

000

அவளுக்குப் பொறுமை கெட்டுவிட்டது.

“ஏய் ‘ஓல் எஃப்’. நாங்கள் இண்டைக்கு கங்கரூ பார்க்கப்போறமா இல்லையா? நான் உடுப்பை மாத்தட்டா?”

நான் உயர்தரத்தில் நான்கு பாடங்களுக்கும் கொடி நாட்டியதை அவள் இப்போதும் குத்திக்காட்டுவாள். ஹூ கெயார்ஸ்.

“பொறுங்க டொக்டர். எங்கட கதை எண்டதால.. கத்திமேல நடக்கிற பீலிங்”

“அப்பிடி என்னத்தை எழுதிக்கிழிக்கிறாய்?”

“இல்லை.. எங்களுக்குத் தெரிஞ்சவையும் இதை வாசிக்கப்போறினம். எழுதிறதெல்லாம் அப்பிடியே உண்மையிலேயே நடந்தது எண்டு நினைக்கிற ஆக்களும் வாசிக்கப்போறினம். பிறகு நேர்ல சந்திக்கேக்க ஆயிரத்தெட்டுக் கேள்வியள் கேப்பினம்”

“லூசு, அப்பிடி என்னதான் எழுதுறாய்? பெயரக்கியரப்போட்டு விசர் வேலை பார்த்திடாத?”

“இல்ல. பெயர் போடயில்ல. போடுற மாதிரிப் பெயரும் இல்ல”

“வட்?”

எங்கள் பேச்சினிடையே கண்ணம்மா புகுந்தாள்.

“அப்பா. அம்மா. சைலன்ஸ் பிளீஸ். நானும் ஸ்டோரி ஒண்டு எளுதுறன்”

“நீங்க வேறயா? அப்பிடி என்ன எழுதுறீங்கள் மெடம்”

"சஸ்பென்ஸ். உஷ்."

000

நான் அமைதியாக வெளியே தொடர்ந்து காத்து நின்றேன்.

மதியம் ஒரு மணியாகிவிட்டிருந்தது. பயங்கரமாகப் பசித்தது. ஒரு பாண் துண்டை கடித்துவிட்டு வந்திருக்காலாம். அல்லது அம்மாவின் பிளேன்ரீயை குடித்திருக்கலாம். காதலித்தால் பசியிருக்காது என்று கண்ணதாசன் எதிலேயோ எழுதியதாக ஞாபகம். அண்ணரை யாழ்ப்பாண உச்சி வெயிலில் நிறுத்தி, பிளேன்ரீகூட குடிக்காத வெறும் வயிற்றோடு, காதலிக்காக காத்திருக்கும்படி செய்திருக்கவேண்டும். அப்போது விளங்கியிருக்கும்.

ஒருவாறாக அவளும் நண்பிகளும் செத்தவீட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தது தெரிந்தது. அவள் என்னை மீண்டும் கவனித்துவிட்டாள். பேசுவோமா? வேண்டாம். சென்றமுறை ‘மறந்திட்டியா’ என்று கேட்டதற்கு இடதுகாலை சாண்டில்ஸோடு தரையில் உதைத்துத் தூசு தட்டியிருந்தாள். அந்த அனுபவம் மீண்டும் வேண்டாம். அதுவும் அவள் நண்பிகள் இருக்கும்போது. அவளுக்கு எனது எண்ணம் தெரிந்தநாள் தொட்டு என்னை விட்டு விலகியே போய்க்கொண்டிருந்தாள். நானோ விடுவதாயில்லை. ஒரு நம்பிக்கை. முயற்சி செய்துதான் பார்ப்போமே. அவளுக்குப்பின்னே வழிந்துகொண்டு திரிவதில் என்ன அசிங்கம் வேண்டியிருக்கிறது? இப்போது விட்டால் பின்னால் காலம் முழுதும் வருந்தவேண்டிவரும். அதைவிட முட்டிமோதுவது பாதகமில்லை. அவள் செல்லும் வழியே என் வழி. எப்போதாவது அது அவளுக்கு..

யோசித்துக்கொண்டிருந்ததில் அவள் என் அருகில் நெருங்கிவந்ததை நான் கவனிக்கவில்லை.

“இஞ்சபார். எண்ட வழில நீ இனி வராத. இது வேண்டாம். சொன்னாக் கேளு. எனக்கு ஒரு லவ்வும். பண்ணவும் முடியாது. இது உனக்கு விளங்காது. ப்ளீஸ்..”

நேரே என் கண்களைப்பார்த்தபடி பேசினாள். என்ன ஒன்று. இப்படி நேர்பட பேசுபவளை ஆற அமர பார்த்து ரசிக்கமுடியாது. அது அவளை இன்னமும் கோபப்படுத்திவிடும்.

“இல்லை நான் வந்து மெய்யாலுமே.. அம்மா சத்தியமா”

“உதில சத்தியம் வேற, சோதினை டைம்ல நீயும் படிக்காமல் என்னையும் வந்து இடைஞ்சல் பண்ணுறாய். இதுதான் உண்ட லவ்வின் லட்சணமா? நீ எல்லாம் எப்பிடிப் பொறுப்பா ஒரு குடும்பத்தை நடத்துவ? திஸ் இஸ் ஜஸ்ட் அன் இன்பக்சுவேஷன். கொஞ்சநாள்தான்.. போயிடும். போய்ப்படி. அன்ரி உன்னை நம்பித்தான் இருக்கிறா”

“ஆனா, நான் உன்னை நம்பித்தான் இருக்கிறன்”

கொஞ்சம்கூட விவஸ்தையில்லாத அபத்தமான பதில்தான். தெரியும். ஆனாலும் வாயிலிருந்து வந்துவிட்டது. நான் நிறைய ரமணிச்சந்திரன் வாசிப்பேன். ஆனால் அவள் வாசிப்பவை எல்லாமே வித்தியாசமானவையாக இருக்கும். பாரதியார் என்றால் அவளுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு. பள்ளிப்புத்தகங்களில் இல்லாத பாரதியார் கவிதைகளைக்கூட அவள் தடக்காமல் சொல்லக்கூடியவள். தாய்க்காரி ஆங்கில இலக்கிய ஆசிரியை என்பதால் அவள் வீட்டு அலுமாரி முழுவதும் ஒரே ஆங்கிலப்புத்தகங்களாகவே இருக்கும். பாதவெடிப்பு என்று சொல்லி தாயும் மகளும் வீட்டுக்குள் செருப்பு அணிந்து நடந்து திரிவார்கள். நானோ கக்கூசுக்கு வெறுங்காலோடு போய் உட்காருபவன். இவள் எப்படி என்னைக் காதலிப்பாள்? எந்த நம்பிக்கையில் பின்னால் திரிகிறேன்?

நான் எக்கணம் மூளையை எங்கோ யோசனையில் விட்டுவிட்டேன். சுதாகரித்தபோது அவள் திரும்பி விறுக்கென்று சைக்கிளில் போய்க்கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. வந்தாள். கடகடவென்று திட்டினாள். சென்றுவிட்டாள். உண்மையிலேயே நான் உதவாக்கரையா? எல்லோரும் பரீட்சைக்குப் படிக்கும் சமயத்தில் நான் ஏன் றோட்டில் நிற்கிறேன்? அவள் சொன்னதில் என்ன தவறு? காதலிக்க என்னில் அப்படி என்ன இருக்கிறது? அவளுக்குப் பின்னால்திரியக்கூட தகுதி இல்லாதவன். இனியும் போனால் நெருப்பெடுப்பாள் என்று தோன்றியது. குழப்பத்தில் செய்வதறியாது வீடுநோக்கி சைக்கிளைத் திரும்பினேன்.

அவள் சொன்னதே திரும்ப திரும்ப ரிவைண்ட் ஆகி ஒலித்துக்கொண்டிருந்தது.

“..இதுதான் உண்ட லவ்வின் லட்சணமா? நீ எல்லாம் எப்பிடிப் பொறுப்பா ஒரு குடும்பத்தை நடத்துவ? திஸ் இஸ் ஜஸ்ட் அன் இன்பக்சுவேஷன். கொஞ்சநாள்தான்.. போயிடும். போய்ப்படி. அன்ரி உன்னை நம்பித்தான் இருக்கிறா..”

முத்திரைச்சந்தியை தாண்டும்போதுதான் என்னுடைய மோட்டு மூளையில் திடீரென்று பொறி தட்டியது. அப்படியென்றால் யோசித்து இருக்கிறாள். நான் எப்படிப் பொறுப்பாக குடும்பம் நடத்துவேன் என்று யோசித்து இருக்கிறாள். லவ்வின் இலட்சணம் இது இல்லை என்கிறாள். பொறுப்பாகப்போய்ப் படி என்கிறாள். அம்மா என்னை நம்பி இருக்கிறா என்று சொன்னதிலும் உள்ளர்த்தம் இருக்கிறது. அவளும்தான் அதில் அடக்கம். ச்சே மடையன் நான். இது விளங்காமல் திரும்பிவந்துவிட்டேன். இப்போது அவள் மாம்பழஞ்சந்தியை தாண்டியிருப்பாள். துரத்திப்பிடிக்க முடியாது. பிடித்தாலும் என்ன பயன்? கழுதை. எதையுமே வெளிக்காட்ட மாட்டாள். மீண்டும் கோபப்படுவாள். இது போதும் எனக்கு. இனிப் போய்ப்படிக்கலாம். வாழ்க்கைதான். கலியாணம் முடிந்ததும் எப்படியும் நாங்கள் லண்டன் போகவேண்டும். அவள் டொக்டர் ஆகட்டும். நல்ல வேலை. நல்ல குழந்தைகள். அவளைப்போலவே ஒரு பெண் குழந்தை. என்ன பெயர் வைக்கலாம். ஸ்டைலிஷ்ஷா ஒரு பெயர். வர்ஷா என்று வைக்கலாம். பெயரில் ‘ஷ’ இருந்தால்தான் கூப்பிடும்போது நன்றாக இருக்கும். தாய் பெயரிலும் ‘ஷ’ இருக்கிறதே. ஆனால் அவளுக்குப் பிடிக்குமோ தெரியாது. எதற்குச் சோலி? அவளுக்குப்பிடித்த பெயரையே வைத்துவிடவேண்டியதுதான்.

000

“கண்ணம்மா. இன்னுமா கதை எழுதிக்கொண்டு இருக்கிறாய்? அப்பா கதையை முடிக்கப்போறன்”

“பினிஷ்ட் அப்பா. பாக்கப்போறிங்களா? உங்கட கதைமாதிரி பிக்கா எளுதயில்ல.. வெரி ஸ்மோல் ஸ்டோரி”

கண்ணம்மா தான் கிறுக்கிக்கொண்டிருந்த பேப்பரைக் எடுத்துகொண்டு வந்தாள்.

“ஐயையோ அதுக்குள்ள கொண்டந்திட்டியா? பொறு அப்பாவும் இந்தா முடிச்சிட்டு வாறன்”

“நோட்டி அப்பா”

000

அவள் மீளவும் ஒருமுறை திரும்பிப்பார்த்தாள். ச்சைக். கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலும் எந்தச் சைக்கிளையும் பின்னாலே காணவில்லை. நிஜமாகவே அவன் பின் தொடர்வதை நிறுத்திவிட்டானா? அவள் சைக்கிள் மிதிக்கும் வேகத்தைக் குறைத்து குறைது கடைசியில் தரித்து நிற்கும் நிலைக்குப் போய்விட்டது. ம்ஹூம். அவன் வரவேயில்லை.

அவனைப்போல ஒரு லூசனை உலகத்தில் எங்கேயும் பார்க்கமுடியுமா? நான் போ என்றால் உடனே போய்விடுவதா என்ன? கைதடி மட்டும் பின் தொடர்ந்துவந்தால் என்ன குடியா மூழ்கிவிடும்? இனிப்போய் உந்த வள்ளல் படித்து கிழித்துவிடுவாரா என்ன? இந்த ஜஃப்னா போய்ஸ் எல்லாரும் சும்மா வெறுங் கதைக்குத்தான். ஆனால் ஒரு லவ்வை சரியாகப் பண்ணத்தெரிகிறதா? லவ் என்றால் நாலு திட்டு வாங்கத்தானே வேண்டும்? அதற்கே ஓடிவிடுவதா? கேட்டவுடனேயே நான் ஓம் சொல்லி விடுவேனா? அப்படி இப்படி பஸ் பண்ணுவதில்தானே சந்தோஷம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் அவன் கியூட்தான். எவ்வளவு திட்டினாலும் அது வழிந்துகொண்டே நிக்கும், பாவம். நல்லது. என்ன ஒன்று, ஆள் கொஞ்சம் டியூப்லைட். தான் ஒரு பெரிய விண்ணர் என்ற நினைப்பு. ஆனால் உள்ளுக்குள் ஒன்றும் கிடையாது. ஒரு பெட்டையின் மனசில் என்ன இருக்கென்பதை கண்டுபிடிக்க முடியாதவன். படிப்பும் ஆளுக்கு ஆளுக்கு மட்டம். ஏ.எல் தவறினாலும் எப்பிடியும் அவனை ஸீமா செய்ய வச்சிடோணும். நாங்கள் யூ.கே போகலாம். நானும் அங்கே எப்.ஆர்.சி.எஸ் ஏதும் செய்யலாம். என் தம்பியும் பிறகு யூ.கே வரலாம். அம்மாவை குழந்தை பிறக்கும்போது ஸ்பொன்சர் பண்ணலாம். குழந்தை.. ஆ என்ன குழந்தை பெறலாம்? அவனைப்போல முட்டாள் பெடியனாக இல்லாமல், என்னை மாதிரியே இன்டெலிஜெண்டா, ஸ்டைலா, அழகா ஒரு பெண் குழந்தை. வேணுமெண்டா அவனை மாதிரியே நல்லவனா இருக்கட்டும். என்ன பெயர் வைக்கலாம் பெண்ணுக்கு ஒரு அழகான தமிழ்ப்பெயர் வைக்கவேண்டும். கண்ணம்மா என்று கூப்பிட்டால் நல்லா இருக்குமா? பாரதியின் செல்லம். மற்றவர்கள் அந்த பெயரை வைக்கமுதல் நாம் வைக்கவேண்டும். பாரதியின் கனவுபோலவே பெண்ணை வளர்க்கவேண்டும். ச்சே, அவனை அப்படி பேசி அனுப்பியிருக்கக் கூடாது. கொஞ்சம் அதிகமாகிவிட்டது. ஆனாலும் அந்த விசர் சிலவேளை பின்னால் வந்தாலும் வரும். வேலைவெட்டி இல்லாதவன்..

“மே..அற.. நவத்தன்ன…கொஹேட யன்ன கேல்லோ” (இங்கே நில்லு, எங்கே போகிறாய் பெண்ணே?)

குறும்புச் சிரிப்போடு அவ்வப்போது திரும்பித்திரும்பி பார்த்தபடி மெதுவாக சைக்கிளில் போய்க்கொண்டிருந்தவள் வழி எதிரே கைதடி காவலரண் வந்துவிட்டிருந்ததைக் கவனிக்கவில்லை. காவலரணில் இருந்த ஆர்மிக்காரன் அவளைச் சட்டென மறித்தபோதுதான் அவள் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தாள்.

“ஆ?”

“கொஹேட யன்ன கேல்லோ?” (எங்கே போகிறாய் பெண்ணே?)

“வீட்ட”

“சிங்கள தன்னத்த?” (சிங்களம் தெரியாதா?)

அவள் தமிழிலேயே தொடர்ந்தும் பதில் சொன்னாள்.

“தெரியும். ஆன உன்னோட கதைக்க மாட்டேன்”

“மொன? மொகட கதாகறன்ன? மொகுத் தேரன்னா…” (என்ன? என்ன சொல்கிறாய்? ஒன்றும் புரியவில்லை.)

அவள் பதில் சொல்லாமல் நின்றாள். ஆர்மிக்காரன் விடவில்லை.

“கமன்னா, ஓய மாற லஸ்சனே கெல்லோ” (பரவாயில்லை. நீ மிக அழகாய் இருக்கின்றாய் பெண்ணே)

ஆர்மிக்காரன் இளித்தான். நிலைமை சரி இல்லை என்று அவளுக்கு விளங்கிவிட்டது. சுற்றும் முற்றும் கவனித்தாள். இந்த நேரம் பார்த்து வேறு எவரையுமே காவலரணருகே காணக்கிடைக்கவில்லை. தனியாக மாட்டியிருக்கிறோம். இவன் நிச்சயமாகத் தனகப்போகிறான். எப்படியாவது இன்று இவனை சமாளிக்க வேண்டும். அல்லது கத்தி வேறு ஆர்மியை வரவழைத்து முறையிடவேண்டும்.

அவள் ஆங்கிலத்துக்கு மாறினாள்.

“Behave yourself. What do you want?”

அவள் ஆங்கிலத்தில் பேசியது ஆர்மிக்காரனுக்கு இன்னமும் அவமானமாக இருந்திருக்க வேண்டும்.

“ஐஸி பென்னண்ட” (அடையாள அட்டையைக் காட்டு)”

அடையாள அட்டையை எடுத்துக்கொடுத்தாள். இனி விளக்கம் கேட்பான். இவனின் வயதையும் தோற்றத்தையும் பார்த்தால் எழுதப்படிக்கத் தெரியுமோ தெரியாது. அவள் நினைத்ததுபோலவே கேட்டான்.

“நம மோகட” (பெயர் என்ன?)

“What?”

ஆர்மிக்காரன் பேசிக்கொண்டே ஓரக்கண்ணால் அவளை முழுதாய்ப்பார்த்தவாறு இளித்துக்கொண்டிருந்தான்.

“நம? தன்னத்த? ஓயாகே ஐஸி நேத? நம கியன்ன” (பெயர்? தெரியாதா? உன்னுடைய அடையாள அட்டைதானே? பெயரைச் சொல்லு)

அவளுக்கு இயலாமையோடு மெதுவாகப் பயமும் தொற்றிக்கொண்டது. அடிவயிற்றில் ஏதோ வௌவால் ஒன்று குந்தியிருந்து இறக்கை அடிப்பதுபோல.

000

கதையை எழுதி முடித்து நிமிர்ந்தேன். கண்ணம்மா தன்னுடைய கதையோடு தயாராக நின்றாள்.

"அப்பா இந்தா எண்ட ஸ்டோரி"

வாங்கி வாசித்துப்பார்த்தேன். குண்டு குண்டாய் ஒற்றை வார்த்தை ஒன்றையே கிறுக்கி எழுதியிருந்தாள். கண்ணம்மா ஓரளவுக்கு தமிழ் எழுதுவாள். ஆனால் அதில் எழுதியிருந்தது எனக்கு விளங்கவில்லை.

"என்னதிது? எனக்கு ஒண்டுமே விளங்கேல்லயே?"

"என்னப்பா நீங்கள்? இதுதான் எனக்குத் தெரிஞ்ச ஒரே ஸ்டோரி"

"ஒரே சொல்லில அப்படி என்ன ஸ்டோரி சொல்லீட்டீங்கள் ரைட்டர்?”

"அம்மா ஸ்டோரிதான்"

"என்னது?"

"அம்மாண்ட பெயர்தான் அந்த ஸ்டோரி.. மிச்சத்த நீங்கள் ரைட் பண்ணிடுங்க’

கணம் ஆடிப்போனேன். எவ்வளவு கியூட்டாகச் சொல்கிறாள். புரிந்து சொல்கிறாளா, இல்லை சுட்டித்தனமா என்று தெரியவில்லை. ஆனால் குழந்தை விவரிக்கையில் கவிதைபோல இருந்தது. கடவுளே என்ன மாதிரிக் குழந்தை இவள்? இவளை அடைய என்ன தவம் செய்தோம்? நல்லூரானே, உனக்கு ஒவ்வொரு வருசமும் பிடித்த விரதமும் அடித்த பிரதட்டையும் வீண் போகயில்ல. தேவதைமாதிரி ஒரு குழந்தை. இவளை நன்றாக வளர்த்து ஆளாக்கவேண்டுமே.

கண்ணம்மா விசனத்துடன் சொன்னாள்.

"என்ன அப்பா. டோண்ட் யூ கெட் இட்? இப்ப ரீட் பண்ணுறன் கேளுங்கோ"

கண்ணம்மா தாயின் பெயரை நன்றாக இழுத்து மழலையோடு சொன்னாள்.

“க்ரு...ஷா…. ந்தி ”

தயக்கத்துடன் அவள் தன்னுடைய பெயரை அந்த ஆர்மிக்காரனுக்குச் சொல்லிகொண்டிருந்த வேளையில், தூரத்தே நின்ற மலைவேம்பிலிருந்த வௌவால் ஒன்று தூக்கம் கலைந்து, கிறீச்சிட்ட ஒலியை எழுப்பியவண்ணம் மேலே பறக்க ஆரம்பித்தது.

*****

குறிப்பு:

1996 செப்டம்பர் 7ம் தேதி, இரசாயனவியல் பரீட்சையை முடித்த பின்னர், முந்தயதினம் இராணுவ வாகனத்தில் அடியுண்டு இறந்த நண்பியின் மரண வீட்டுக்கு கிருஷாந்தி குமாரசுவாமி தன் நண்பிகளுடன் சென்றிருக்கிறார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பும் வழியில் கைதடி இராணுவக் காவலரணில் வழி மறிக்கப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்படுகிறார். இதனை அவ்வழியால் சென்றவர்கள் அவதானித்து வீட்டிலே போய்ச்சொல்லவும், உடனேயே இவரைத்தேடி இவரின் தாயும் தம்பியும் பக்கத்துவீட்டுக்காரரும் கைதடி காவலரணை நோக்கி விரைகிறார்கள். கிருஷாந்தியோடு சேர்த்து அவருடைய தாயும் தம்பியும் அவர்களின் பக்கத்துவீட்டுக்காரரும் அதன்பின்னர் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். பக்கத்துவீட்டுக்காரருக்குத் திருமணமாகி ஆறுமாதங்களே ஆகியிருந்தன.

இந்தச்சம்பவம் நடந்து நாற்பத்தைந்து நாட்களின் பின்னர் செம்மணி மனிதப்புதைகுழி ஒன்றில் கிருஷாந்தியினுடையதும், அவரின் அம்மா, தம்பி, பக்கத்து வீட்டுக்காரருடையதும் உடல்கள் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையின்போது கிருஷாந்தி பலரால் குழு பாலியல் வல்லுறவுக்குள் உட்படுத்தப்பட்டு, பின்னர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு புதைக்கப்பட்டது நிருபிக்கப்பட்டது. இவரைத் தேடிப் போனவர்களுக்கும் இதே கதிதான். இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதவான் இளஞ்சேழியன் உத்தரவின் பேரில் அந்த இடத்தை தோண்டிய போது பாரிய மனித புதைகுழி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

 

Comments

  1. Keep Going ...
    Very good post

    ReplyDelete
  2. please add a RSS feed to this so anyone can follow you :)

    ReplyDelete
  3. அழகிய ஆக்கம்...
    கிருஷாந்தி மறைந்திருந்தாலும் யாரல் மக்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார் ...

    ReplyDelete
  4. மன்னிக்கவும் *யாழ் மக்களின்

    ReplyDelete
  5. Hi da, hope u r doing good...writing this one about ur recent story....
    really touched my heart when i read second time... specially this paragraph starting with "அவன் ஒரு மடையன்......" ,though first time i guessed the person, but not that effective in first time) . This story definitely needed to be published somewhere man.....correct some tamil spelling mistake and remove "குமாரசுவாமி" in the last part (logic uthaikkuthu da..). that name itself enough to tell & u put ref in the end... keep going man..
    cheers

    பெயர் வெளியிட விரும்பாத ஒரு இனிய நண்பர்!

    ReplyDelete
  6. கிருஷாந்தி பெயரை குழந்தை சொல்லுற மாதிரியும் மிச்சத்த சென்டரி பாயிண்ட்ல சொல்லற மாதிரியும் joint பண்ணினான் ... ஆனா சரியா கொழுவ இல்ல .. திருப்பி எடிட் செய்யோணும் .. நிறைய தூக்கோனும் ...
    தேங்க்ஸ் மச்சி

    ---- Edit பண்ணிய பின்னர்

    You are right machchi .. எடிட் பண்ணியாச்சு .. இப்ப ஒரே புள்ளில கதை முடியுது .. தேங்க்ஸ் மச்சி!

    ReplyDelete
  7. yah now is lookin good man, perhaps we can try somewhere to publish this story lah...cheers

    பெயர் வெளியிட விரும்பாத ஒரு இனிய நண்பர்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அண்ணா,கடைசி வரியை வாசித்து முடிக்கையில் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வருவதே உங்கள் வெற்றி.
    ஏன் எல்லோரும் பெயரில்லாமல் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்?ஏதும் பிரச்சினையோ?

    ReplyDelete
  9. நன்றி தம்பி,

    சில கமெண்ட்ஸ் நான் Facebook இல் இருந்து copy பண்ணியது.

    "பெயர் வெளியிட விரும்பாத ஒரு இனிய நண்பர்!" ..இந்த நண்பர் தனியாக email அனுப்பியதால், அதை அப்படி வெளியிட்டேன். அவ்வளவே.

    ReplyDelete
  10. அண்ணா!வாசிக்கும்போது நன்றாக இனிமையாக போய் கொண்டிருந்தது. எதிர்பாராத சோகமான முடிவு நெஞ்சை அடைத்து விட்டது. எழுத்தாளரின் எழுத்திலும், நிஜத்திலும் பயணிக்கும் கதையை நன்றாக கையாண்டிக்கிரீர்கள்.. இடை இடையே சின்ன சின்ன ஐடியாக்களும், உரையாடல்களும் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  11. முக்கியமான விசயத்தினை சொல்ல மறந்து விட்டேன். இரு கதைகளும் இணையும் புள்ளி ரசிக்க வைக்கும் சூப்பரான ஐடியா :)

    ReplyDelete
  12. அவனது ஏக்கம் மிகுந்த வலியை இறுதி ஒரே வார்த்தையால் வாசகர்களின் மீது ஏற்றி விட்டீர்கள்.. விமர்சனம் எழுதும் பொது ஏதேதோ மரபுகள், இலக்கணங்கள், படிநிலைகள், பரிமாணங்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.. ஆனால் ஒரு சாதாரண வாசகன் முதலில் புரிந்து உணர்ந்து கொள்வது கதையின் உணர்வு பூர்வமான உயிரோட்டத்தைத்தான்.. அதை நீங்கள் நன்றாகவே உணர்ந்து கையாண்டிருக்கிறீர்கள்.. பல "What If" சம்பவங்களின் ஒருபகுதி நிஜ வாழ்க்கை நிகழ்வுகளாகவும் மறுபகுதி வெறும் கனவுகளாகவும் போய்விடுவதை இதைத் தவிர தெளிவாய் உணர்த்த முடியுமா தெரியவில்லை.. பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    --கௌரி அனந்தன்

    ReplyDelete
  13. நன்றி கௌரி .. உண்மையை சொன்னபோனால் உங்கள் விமர்சனத்துக்கும் மற்றும் பலர் அனுப்பிய email களையும் வாசிக்கும் போது எனக்கு சந்தோசம் தான் வரவேண்டும். ஆனால் வரவில்லை, எழுதி முடித்து மூன்று நாட்களாகி விட்டாலும் இன்னும் ஒரு பாரம் இருக்கிறது. பல நண்பர்கள் இங்கே வைத்து முடிவை அலசினால் மற்றவர்கள் வாசிக்க முன்னர் ஊகித்து விடுவர் என்று தனியாக email அனுப்பினார்கள். எப்போதாவது இருந்து விட்டு தான் இப்படி ஒரு சிந்தனை வரும். இன்னொரு "உஷ் கடவுள்கள் துயிலும் தேசம்" உருவாகுமா என்பது கேள்விக்குறியே! ஒரு கதை எழுதி விட்டு அப்படியே கிடப்பில் போட்டு விட்டேன். இதிலிருந்து முதலில் விடுபடவேண்டும். நாங்கள் சம்பவம் நடந்த சமகாலத்து இளைஞர்கள் என்பதால் வலி எங்களுக்கு இன்னும் அதிகம் தான்.

    ReplyDelete
  14. நன்றி விமல் .. சொல்லபோனால் இந்த கதை எழுத வேண்டும் என்று தோன்றியது காலையில் ரயிலில் செல்லும் போது... திரும்பும் வழியில் இப்படித்தான் என்று ஒரு format முடிவு செய்து விட்டேன். ஆனால் கண்ணம்மா பகுதி எழுத ஆரம்பிக்கும் வரை தோன்றவில்லை. ஒரே இரவில் ஒரு வேகத்தில் முடித்து விட்டேன். எழுதும் போது எல்லாமே வந்து விழுந்தது ...முடிக்கும் போது தாங்க முடியாமல் பாரதியார் பாடல்கள் கேட்டுக்கொண்டே தூங்கினேன் என்றால் dramatic talk என்று நினைப்பீர்கள்.

    ReplyDelete
  15. அவனது ஏக்கம் மிகுந்த வலியை இறுதி ஒரே வார்த்தையால் வாசகர்களின் மீது ஏற்றி விட்டீர்கள்.. விமர்சனம் எழுதும் போது மரபுகள், இலக்கணங்கள், படிநிலைகள், பரிமாணங்கள் என்றெல்லாம் ஏதேதோ சொல்வார்கள்.. ஆனால் ஒரு சாதாரண வாசகன் முதலில் புரிந்து உணர்ந்து கொள்வது கதையின் உணர்வு பூர்வமான உயிரோட்டத்தைத்தான்.. அதை நீங்கள் நன்றாகவே உணர்ந்து கையாண்டிருக்கிறீர்கள்.. பல "What If" சம்பவங்களின் ஒருபகுதி நிஜ வாழ்க்கை நிகழ்வுகளாகவும் மறுபகுதி வெறும் கனவுகளாகவும் போய்விடுவதை இதைத் தவிர தெளிவாய் உணர்த்த முடியுமா தெரியவில்லை.. பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. // நாங்கள் சம்பவம் நடந்த சமகாலத்து இளைஞர்கள் என்பதால் வலி எங்களுக்கு இன்னும் அதிகம் தான்.//

    உண்மை தான்.. ஆனால் எங்களது வலியை எப்படி எப்படி வெளிப்படுத்துறோம் என்பதில் தான் எல்லாமே உள்ளது.. அதில் உங்களது எழுத்து தனித்து நிற்பதில் எம் எல்லோருக்கும் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  17. வணக்கம் அண்ணா,
    உங்களின் கதை எழுதும் பாங்கு பாராட்டுக்குரியது. ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதியை ஒரு கற்பனை காதல் மூலம் வெளிக்கொண்டு வந்த விதம் வாசிப்போரை வசீகரிக்கும் என்றால் அது மிகை ஆகாது. இருப்பினும் எனக்கு ஒரு வருத்தம் .

    "ஈழம் என் அடையாளம். இப்போது தொலைத்துகொண்டு இருக்கிறேனோ என்ற பயத்தினால் உருவான தளம் தான் இது....."
    என்று தானே இந்த படலை உருவாக்கப்பட்டது.
    எது அண்ணா எங்கள் அடையாளம்?
    எங்கள் மொழி, அதன் தொன்மை, அதன் இலக்கண்ம் மற்றும் கலாசாரம் ஆகியவை இல்லையா?
    பிற மொழி கலந்து எழுதும்போது காலப்போக்கில் அது தமிழ் சொல் என்று தானே பின்வரும் சந்ததி கொள்ளும்.
    யாழ்ப்பாண்த்தில் தமிழ் ஆட்சி நிலவிய காலத்தில் வணிக நிலையங்களின் பெயர் பலகைகள் வாகன இலக்கதகடுகள் போன்றன தமிழில் தான் இருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தது.
    எதற்காக?
    மேலும் திரைப்பட பாடலாசிரியர் தாமரை அவர்கள் தான் எழுதும் பாடல்களில் பிற மொழி பாவிப்பதை தவிர்க்கிறாரே.
    எதற்காக?
    என் மொழி மீது நான் வைத்திருக்கும் பற்றினாள் தான் உங்கள் கதையை இவ்வாறு விமர்சித்தேன். உங்கள் மனம் புண்பட எழுதியிருந்தால் என்னை மன்னிக்கவும்.

    ReplyDelete
  18. பற்றினால்*
    எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன்

    ReplyDelete
  19. நன்றி தம்பி, இது ஒரு ஆய்வுக்குரிய விடயம். எது சரி எது தவறு என்பது மிகவும் தர்க்கம் நிறைந்தது. இது சரியாகலாம் என்று நினைக்கிறேன் அவ்வளவு தான். என்னுடைய கருத்துக்கூட காலத்துக்கு காலம் மாறுவது தான்.

    என்னைப் பொறுத்த வரையில் மொழி என்பது ஒரு ஊடகமே. பிராந்தியம் சார்ந்த மக்கள் தம்மிடையே தொடர்புபடுவதற்கு உருவானதே அந்த மொழி. அந்த மக்கள் சார்ந்து அமைந்ததே கலாச்சாரமும். அதனாலேயே பிராந்தியமும் மக்களும் மாறும்போது அது சார்ந்த கலாச்சாரமும் மொழியும் பரிணாமமடைகிறது. இந்த புதியன புகுதலும் பழையன கழிதலும் தவிர்க்க முடியாது. முயலவும் கூடாது.

    இங்கே நாம் வளர்ந்த கலாச்சாரமும் என் தந்தை வளர்ந்த கலாச்சாரமும் வேறு வேறு. என்னுடைய அடுத்த தலைமுறை காணும் கலாச்சாரம் வேறு. இதிலே பரிணாமத்துக்கு எது முக்கியமோ அது மட்டுமே இடம் மாறும். மற்றையவை அந்த அந்த தலைமுறைகளிலேயே தங்கிவிடும்.

    நான் என் மொழியை விரும்புவன். ஆனால் அதை ஒரு மொழி என்ற அளவிலும் அந்த மொழியில் எனக்கு குறிப்பிடத்தகுந்த ஆளுமை உண்டு என்ற அளவிலுமே அதை மதிக்கிறேன். இதில் தமிழ் என்ற கூறுக்காக உணர்ச்சிவசப்படுவற்கில்லை. தமிழின் விருத்தாப்பியங்கள் மராட்டியிலும், பெங்காலியிலும், ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் ஏன் சிங்களத்திலும் இருக்கின்றன. இலக்கியங்கள் வருகின்றன. மொழிகளை தாண்டிய ஒரு ஊடகம் அமையும்போதே அங்கே கலை உச்சம் அடையக்கூடியது என்று எண்ணுகிறேன். குழந்தையின் மழலைக்கு நிகரான இலக்கியம் இதுவரை உருவாகததற்கு இதுவே காரணமும் கூட.

    என் எழுத்துக்கு எது இயல்பாக அமைகிறது என்று நினைக்கிறேனோ அந்த அளவுக்கே ஆங்கிலம் பயன்படுத்துகிறேன். ஒரு சிறுகதை எழுதும்போது இந்த பத்தி எழுதும் பாணியை பின் பற்ற முடியாது. வேறு மொழி தேவைப்பட்டால் பயன் படுத்தவேண்டும். அதை தாண்டி செம்மொழி ஆக்கும் போது அது தன் இயல்புத்தன்மையை இழந்துவிடுகிறது. என் பணி தமிழ் வளர்ப்பது இல்லை. தமிழை வளர்ப்பதற்கு நாம் யார்? அது ஒரு மொழி, கடவுளைப்போல. கடவுளின் இருப்பு தேவைக்கு மாறுபடுவது போல.

    இங்கே ஒரு வாழ்க்கையை தான் பதிவுகிறேன். வாழ்க்கையை சற்று புனைந்து வருவதே என் படைப்புகள். எனக்கு நான் கடந்து வந்த வாழ்க்கை தான் அடையாளம். அந்த வாழ்க்கை ஒன்றும் பெருமைக்குரியதும் கிடையாது. பார்த்தது முழுதும் போரும் இழப்புக்களுமே. அடையாளத்தை இழந்துவிடுகிறேன் என்று சொல்லியது, என்னுடைய வாழ்க்கையை கால ஓட்டத்தில் மறந்துவிடுவேனோ என்பது தான். அதை மறக்கமுன்னர் பதிவு செய்யவேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவே.

    இது என் கருத்து மாத்திரமே. நிலையானதும் கிடையாது. கால ஓட்டத்தில், அனுபவத்தில் எங்கள் தளங்கள் மாறிக்கொண்டே செல்கின்றன. இங்கே எதுவுமே நிலையானது கிடையாது. நானும் நீங்களும் ஏன் தமிழும் ஆங்கிலமும் தான். யார் கண்டது? பரிணாம வளர்ச்சியில் மொழியின் தேவையே இல்லாமல் போனாலும் போகும்.

    ReplyDelete
  20. impressed with your answer to the unknown brother...

    ReplyDelete
  21. நன்றி முத்தரசன், வருகைக்கும் கருத்துக்கும். அழகான பெயரும் கூட, ரசித்தேன்.

    ReplyDelete
  22. உண்மையும் உணர்வும் இணைந்த தனித்துவமான ஆளுமை மிக்க புனைவு குமரன்.வாசித்துப் பல நிமிடங்கள் ஆகின்றன.சொல்வதற்கான சொற்கள் எல்லாம் தொலைந்து போய் விட்டன.

    உங்கள் நீண்ட கருத்துரை உட்பட அவற்றின் சாராம்சத்தைச் சரிவர நான் செரித்துக் கொள்ள சற்றே அவகாசம் தேவை போல தெரிகிறது.

    புனைவிலும் பின்னூட்டக் கருத்துரையிலும் உண்மையின் பாரம் அத்தனை அதிகம்.

    உங்களிடம் நான் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் இப்போது புரிகிறது.

    தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும் குமரன்.

    உங்கள் வலைப் பூவைக் கண்டு கொண்டது மகிழ்ச்சி.மீண்டும் வருகிறேன்.

    பல விதத்திலும் மகிழ்வைத் தந்து சென்றிருக்கிறது இன்றய தினம்!!

    யசோக்கா.

    ReplyDelete
  23. கிருஷாந்தி மற்றும் பலர் அனுபவித்த கொடுமைகள் செம்மணியாக..
    56/83/87/95/2009..தொடர்கதையாக..

    ReplyDelete
  24. நன்றி யசோ அக்கா .. இனி தொடர்ந்து உரையாடலாம்

    ReplyDelete
  25. நன்றி பெயரில்லா நண்பரே .. உண்மை தான் .. தொடர்கதை

    ReplyDelete
  26. அருமையான சிறுகதை.

    ReplyDelete
  27. இது கதையல்ல நிஜம் ..Mr M.Shanmugan

    ReplyDelete
  28. நன்றி ஷண்முகம்

    ReplyDelete
  29. நன்றி பெயரில்லா நண்பரே!

    ReplyDelete
  30. very touching.... such a nice imagination

    ReplyDelete
  31. நன்றி பெயரில்லா நண்பரே

    ReplyDelete
  32. நீங்கள் கதையை முடித்த பாணி அருமை.. நிஜ வலியை அருமையாக உணர வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  33. Thanga mudiyavillai.Epadi marakka pogireno theriyavillai.

    ReplyDelete
  34. நன்றி கீதா .. மறக்கவேண்டாம் .. மறக்கும் விஷயம் இல்லை இது!

    ReplyDelete
  35. Etheum uyir ullavarai marakkamaten. Gunaseelan sir in class,Science hall,Science master........Milo t-shirt,next seat .
    Kalangal engalai mattra ninaithalum adimanathil irukkum thuyaram epadium velippadum ippadi orunal.

    Thank you so much JK. I'll try to type in tamil next time.

    ReplyDelete
  36. ஜனனி3/29/2012 8:38 pm

    நெஞ்சை தொட்ட சிறுகதை .... உங்கள் வலைப்பூவை கண்டது சந்தோசம் ... மேலும் எழுதுங்கள் ..

    ReplyDelete
  37. நன்றி ஜனனி .. தொடர்ந்து வாங்க

    ReplyDelete
  38. நெஞ்சம் கணக்கிறது. அருமையான மொழி நடையில் அசத்துகிறீர்கள் ஜே கே அண்ணா!!!

    ReplyDelete
  39. நன்றி முருகேசன்!

    ReplyDelete
  40. நெஞ்சைத்தொட்டுவிட்டீர்கள்....ஆரம்பத்தில் வேறுஏதோ திசையில் செல்கின்றது என்று நினைத்தால் இறுதியில் இடியாகிவிட்டது... அவளைப்போல் ஒரு அழகான குழந்தை...காதலியிடம் கூறிய அதே வார்த்தைகள்...தமிழில் எழுதும்போது ஆங்கிலம் கலக்கவேண்டாம் என்ற கொமண்ட்...ஜேஜே க்கு நான் அதிகப்பிரசங்கித்தனம் பண்ன எனக்கு தகுதி இல்லையாயினும் எனது ஒப்பீனியன்...இங்கிலீஸ்காரன் படத்தில சத்தியராஜ் கூறியதைத்தான் அவர்களுக்கு கூறவேண்டும் நீங்களே தெளிவாக பின்னூட்டத்தில் இட்டுவிட்டீர்கள்.

    நீங்க வாங்க போங்க என்பது இந்தியன் சிலாங்க் நீங்கள் வாங்கோ போங்கோ என்பதுதான் நமது யாழ்ப்பாண ஸ்டைல்//சடுதியாக கேட்டபோது அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
    “நீங்க எத்தனை பேரு?” // தவறு என்றால் மன்னிக்க

    ReplyDelete
  41. நன்றி கிருத்திகன் ...

    //நீங்க வாங்க போங்க என்பது இந்தியன் சிலாங்க் நீங்கள் வாங்கோ போங்கோ//
    பல தடவைகள் சொல்லிவிட்டேன் .. எங்கட வீட்டில் நீங்க வாங்க போங்க தான் .. சிலவேளைகளில் நாங்க இந்தியன் சிலாங்கில் பேசுகிறோமோ தெரியாது!

    என் எழுத்து தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதையும் இந்த இடத்தில் குறிப்பிடவேண்டும் . முறையாக அவ்வப்போது எடுத்து சொல்லி திருத்தும் சக்திவேல் அண்ணாக்கு அந்த பெருமை எப்போதும் சேரும்.

    ReplyDelete
  42. varthaikal thedi thottu vidden paaraduvatku...
    onru mattum solkiren verum thahaval aha mattum ilamal ithu ponra ilakiya vadivankal than engalin varalarai pathivu seya pohinrana miha uruthiyaka: antha vahayil ungal ponravarkalin panku maraka mudiyathathu.

    great JK anna, we are your fan ever.

    ReplyDelete
  43. krishanthy's life is not a story its an ....
    no words to describe...

    ReplyDelete
  44. Another melting story. A real incident no one can forget been brought in to such a story line is awsome. "What if" concept it awesome and the way u hv drafted brings out the real feel of a person. May be if she had such a character in her life, this is how he might have felt about his future I guess.

    ReplyDelete
  45. தற்போது நீங்கள் FB ல் பகிர்ந்த LINK ஊடாக வாசித்தேன். முடிவு நெஞ்சை அடைக்கின்றது. தற்போது வெளிவரும் எலும்புக்கூடுகளில் எவ்வளவு ஏக்கம், கனவுகள் கதைகள் இருந்திருக்கும். இவற்றையும் கதைவடிவில் எழுதவும். எதிர்காலத்தில் எழுத்துகள் மறையாது கதை சொல்லும்.
    vthusy

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...