Skip to main content

Posts

மணியம் மாஸ்டர்

வழமையான யாழ்ப்பாணத்துக் காணொளி ஒன்று. தென்மராட்சி வயல் காட்டுப்பக்கம் ஒரு ஐயாவைப் பேட்டி எடுக்கிறார்கள். நரை விழுந்த தோற்றத்தோடு, நெற்றியில் பட்டைத் திரு நீறும் நம் ஊருக்கேயான மென் நீல வண்ண சேர்ட்டும் சாறமும் அணிந்தபடி சக நண்பர்களோடு வயலில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். நேர்காணல் எடுப்பவர் அவரிடம் எத்தனை ஆண்டுகளாக வயல் வேலை செய்கிறீர்கள் என்று கேட்க, ஐயா சொல்கிறார். எனக்கு எழுபத்தொரு வயது. அம்பது வரியமா நாங்கள் வயலுக்கதான் நிக்கிறம். அப்ப வயல்தான் மெயினா செய்யிறனீங்களா? நாங்க டீச்சர். இப்ப ரிட்டயர் ஆயிட்டம். ஆனால் எப்பவுமே வயல்தான். எந்த ஸ்கூலில படிப்பிச்சனிங்கள் ஐயா? நாங்கள் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கொலிஜில படிப்பிச்சனாங்கள். எனக்கு உடல் உடனேயே கிறுகிறுத்தது. இது எங்கட மணியம் மாஸ்டர் அல்லவா? ***** பரி. யோவானின் ஒரு சில misfits வாத்திமார்களில் முதன்மையானவர் இந்த மணியம் மாஸ்டர். அதனாலேயே எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். மீசாலை ஒரு C90 மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் லேட்டாகத்தான் தினமும் அவர் பாடசாலைக்கு வருவார். நீண்ட தூர மோட்டர் சைக்கிள் பயணத்தால் அவருடைய கால்கள் எல்லாம் புழுதி பட...

மழை நாளில் 'என் கொல்லைப்புறத்துக் காதலிகள்'

ஒரு மாதத்துக்கு முன்னர் நண்பன் ஒருவன் தன் வீட்டில் பெய்த மழையைக் காணொளி எடுத்துப் பகிர்ந்திருந்தான். நான் பிறந்து வளர்ந்த ஊரான தின்னவேலியில் பெய்த மழை அது. மல்லிகைப் பந்தல், வாழை, செவ்வரத்தை, நெல்லி, பூங்கன்றுகள், இடையே நாய்க்கூடு எனச் சூழ்ந்திருந்த அந்த மிக அழகான வீட்டு முற்றத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. தின்னவேலி மழை எப்போதுமே அண்டாவைக் கவிழ்த்துக்கொட்டுவதுபோலத்தான் பெய்யும். நான் அன்று அவனுக்கு இப்படி ஒரு கருத்து இட்டேன். வெள்ளம் தேங்கி வீடு கசியாதவரைக்கும் தின்னவேலியின் மழை மிக அழகுதான். ஏன் அப்படிச் சொன்னேனோ தெரியாது. ஆனால் இதனைச் சொல்லிய சில வாரங்களிலேயே தீவு முழுதும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் பெருங் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டன. மழை நம் வீட்டுக்குள் நுழையாதவரைக்கும்தான் அழகு. அப்புறம் அது ஒரு கொடிய அரக்கியாகிவிடுகிறது. சிரங்கு. முட்டு. கக்கூஸ் அடைப்பு. நுளம்பு. காயாத உடுப்பு. மின் வெட்டு. நிலமெல்லாம் கசிந்து சகதி ஆவது. இவை எல்லாமே சிறு வெள்ளத்துக்கே வந்து சேரக்கூடிய துன்பங்கள். நிலம் சரிந்து மொத்த வீடுமே அமுங்குவதும் குழந்தைகள் உள்ள வாகனங்கள் அடித்துப்போவதும் பெரு வெள்ளத்த...

படலை பொட்காஸ்ட்

சில வருடங்களாகவே பொட்காஸ்ட் தொடர் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளூற ஊறிக்கொண்டிருந்தது. அது நான் தொடர்ச்சியாகக் கேட்டுப் பயனடைந்துகொண்டிருக்கும் சில பொட்காஸ்டுகளின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்று. The History of Literature, Paris Review, The New Yorker Fiction, The New Yorker Writer’s Voice, Not Stupid, The Minefield, If You’re Listening, Ladies We Need to Talk என்று பல பொட்காஸ்ட் தொடர்களின் ஆதர்ச இரசிகன் நான். இந்த பொட்காஸ்டுகள் அனைத்துமே ஆழமான விசயங்களையும் அன்றாட விசயங்களையும் மிக இயல்பாகவும் முன்முடிவுகள் இல்லாமலும் அலசுபவை. கேட்கும்தோறும் புதியவற்றை நமக்கு அறிமுகப்படுத்துபவை. பெரும்பாலானவற்றுக்குக் காணொளிகளும் இல்லை. வெறுமனே ஒலி மாத்திரம்தான். நடைப்பயிற்சியின்போதும் நீண்ட தூரப் பயணங்களின்போதும் காதுகளில் ஒலிக்கவிட்டால் நேரம் கரைவதே தெரியாது. பல சமயங்களில் புதிய அத்தியாயங்களைக் கேட்பதற்காகவே நடைப்பயிற்சிக்குப் போன சம்பவங்களும் உண்டு. அத்தனை அலாதியான அனுபவத்தையும் தேடலையும் கொடுப்பவை இவை. இவ்வாறான பொட்காஸ்டுகளை செய்வதற்கு முன்னர் பெருந்தேடலும் தயார்படுத்தலும் தேவை என்று தோன்றி...

ஆறிடும். ஆறாது.

சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு மிக நெருக்கமான அக்கா ஒருவர் ஒரு வார்த்தை சொன்னார். அது என்ன வார்த்தை என்பதோ சொல்லப்பட்ட சூழலோ அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அது என் ஆழ் மனதை மிகவும் பாதித்துவிட்டது. அவர் அப்படியொன்றும் மோசமாக எதையும் சொல்லவில்லை. அது சாதாரணமாகக் கடந்துபோகவேண்டிய ஒன்றுதான். ஆனால் என் நுண்ணுணர்வை அது தாக்கிவிட்டது. பிறரிடம் கடமைப்படுவது என்பது எனக்குக் கொல்லக்கொண்டுபோவதுபோல. அதனால் மனம் சஞ்சலத்தோடு அலைந்தது. அந்த மன அங்கலாய்ப்பு அர்த்தமற்றது என்று புத்தி எனக்குப் பாடம் புகட்டியது. ஆனால் என் மனதினால் அதனை விட்டுத்தள்ளமுடியவில்லை. நாள் முழுதும் அது புலம்பிக்கொண்டேயிருந்தது. அடுத்த நாளே, சொல்வழி கேட்கமாட்டாயா என்று புத்தி என் மனதைக் குட்டி அடக்கியதால் மனம் கூண்டுக்குள் பதுங்கிய நாய்க்குட்டியாட்டம் ஒடுங்கிவிட்டது. ஆனால் இரு வாரங்கள் கழித்து, புத்தி வேலைக்குப் போயிருந்த சமயம் மனம் கூண்டுக்குள்ளிருந்து மறுபடியும் வெளிவந்து வேலையைக் காட்டிவிட்டது. ஏனென்று தெரியவில்லை. சாதாரண விசயம்தான். சனியன்போல அலைக்கழிந்தது. சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது என்று ஒரு பாட்டு இருக்கு. கன்னி மனத...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 11 - நைல் எனும் பாலூட்டும் தாய்

இது புகண்டா இனக்குழுக்களிடையே நிலவும் ஒரு நாட்டார் கதை. ஒரு கிராமத்திலே மட்பானைகளை செய்யும் குயவர் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏனைய சிறுவர்களைப்போலன்றி கொஞ்சம் விட்டேற்றியாக, தானும் தன்பாடுமாகத்தான் அவன் திரிவான். ஒருவர் வித்தியாசமாக இருந்தால் அவரை எள்ளி நகையாடுவது ஒன்றும் மனிதர்களுக்குப் புதிதல்லவே. இந்தச் சிறுவனையும் அவன் பிறந்ததிலிருந்தே ஊரில் அவனை எல்லோரும் பழித்துவந்தார்கள். அவனது தாய்கூட தன் பிள்ளை மற்றவர்களைப்போல இல்லையே என்று வருந்தினாள். அவனும் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து வீட்டை விட்டே வெளியேறுகிறான். காட்டில் அலைகிறான். வழியில் காணும் விலங்குகளிடம் அவன் தன்னைப்பற்றிச் சொல்லவும், அவையும், நீ வேலை செய்வதில்லை, நன்றியுடையவனாய் இல்லை, மக்களோடு பழகுவதில்லை என்று ஒவ்வொரு காரணங்களாய்ச் சொல்லி அவனை முட்டாள் என்று விளிக்கின்றன. இவற்றையெல்லாம் கேட்டு அவனது மனம் மேலும் சஞ்சலப்பட்டது. அப்போதுதான் அவன் ஒரு முயலைக் காண்கிறான். முயல் அவனை அரவணைத்து ஆறுதல் சொல்கிறது. தன் வீட்டுக்கு அவனை அழைத்துச்சென்று தான் சேகரித்து வைத்திருந்த பருப்புகளைத் தின்னக்கொடுத்...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 10 - உன்மத்தம் ஆகுதடி

வழியில் நைல் நதி குறுக்கிட்டது. இந்தப் பக்கம் புகண்டா காடும் அந்தப் பக்கம் சவான்னா புல்வெளியும் பரவிக்கிடக்க, நடுவே நதி கடல்போல வியாபித்திருந்தது. நாம் பாலத்தைக் கடக்கும்போது சூரியன் காடுகளிடையே தலை தூக்க ஆரம்பித்திருந்தான். மொத்த ஆறுமே ஒரு வண்ணக்குழம்புபோல நகர்ந்துகொண்டிருந்தது. அதன் இரு புறங்களிலும் நீருக்குள்ளிருந்து தலை தூக்கியிருந்த நீர் யானைகளின் வழுக்கல் நெற்றிகளில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறித்து மின்னின. ஆங்காங்கே சில முதலைகளையும் மௌலீமா காட்டினாள். நாங்கள் வாகனத்தைப் பாலத்தருகே நிறுத்தி இறங்கினோம். பொன்னிற மேனியுடன் நதியும் அதனுள்ளே முதலைகளும் பறவைகளும் நீர் யானைகளும் என்று அழகும் ஆபத்தும் ஒரு சேர்ந்த இயற்கை அது. நதி ஒரு நகரும் காடு. அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் நேரமாவதையே உணரமுடியாது. மௌலீமாதான் வா போகலாம் என்று வலிந்து அழைத்துப்போனாள். இப்பயணம் முழுதும் ஏற்பட்ட உணர்வு இது. ஒன்றில் மனம் தரித்துவிட்டால் பின்னர் அங்கிருந்து நகரவே அது இடம் கொடுக்காது. ஆனால் அதேசமயம் அடுத்ததையும் பார்த்தே தீரவேண்டும் என்று அது அடம் பிடிக்கவும் செய்யும். ஒரு பெரு நாவலின் அற்புத வரிகளில் இரச...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 9 - காதலின் துயரம்

அன்றுதான் காட்டுத் தர்பாரைப் பார்க்கப்போவதற்கு நாம் திட்டமிட்டிருந்தோம். முந்தைய தினமே கம்பாலாவிலிருந்து புறப்பட்டு நான்கு மணி நேரம் பயணம் செய்து இந்த மச்சிசன் நீர்வீழ்ச்சியை அண்டிய வனப்பகுதிக்கு வந்திருந்தோம். ஜெகனின் உள்ளூர் நண்பர் ஒருவர்தான் இந்தச் சுற்றுலாவை ஒழுங்குபடுத்தியிருந்தார். இரண்டு சபாரி வாகனங்கள். நம் வாகனத்துக்கு சோபியா ஓட்டுநர். லௌமி, சுகி, அவர்களுடைய மகன்கள் இருவரும் பயணம் செய்த வாகனத்துக்கு வின்சன் ஓட்டுநர். மௌலீமா ஒரு பொதுவான வழிகாட்டி. எல்லோருமே வனவிலங்குகள் சம்பந்தமான உயர்கல்வி கற்றவர்கள். இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள். நாம் தங்கி நிற்கும் மேர்ச்சிசன் காட்டுப்பகுதியைப் பற்றிய தகவல்களை எல்லாம் அவர்கள் பயணம் நெடுகவும் சொல்லிக்கொண்டே வருவார்கள். காட்டில் அலைந்து களைத்திருக்கும்போது சாப்பிடலாம் என்று வழியில் ஒரு சந்தையில் நிறுத்தி வாழைப்பழச் சீப்புகளையும் அன்னாசிகளையும் அவர்கள் வாங்கினார்கள். ஆனால் மச்சிசன் காட்டின் நுழைவு வாயிலில் அனுமதி பெறுவதற்காக நாம் இறங்கி நின்ற வேளையில் பபூன் ஒன்று வாகனத்தின் யன்னல் வழியே உள்ளே நுழைந்து வாழைப்பழச் சீப்புகளை எடுத்துக்கொண்டு ஓட...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 8 - மாப்பிள்ளை கொடுத்த சீதனம்

டொன்சபாலா டொன்சபாலா என்று லுகண்டா மொழியில் அமைந்த ஒரு கோஸ்பல் பாட்டு பின்னணியில் ஒலித்தது. ஆழமாகக் கேட்டால் ஏ. ஆர். ரகுமானின் பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்து சேரும். ஏலே கீச்சான் வந்தாச்சு. நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 7 - அதிசயத் திருமணம்

ஜெகனதும் பிரீடாவினதும் திருமணத் திருவிழாவின் முதல் நாள் அது. மணப்பெண்ணை மாப்பிள்ளை வீட்டாருக்கும் மாப்பிள்ளையைப் பெண் வீட்டாருக்கும் அறிமுகம் செய்யும் நிகழ்வு. க்வாஞ்சுலா என்று லுகாண்டா மொழியில் இதனை அழைக்கிறார்கள்.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 6 - காண்டாமிருகங்களும் கொம்புத்தீயும்

இது கிபாட்டே எனும் குடியானவனின் கதை. முன்னொரு காலத்தில் அடர் காட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த சிறு கிராமம் ஒன்றிலே கிபாட்டே என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். ஊரிலே அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே தம்மைப் பெரும் அறிவாளிகளாக நினைப்பவர்கள். அறிவுரை சொல்வதிலும் வல்லவர்கள். கிபாட்டே கேட்கிறானோ, இல்லையோ, எதற்கெடுத்தாலும் அவர்கள் அவனுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கிக்கொண்டேயிருப்பார்கள்.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 5 - வரலாற்றின் சுவர்

குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்க்கையில் உள்ளே மூன்று தலைகள் மிரட்சியுடன் உறைந்து கிடந்தன. இது தினமுரசு வார இதழில் வெளியாகிய இடி அமீன் தொடரில் வந்திருந்த வாசகம். அச்சொட்டாக இப்படித்தான் எழுதப்பட்டிருந்ததா என்று நினைவில்லை. ஆனால் அந்தக் காட்சி இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்குப் பதினேழு பதினெட்டு வயது இருக்கலாம். யாழ்ப்பாணம் மறுபடியும் ஶ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த காலம். இயல்பாகவோ அல்லது வலிந்தோ சில விசயங்கள் நமக்குப் புதிதாகக் கொடுக்கப்பட்டன. பெப்சி, பஃன்டா போன்ற சோடாக்கள். பலாலியிலிருந்து இலவசமாக ஶ்ரீலங்கா இராணுவத்தினர் ஒளிபரப்பு செய்த HBO, Star, MTV, விளையாட்டு சானல்கள். வீதிக்கு வீதி வெளிக்கிளம்பிய மினி சினிமாக்கள்.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 4 - காலனித்துவமும் திருட்டும்

அதிகாலையிலேயே போடாபோடாசுகளின் ஹோர்ன் சத்தங்கள் தூக்கத்தைக் கலைத்துவிட்டன. நான் எழுந்து திரைச்சீலையை விலக்கிப்பார்த்தேன். பள்ளமான முட்டுச் சந்து ஒன்றில் வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. முட்டாமல் மோதாமல் விலகியும் நழுவியும் ஓடுவதுதான் கம்பாலாவில் வாகனம் ஓட்டுவதற்கான கலை. ஒரு ரக்பி வீரர் எப்படி சுழித்துக்கொண்டு பந்தை அடுத்த கரைக்குக் கொண்டுசேர்ப்பாரோ அதுபோல போடாபோடாசுகள் ஓடிக்கொண்டிருந்தன. பாதையோரங்களில் சூட்டும் சப்பாத்தும் அணிந்த பாடசாலை மாணவர்கள் புழுதிக்கு இடையே நடந்துபோனார்கள். உகண்டாவில் பாடசாலைகள் அதிகாலையே ஆரம்பித்து மாலை ஆறு மணிவரைக்கும் நீளும் என்று ஜெகன் சொல்லியிருந்தான். அங்கே இன்னமும் ஆங்கிலக்கல்விதான். பிரித்தானியக் காலனித்துவம் இந்த நிலத்தில் பூர்வீகமாகப் பரவி வாழ்ந்த பலவிதமான மொழிகளைப் பேசும் இனக்குழுக்களை (clans) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடு என்பதால் இன்னமும் ஆங்கிலம் பொதுமொழியாக உகண்டாவில் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் தத்தமது இனக்குழுக்களிடையே அவர்கள் தமது மொழியைச் சரளமாகப் பேசுகிறார்கள். ஆங்கிலத்தை இந்த நாட்டில் எல்லோருமே பேசுவார்கள். அது ஒரு தொடர்பாடல் மொழியாக மா...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 3 - சிம்பன்சி முதல் செயற்கை நுண்ணறிவுவரை

மழை துமிக்க ஆரம்பித்தது. கம்பாலாவுக்கு வடமேற்கே இருநூற்றைம்பது கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் புடொங்கா என்கின்ற அடர்த்தியான மழைக்காடு அது. வரும் வழியில் ஒரு மலைப்பகுதியில் வண்டியை நிறுத்திப் பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் காடுதான் தெரிந்தது. விமானத்தின் யன்னலூடே பார்க்கையில் வானமெங்கும் விரித்துக்கிடக்கும் முகிலைப்போலக் காடு நிலமெங்கும் பச்சையாய்ப் படர்ந்திருந்தது. எங்கள் குழுவில் பதினைந்து பேரளவில் இருந்தார்கள். பச்சை, சாம்பல் நிறங்களில் நீர்புகா உடைகளும் மலையேறும் சப்பாத்துகளும் தொப்பியும் அணிந்திருந்தோம். வனக்காவலர்கள் எங்களுக்கான பயண அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

உகண்டாவில் ஒன்பது நாட்கள் - பாகம் 2 - ஊர் எனும் யானை

விமானம் திடும்மென்று தரையிறங்கி பெரும் இரைச்சலோடு ஊர்ந்தபோது உள்ளிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பலர் மளமளவென எழுந்து தம்முடைய கைப்பைகளைத் தூக்கிக்கொண்டு தயாரானார்கள். ஏன் அந்த அவசரம் என்று எனக்குப் புரிவதேயில்லை. விமானம் அதுபாட்டுக்கு ஊர்ந்து, நிலையத்தைச் சென்றடைந்து, கதவு திறக்கப்பட்டு, முதல் வகுப்பு இருக்கைப் பயணிகளையும் வெளியே அனுப்பிய பின்னர்தான் எங்களை வெளியேறவே அனுமதிப்பார்கள். அப்போதும்கூட முன்னிருக்கைகளில் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து, தம் கைப்பைகளைச் சாவகாசமாக எடுத்து நகரும்வரை நாம் காத்திருக்கவேண்டும். அதற்குள் அதறிப் பதறி எழுந்து முட்டிமோதி நிற்பதில் என்ன பயன்? நான் கல்லுப்பிள்ளையார் கணக்காய் உட்கார்ந்திருந்தேன். காதில் இளையராஜா தேஷாக இசைத்துக்கொண்டிருந்தார். இருபத்தெட்டு மணி நேர நெடிய பயணம். தூக்கம் வராது, தோளோடு நீ சேர்க்க ஏக்கம் வராது என்று சித்திரா இறைஞ்சிக்கொண்டிருக்க எனக்கோ தூக்கம் தூக்கிப்போட்டது.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 1 - பாடசாலை நண்பனின் திருமணம்

ஏனைய எந்த நட்பிலும் இல்லாத பெரு விசயம் ஒன்று பாடசாலை நட்பில் இருக்கிறது. ஆறாம் ஆண்டில் நான் பரியோவான் கல்லூரிக்குள் நுழைந்தபோது எனக்கு அந்தச் சூழலே புதிது. அதிலும் எண்பதுகளில் தின்னவேலியில் பிறந்து வளர்ந்தவனுக்கு அரியாலைப் பகுதியே புதிதாகத்தான் இருந்தது. யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் முதலாம் ஆண்டிலிருந்து கூடப்படித்த பப்பாவைத் தவிர வேறு எவரையும் அப்போது அங்கே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னோடு சேர்ந்து எங்கள் வகுப்பில் முப்பத்தாறு பேர் ஆறாம் ஆண்டு அனுமதிப் பரீட்சையில் தெரிவாகி வந்திருந்தார்கள். பண்டத்தரிப்புமுதல் அச்சுவேலி, இருபாலை, சாவகச்சேரி என்று யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கிலிருந்த ஆரம்பப் பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் அங்கு வந்து இணைந்திருந்தார்கள். அவர்களோடு பரியோவானிலேயே பாலர் கல்வியிலிருந்து கற்று வந்த இரண்டு வகுப்புகளும் சேர்ந்து, ஏ பி சி என மொத்தமாக மூன்று வகுப்புகள். கொஞ்சம் பயம். கொஞ்சம் குழப்படி. கொஞ்சம் படிப்பு. நிறைய விளையாட்டு என்ற எளிமையான பதினொரு வயது சிறுவர்களைக்கொண்ட மூன்று வகுப்புகள் அவை. அப்படி ஆரம்பிக்கும் நட்புகளில் பெரும் பந்தம் ஒன்று இருக்கிறது. பாடசால...

முக்குழி அப்பம்

தேங்காய்ச் சிரட்டை ஒன்று தும்புகள் எல்லாம் நீக்கப்பட்டு, அதன் கண்களும் அகற்றப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. இப்ப இந்தச் சிரட்டைல மூன்று குழிகள் இருக்கல்லா? அதாலதான் முக்குழி எண்ட பெயர் வந்தது. இதால மூடி வச்சுச் சுடுறதால இத முக்குழி அப்பம் எண்டு கூப்பிடுவம். எங்கள் வீட்டில், வார இறுதிகளில் காலை நேரத்து உணவாகப் பல தடவைகள் முக்குழி அப்பத்தை அம்மா சுட்டுக் கொடுத்திருக்கிறார். புட்டு, இடியப்பம், தோசை, உரொட்டிபோல முக்குழி அப்பமும் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி சமைக்கப்படும் ஒரு உணவு. எங்கள் வீட்டைப்போலவே எல்லா வீடுகளிலுமே இதனைச் சமைப்பார்கள் என்றுதான் சிறு வயதில் நான் எண்ணியுமிருந்தேன். ஆனால் பின்னாட்களில் முக்குழி அப்பம் என்ற பெயரையே பலரும் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றறிந்தபோது ஆச்சரியமே மேலிட்டது. அம்மாவிடமே கேட்டேன்.

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

என் தலைக்கு மேல் சரக்கொன்றை

டெல்சுலா ஆவ் எழுதிய Laburnum For My Head என்கின்ற ஆங்கில நூலை எம். ஏ. சுசீலா தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். டெம்சுலா அசாமில் பிறந்த நாகர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இந்திய உபகண்டத்தின் அசாம், நாகாலாந்து போன்ற வடகிழக்குப் பிராந்தியங்களின் காடும் மலையும் சூழ்ந்த நிலத்துக் குடிகளின் பல்வேறு வாழ்வுச் சிக்கல்களையும் போராட்டங்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பின் எல்லைகளுக்குள் நின்று பேசக்கூடிய புத்தகம் இந்த ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. தொகுப்பின் முதற் சிறுகதை ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. கொன்றை மரங்களை வீட்டில் வளர்க்க முயன்று தோற்றுப்போன ஒரு வயதான பெண்மணி ஈற்றில் தனக்கான கல்லறையை அவரே இயற்கையாக வடிவமைத்து அங்குக் கொன்றைகளை நடுவதற்கு முயற்சி எடுக்கிறார். அவரது மரணத்துக்குப் பின்னர் அவர் விரும்பியதுபோலவே கல்லறை இயற்கையாக அமைக்கப்பட்டுக் கொன்றை மரங்களும் அங்கு வளர்ந்து பூத்து நின்றன என்று கதை முடிகிறது. மரணத்துக்குப் பின்னரும் தான் எப்படி நினைவுகூரப்படவேண்டும் என்று தீர்க்கமாக வேலை பார்க்கும் ஒரு பெண்மணியின் கதை ஒரு ஆதாரம். கற்களாலும் சீமெந்தினாலும் கல்லறை அமைத்து மரணத்தை வெல்ல மனிதர்க...